சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Friday, August 30, 2019


பாறுக் ஷிஹான்


கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்  விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து  புதன்கிழமை (28) இரவு  10.30 மணியவில் சேனைகுடியிருப்பு துரேந்தியமேடு பிரதேச வீதியில்   இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிச்சென்று மதகுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்ததை தொடர்ந்து, கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

 இதில் சேனைக்குடியிருப்பு காமாச்சி வீதியை  சேர்ந்த அருளானந்தம் கரன் (19) மற்றும் சேனைக்குடியிருப்பு  மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி  தனுசியன் (30) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
READ MORE | comments

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு


எம்.ஐ.சர்ஜூன்


பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்றும் இன்றும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு அமைய, கிழக்கு பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் நடாத்திய ஆர்ப்பாட்ட நிகழ்வு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாக முன்றலில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் மற்றும் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக ஊழியர்கள் அத்துடன் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர்.

சம்பள முரண்பாடுகளை நீக்குதல், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து 2019.07.30ஆம் திகதியன்று ஒரு நாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்த போதிலும் உரிய தீர்வுகளை அரசாங்கம் வழங்கத் தவறியதையடுத்து இந்த இருநாள் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இன்றைய நாள், அந்ததந்த பல்கலைக்கழகங்களில் ஆர்பாட்ட நிகழ்வுகள் நடைபெறுவதுடன் நாடெங்கிலும் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்கள் கலந்து கொள்ளும் பாரிய ஆர்பாட்டத்தை நாளை உயர்கல்வி அமைச்சின் முன்னால் நடாத்த பல்கலைக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு தயாராகி வருகின்றது.

இந்த இருநாள் பணி பகிஷ்கரிப்புக்கும் தீர்வுகள் வழங்காது அரசாங்கம் கால தாமதிப்புச் செய்யுமாயின் நாடளாவிய ரீதியில் உள்ள 16000 பல்கலைக்கழக ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்காலத்தில் தொடர் பணிப் புறக்கணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்தும் பல்கலைக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு கலந்தாலோசித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. 2020 ஜனவரியில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அடிப்படை சம்பளத்தை 2015 டிசம்பர் அடிப்படைச் சம்பளத்தின் 107% ஆல் அதிகரிக்க தேவையான சுற்றுநிருபத்தை வெளியிடல்.

2. 45% மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பவை 75% வரை உயர்த்துவதற்கு அவசியமான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.

3. பல்கலைக்கழக முறைமைக்கு செலுத்தப்படுகின்ற ஓய்வூதியத்தை பயனுள்ளதாக தயாரித்துக் கொள்ளல்.

4. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித் தேர்ச்சி கொடுப்பனவை செலுத்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.

5. அனைத்து பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் பொதுக் காப்புறுதி முறையொன்றை நடைமுறைப்படுத்தல்.

6. கொடுப்பனவுகள் மற்றும் சகல கடன் எல்லைகளையும் அதிகரித்தல்.

7. கல்விசாரா ஊழியர்களை நேரடியாக பாதித்துள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு நடைமுறையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல் மற்றும் ஊழியர் எண்ணிக்கை அறிக்கையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல்.

8. உதவிச் செயலாளர்/உதவிப் பதிவாளர்/உதவி கணக்காளர்/உதவி நிதியாளர் மற்றும் உதவி உள்ளக கணக்காய்வாளரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறையை திருத்தியமைத்து வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை இரத்துச் செய்து முன்னர் காணப்பட்ட வழிமுறைக்கேற்ப மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவென சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.

9. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் 876ம் இலக்க சுற்றுநிருபத்தை இல்லாதொழித்து நாடு பூராகவும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி பல்கலைக்கழக முறைமையின் மேம்படுத்தலுக்காக ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுத்தல்.

10. கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சேர்க்கும்போது முன்னுரிமையை பெற்றுக்கொள்ளல்.

11. கல்விசாரா ஊழியர்கள் என்ற பதத்தினை மாற்றுதல்.

ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த பணிபகிஷ்கரிப்பு நடைபெறுகின்றமை கவனத்திற் கொள்ளத் தக்கது.












READ MORE | comments

அமேசன் காட்டுத்தீ தொடர்பில் நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

அமேசன் மழைக்காட்டில் தொடர்ந்தும் பரவி வரும் தீயில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைட் பொலிவியா மற்றும் பிரேசில் பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் பரவியுள்ளது என நாசா எச்சரித்துள்ளது.
அமேசன் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகை செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொலிவியா மற்றும் பிரேசில் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைட் கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதை வளிமண்டல அகசிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை 18,000 அடி உயரத்தில் கார்பன் மோனாக்சைட் எந்த அளவுக்கு அடர்த்தியாக கலந்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளாக நாளாக கார்பன் மோனாக்சைட் கலந்துள்ள மேகங்கள் அமேசன் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கின்றது. இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் இது பரவியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க பகுதியிலுள்ள காடுகளும் தீப் பற்றி எரிந்துவருகிறது
எனினும் நாசா வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை நிறத்தில் காணப்படுவது கார்பன் மோனாக்சைடின் அடர்த்தியாகும். ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோனாக்சைட் நீண்ட தூரங்களுக்கு சென்றுக் கொண்டியிருக்கும். கார்பன் மோனாக்சைட் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். காற்றை மாசுப்படுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவநிலை மாற்றத்தையும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாயுவை லேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். அதேநேரம் அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது மரணிக்கும் நிலைக்கோ செல்லும் வாய்ப்புள்ளது. இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.
உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக தீப் பற்றி எரிந்துவருகின்றன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது மக்களை பெரும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரத்தை பிரேசில் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாத நிலையில், உலக நாடுகளின் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து தற்போது தீயை அணைப்பதற்கான முயற்சியை பிரேசில் மேற்கொண்டுள்ளது.
ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசன் காடுகளின் தீயை அணைப்பதற்கு 22 மில்லியன் அமெரிக்கா டொலர் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. எனினும் அந்த உதவியை பிரேசில் மறுத்துவிட்டதுடன் நிதியை ஏற்க சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
நாசா வெளியிட்டுள்ள ஒளிப்படம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பில் பெரும் அசம்பாவிதத்தை தடுத்த மிகப் பெரும் முக்கிய மனிதர்



மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்து சிதறிய காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடற் பாகங்கள் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்து மயானத்தில் ரகசியமாக புதைக்கப்பட்டது.
இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் கடந்த 27ஆம் திகதி மாலை இந்த விடயம் தொடர்பில் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டதால் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத அரசியல்வாதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களுக்கு பலத்த அசௌகரியம் ஏற்பட்டிருந்தது.
இந்த விவகாரங்களையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச சட்டவாதி சக்கரவர்த்தி யாதவன் அவசர மனுவாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் முன்னிலையில் முன்னறிவித்தல் மனுவை தாக்கல் செய்தார்.
புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை உடன் தோண்டி எடுக்க வேண்டும் என முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்து உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமூக அமைதியின்மையை தடுக்கவும், இந்த சம்பவத்தை வைத்து மேற்கொள்ளப்படும் சமூக சீர்குழைவை தடுப்பதற்கும் உடன் உடற் பாகங்களை தோண்டி எடுத்து பொறுத்தமான இடத்தில் புதைப்பதற்கு அவசர கட்டளை பிறப்பிக்குமாறு அரச சட்டவாதி சக்கரவர்த்தி யாதவன் முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்தே குறித்த உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க அரச அதிபருக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஒட்டு மொத்தத்தில் சமூக நலன் கருதி அரச சட்டவாதி மிக புத்திசாதுர்யமாக செயற்பட்டதால் மட்டக்களப்பில் சிலர் ஏற்படுத்த தயாராக இருந்த சமூக அமைதியின்னை தடுக்கப்பட்டுள்ளதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எவ்வளவு பெரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்த தரப்பினர் நீதிமன்றத்தை நாடி மேற்படி விடயம் தொடர்பான ஒரு அவசர மனுவை தாக்கல் செய்யாதமை வேதனையளிக்கிறது.
அத்துடன், சட்டத்தரணிகள் இந்த விடயத்தில் சட்ட நுணுக்கங்களை மிகவும் ஆழமாக பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர்கள் மௌனம் காத்தமை வேதனையை தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடற்பாகங்கள்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட காத்தான்குடி தற்கொலை குண்டு தாரியின் உடல் பாகங்களை மீள் தோன்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 26 திகதி மாலை இரகசியமாக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடலை அடக்கம் செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய புதைக்கப்பட்ட உடல் பாகங்களை இன்று மாலை 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றதினால் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதி அரசாங்க அதிபரை கடுமையாக சாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை எனவே அரசாங்க அதிபர் செய்த தவறே இந்த பிரச்சனைக்கு காரணம் என நீதிபதி கூறியுள்ளார்.

இதே நேரம் ஆர்ப்பாட்டத்தை தூண்டினார்கள் என்று பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மாநகர சபை உறுப்பினர் செல்வி சுசிலா உள்ளிட்ட ஐவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

READ MORE | comments

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவின் திறப்புவிழா

Thursday, August 29, 2019

( நூருள் ஹுதா உமர்.)
நான் முஸ்லிம் என்பதால் என்னை இனவாதியாக சித்தரித்து என்னைப்பற்றிய பல பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது. நான் இனவாதம் பாராமல் நாடுமுழுவதும் பல மில்லியன் கணக்கான சேவைகளை செய்துவருபவன். என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.



கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிடத்தை இன்று (29) காலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அங்கு கௌரவ அதிதியாக கலந்து கொண்ட சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தனது உரையில் மேலும்,

தோற்றா நோய்கள் வராமல் தடுக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜித அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டவர். ஏழைகளின் பல துயரங்களுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் பல சுகாதார திட்டங்களை வகுத்து செயலாற்றும் ஆற்றல் கொண்டவர். ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இனவாதமாக என்னை சிலர் நோக்குகின்றனர். நான் இனவாதி அல்ல. என்னை தேடிவந்து உதவி கேட்போருக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன். செய்ய காத்துக்கொண்டிருக்கிறேன். நான் நாடு முழுவதும் இனவாதம், மதவாதம் பாராமல் பல சேவைகளை செய்துள்ளேன்.
இந்த வைத்தியசாலையில் பல குறைபாடுகள் உள்ளதை நான் நன்றாக அறிவேன். உங்களின் கோரிக்கைகளுக்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். சுகாதாரம் மதமற்ற ஒன்று. இனவாதமாக இங்கு யாரும் செயலாற்ற முடியாது. வைத்தியதுறை சார்ந்த நாங்கள் இனவாதம் பாராமல்  இலங்கையர்களாக சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் மனகசப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ மனதார விரும்புவன் நான். வேற்றுமை  துயரம் நீங்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து இலங்கையர்களாக வாழ வேண்டும் என்று பிராத்திக்கிறேன் என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் சுகாதார அமைச்சர் பீ. தயாரத்ன, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




READ MORE | comments

ஜனாதிபதி தேர்தலினூடாக ஹிஸ்புல்லாஹ் சாதிக்கப் போவதென்ன?


(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.)
ஜனாதிபதி தேர்தல் களம் வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு சூடேற ஆரம்பித்துள்ளது. பெரிய தேசிய கட்சிகள், தங்களது வெற்றியை நோக்கி காய்களை நகர்த்துகின்றன. ஏனைய சிறிய கட்சிகளும், தனி நபர்களும் எங்கு சென்றால், எதைச் செய்தால் சாதிக்க முடியுமோ அவற்றை செய்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க சிந்திப்பதாக ஊர்ஜிதமான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இதனை ஒரு புரளியாக கடந்து சென்றாலும், இனியும் அவ்வாறு கடந்து செல்ல முடியாதளவு, அச் செய்தி உறுதியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சார்பாக ஒருவர் களமிறங்க வேண்டும். யாரும் முன்வராவிட்டால், தான் தயாராகவுள்ளேன் என்பதே ஹிஸ்புல்லாஹ்வின் நிலைப்பாடு. இதனை தெளிவாக விளங்கினால் தான், அவரின் இந் நிலைப்பாடு தொடர்பான விமர்சன பார்வைக்குள் நுழைய முடியும்.

ஏன் இவ்வாறு ஹிஸ்புல்லாஹ் சிந்திக்கின்றார் எனும் வினாவுக்கு, அவர் ஜனாதியாகத் தான் இவ்வாறு சிந்திக்கின்றார் எனும் பதிலை தவிர்த்து, வேறு வகையில் சிந்தனையை அமைப்பதே பொருத்தமானது. அதிலும் இதற்கான மிகப் பொருத்தமான பதிலை பெற மொட்டுவுடனும், கையுடனும் தொடர்பு படுத்திய சிந்தனைகள் மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஹிஸ்புல்லாஹ் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவரின் இந்த அறிவிப்பை அவ்வளவு சாதாரண கோணத்திலும் நோக்க முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வின் தெரிவாக மொட்டு அல்லது கை அமையும் ( தேர்தல் கேட்காமல் இருந்தால் ). இவ்விரண்டில், அவர் தற்போது எப் பக்கம் என்ற வினாவை அவரிடம் கேட்டால், அவரே குழம்பிவிடுவார். ஒரு பிள்ளையிடம் சென்று உம்மாவுடன் சாப்பிடுவதா, வாப்பாவுடன் சாப்பிடுவதா எனக் கேட்டால், என்ன பதில் சொல்லும்..? தனித்து கேட்டால்...? தனித்து கேட்பதாக செய்தியொன்றை பரப்பினால்..? யாருமே ஒன்றும் கேட்க மாட்டார்கள். இது தொடர்பான நிகழ்வுகளுக்கு அழைக்கவுமாட்டார்கள். இலகுவாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளித்து விடலாம். இன்னும் சு.க ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கவில்லை. அமைச்சர் சஜிதோடும் உறவு வைத்துள்ளது. மறுபக்கம் மொட்டையும் நுகர்ந்து பார்க்கின்றது. மொட்டுவோ கோட்டோவை நிறுத்தியுள்ளது. இந்த பூகம்பத்துக்குள் சிக்கி தத்தளிப்பதை தவிர்க்கும் உத்தியாக இதனை ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் பலரின் உள்ளங்களை ஆட்கொண்டுள்ளது.

ஒருவர் ஒரு விடயத்தை சாதிக்க அதனோடு தொடர்புடைய நபர்களை முதலில் தன்னோடு ஒன்றிணைப்பார். இவ்வாறான அனுகுமுறைகளின் மூலமும் ஒருவர் எவ்வாறான சிந்தனையுடன் ஒரு செயலை முன்னெடுக்கின்றார் என்பதை ஓரளவு மட்டிட்டுக்கொள்ள முடியும். அந்த வகையில், இவ்விடயத்தில் ஹிஸ்புல்லாஹ் உளச்சுத்தியோடு செயற்படுபவராக இருந்தால், இலங்கை முஸ்லிம் அரசியலில் அதிக தாக்கம் செலுத்தக் கூடிய மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகளுடன் முதலில் உடன்பாட்டு அணுகுமுறையில் பேசியிருப்பார். ஆனால், அவர் பேசியதோ ஐக்கிய சமாதான கூட்டமைப்போடு. இவர்கள் மொட்டின் மனத்தில் மயங்கியவர்கள். இவர்களோடு ஹிஸ்புல்லாஹ் ஆரம்ப பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் என்றால், அது நிச்சயமாக மொட்டின் வெற்றியை நோக்கிய ஒரு காய் நகர்த்தலாகவே நோக்க முடியும்.

அதில் அப்படி என்னவுள்ளது? ஹிஸ்புல்லாஹ்வுக்கு மக்கள் வாக்களிக்க விரும்பினாலும், கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே வாக்களிப்பர். இது மஹிந்த அணியினருக்கு நன்றாகவே தெரியும். அது ஹிஸ்புல்லாஹ் முன்னின்று பிரச்சாரம் செய்தாலும் கூட. இவ்வாறான நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதை அடிப்படையாக கொண்டு காய் நகர்த்துவதை விட, முஸ்லிம்களின் வாக்குகளை வேறு திசை நோக்கி திருப்பினால், அது மொட்டுவின் வெற்றியை சாதகமாக்கும். இதனை கணித வீத முறையில் அறிந்துகொள்ளும் போது, இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். கடந்த முறை ஐ.தே.கவின் வெற்றியில் மிகப் பெரும் பங்களிப்பை செய்தது முஸ்லிம்களின் வாக்குகளேயாகும். அதனை இம்முறை தடுத்தாலே போதுமானதாகும். இரண்டாம் தெரிவு வாக்களிப்பு முறையில் இலங்கை மக்கள் பரீட்சயமற்றவர்கள். அது எந்தளவு இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் தாக்கம் செலுத்தும் என்பதை உறுதிபட குறிப்பிட முடியாது. 

அண்மையில் நடந்தேறிய குண்டு வெடிப்பின் பிறகு ஹிஸ்புல்லாஹ் மீது பெரும்பான்மை சமூகம் ஒருவிதமான சந்தேக பார்வையை கொண்டுள்ளது. இந் நிலையில் அவர் எப் பக்கம் ஆதரவு வழங்குகிறாரோ அப் பக்கமுள்ள பேரின மக்களின் வாக்குகள் குறைவடைய வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இம் முறை மஹிந்த அணியினர் பேரின மக்களிடையே வாக்கு சேகரிக்கும் பிரதான பேசி பொருளாக அண்மையில் நடந்தேறிய குண்டு வெடிப்பு காணப்படும். இதனை ஹிஸ்புல்லாஹ்வை அருகாமையில் வைத்துக்கொண்டு பேச முடியாது. அவர் தனித்து கேட்டால்...?

ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்து, பதவி துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரின் வெற்றியை உறுதி செய்ய முடியாது. தனது பலத்தை வெளிப்படுத்தி ஆளுநர் பதவியைப் போன்ற பதவியை பெறும் நோக்கிலும் இவ்வாறானதொரு காய் நகர்த்தலை செய்யலாம். இவ்வாறான விடயங்களை நன்கு ஆராய்கின்ற ஒருவர், இச் செயலினூடாக ஹிஸ்புல்லாஹ் மைத்திரி அணியினரை திருப்தி படுத்துவதையும், மொட்டுவின் வெற்றியை சாதகமாக்குவதையும், தன் சுய பலத்தை நிரூபிக்க முடியுமென்பதையும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறானவைகளை கருத்தில் கொண்டதே ஹிஸ்புல்லாஹ்வின் இச் சிந்தனையென கூறலாம்.

ஹிஸ்புல்லாஹ்வை தேர்தல் கேட்க வேண்டாமென கூற யாருக்கும் உரிமையில்லை. அவர், தனது சுய நலத்தை முன்னிறுத்திய ஒரு செயலுக்கு, முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தியதான சாயம் பூச முற்படுவது நல்லதல்ல.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

READ MORE | comments

வடக்கு, கிழக்கில் சேதமான இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



இதற்கமைவாக இந்த புனரமைப்பு பணிகள் தேசியக் கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனரமைப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 200மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் விசேட ஒதுக்கீடுடன் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை பெற்று மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் சேதமான இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Rating: 4.5
Diposkan Oleh:
Sayan
READ MORE | comments

திருகோணமலையில் இளைஞன் கழுத்து வெட்டி கொலை! தாயாரை எச்சரித்த நீதிபதி!

திருகோணமலை-கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி திருகோணமலை கடற்படை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒருவருடைய கழுத்தை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் டேனியல் என்பவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பிணை கோரி திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டத்தரணி தனுஷ்க மெதகெதர ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டு நேற்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்டு குறித்த வழக்கில் அனைத்து விடயங்களையும் பரிசீலனை செய்த போது இது ஒரு திட்டமிட்டு பயங்கரமாக மேற்கொள்ளப்பட்ட கொலை என நீதிபதி கூறினார்.
இலங்கை மாத்திரமில்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்கும் மக்களின் மனதை இருலடிக்கக்கூடியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமானமற்ற கொலை எனவும் குறித்த சந்தேக நபரின் தாயிடம் நீதிபதி கூறி எச்சரிக்கை செய்து குறித்த பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த இந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சரியான அணுகு முறையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததோடு இது ஒரு பகிரங்கமான கொலை எனவும் இக்கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி பகிரங்கமாக எச்சரித்தார்.
என்னவெனில் இறந்தவரும் சந்தேக நபரும் நெருங்கிய நண்பர்கள் அந்த சந்தேக நபரை காதலித்த யுவதி பின்னர் அவரை பிரிந்து இறந்தவரை காதலிக்க தொடங்கியதன் காரணமாக சந்தேகநபர் வஞ்சம் தீர்க்கும் நோக்கில் இறந்த தங்கதுரை தனுஷ் என்பவரை மோட்டார் சைக்கிளை எடுத்து வருமாறு கூறி சந்தேகநபர் கத்தி ஒன்றை தமது உடலில் மறைத்து வைத்துசென்றுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் திருகோணமலை கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தமது உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார். கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்தத்துடன் ஓடிவந்து கடற்படை முகாமுக்கு முன்னால் அமைந்திருக்கும் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியிடம் தன்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி அதனையும் பொருட்படுத்தாது ஓடிவிட்டார். இது அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உலகம் பூராகவும் பரப்பப்பட்டது. காயப்பட்டவருக்கு முச்சக்கரவண்டி சாரதி உதவியிருக்க முடியும். ஆனால் அந்த நேரம் அவர் உதவி செய்யவில்லை. உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவரை காபாற்றியிருக்கலாம்.
எனவே நேற்றைய தினம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற நீதிபதி இது ஒரு மனித நேயமற்ற செயல் என முச்சக்கர வண்டியின் சாரதி பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் நடை பெறவில்லை எனவும் கூறி குறித்து பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.
READ MORE | comments

ரவி கருணாநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடி வழக்கில் தவறான சாட்சியம் வழங்கியமைக்காக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், ரவி கருணாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முழுமையற்ற ஒரு அறிக்கையை தெரிவித்ததாகவும், பின்னர் மேலதிக தகவலுக்காக அவரை மீண்டும் அழைத்த போது, அவர் சமூகம் தர மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசாரணைகளை முடிக்க முடியாமல் இருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் தமிழகத்தில் வள்ளி அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்

Monday, August 26, 2019

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தமிழகத்தில் வள்ளி என்ற பெண்ணொருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும், அதிலும் குறிப்பாக இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையிலேயே இலங்கைக்கு கடத்துவதற்காக கைத்துப்பாக்கி மற்றும் 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வள்ளி சிக்கியுள்ளார்.
வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அங்கு உள்ளதா என்பதை அறிய மேலும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வள்ளி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மண்டபம் யூனியன் உச்சிப்புளி பகுதியில் கடலோர கிராமமான பிரப்பன்வலசையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கடந்த இரு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்தார்.
திருட்டு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான சந்தேகநபரான பூமிநாதன் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே வள்ளி தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
ஏற்கனவே திருமணமான பூமிநாதன், பிரப்பன்வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வள்ளியுடன் (42) கடந்த சில ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்துடன், பூமிநாதனுக்கு கோவையை சேர்ந்த 3 பேர் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொடுத்ததாகவும், அவர் அதனை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கடத்துவதற்காக வள்ளியின் வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
READ MORE | comments

இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் வெளிவந்த செய்தி

இலங்கையில் புதிய வாகனங்களின் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜுன் மாதம் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளே இடம்பெற்றிருந்த நிலையில், ஜுலை மாதம் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி கடந்த ஜுலை மாதம் மொத்தமாக 2,584 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஜுலை மாதம் மொத்தமாக 7,162 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பதவியிலிருந்து விலகுகிறாரா கரு? வெளியானது அறிக்கை

சபாநாயகர் பதவியை தான், இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் கரு ஜயசூரிய இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.
அத்துடன், சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கரு ஜயசூரியவுக்கு எவ்விதமான காரணங்களும் இல்லை என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவை சிக்கலுக்கு உள்ளாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் குழுவினரினால் இவ்வாறான போலியான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என, சாபாநாயகர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அந்த சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
READ MORE | comments

மீன் பிடித்து விட்டு கரைக்கு வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி


பொத்துவில் களப்புக்கட்டு பிரதேசத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் 81 மி.மீட்டர் மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் ஏதோ சிக்கியிருப்பது அறிந்த மீனவர்கள் கரைக்கு திரும்பிய பின் வலையை பரிசோதித்துள்ளனர்.
அப்போது தான் கறுப்பு நிற பொலித்தீனால் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
READ MORE | comments

அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவோர் 10 வருட விபரத்தை சமர்ப்பித்தால் போதும்


அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவோர் தாம் ஓய்வு பெறுவதற்கு முன் உள்ள பத்து வருட காலத்திற்குரிய ஓய்வூதிய பங்களிப்பு தொடர்பான விபரங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது என ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம், பொது நிருவாக அமைச்சு மற்றும் தொழிற் சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.


இவ்விணக்கப்பாட்டின் அடிப்படையில் ஏற்கனவே ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை இரத்துச் செய்து புதிய சுற்று நிருபம் வெளியிடப்படுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


அரச நியமனம் பெற்ற நாள் முதல் ஓய்வு பெறும் வரையான முழுக் காலப் பகுதிக்கும் செலுத்தப்பட்ட ஓய்வூதிய பங்களிப்பு விபரத்தை ஓய்வுபெறும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் ஓய்வூதிய திணைக்களம் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. மேற்படி சுற்று நிருபம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல அரச ஊழியர்கள் கூடுதலாக பாதிக்கப்படுவதுடன் தமது ஓய்வூதியங்களை உரிய வேளைக்கு பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தமது கடுமையான ஆட்சேபனையை மேற்படி திணைக்களத்திற்கு தெரிவித்திருந்தனர்.


யுத்தம், சுனாமி, இடம்பெயர்வு காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோரின் விபரங்களை பெற முடியாத நிலையில் ஓய்வூதிய திணைக்கள சுற்று நிருபம் வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தன.


இந்த சூழ்நிலையில் எமது கோரிக்கையில் உள்ள நியாயங்களை உணர்ந்து ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகளும், பொதுநிருவாக அமைச்சும் ஓய்வுக்கு முன்னரான பத்து வருட விபரம் சமர்ப்பிக்கப்பட்டால் போதுமானது என எடுக்கப்பட்ட தீர்மானம் வரவேற்புக்குரியது என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல். முஹம்மட் முக்தார் தெரிவித்தார்.
READ MORE | comments

யாழ்ப்பாண மக்களுக்கு காலடியில் வந்துள்ள விமானப்பயணம்: ஒக்டோபர் 15 இல் திறக்கப்படுகிறது!

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15 ம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளது.இந்த திறப்பு விழாவுக்குப் பின்னர் இந்தியாவுக்கான பிராந்திய விமான சேவைகள் ஆரம்பமாகும் எம பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்றையதினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் விமான நிலையத்தில் கட்டுமான முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
முப்பது வீதத்திற்கும் அதிகமான கட்டுமான நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் இதுவரை முடிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், தேசிய நீர் வழங்கல் சபையின் நீர்விநியோகம் விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நீர் வழங்கலைப் பெறுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, இந்த பிரச்சினையை தீர்க்க கடற்படையின் உதவியுடன் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாக கடல் நீரைப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் பரிந்துரைத்திருந்தார்.
விமான நிலையத்தில் சுங்க, குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.
உள்நாட்டு விமான நிலையம் இரண்டு கட்டங்களாக சர்வதேச விமான நிலையமாக ரூ .2.2 பில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது, முதல் கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
READ MORE | comments

அமேசான் காட்டுத் தீயில் இறந்த குட்டிக்காக அழும் குரங்கு? : உண்மை நிலவரம் என்ன ?

Sunday, August 25, 2019

அமேசான் காட்டில் வாழும் அரியவகை உயிரினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார்.
இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர்.
அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமுலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தீயில் சிக்கி இறந்த தன் குட்டி குரங்கை, தாய் குரங்கு தனது மார்பில் போட்டு கட்டியணைத்து கதறி அழுகின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகின்றது.இந்தக் காட்சியை காண்போர் நெஞ்சில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பற்றி வெளியான தகவல் ; கடந்த 2017 ஆம் ஆண்டு அவினாஷ் லோதியாவில் இப்புகைப்படம் எடுக்கபட்டுள்ளது. ஜபால்புரி இந்தக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவினாஷ் கூறியுள்ளதாவது : என் இதயத்துக்கு மிக நெருக்கமான படம் இது. இந்த புகைபடத்தில் உள்ள குட்டிக் குரங்கு மயங்கம் அடைந்த நிலையில் இதைப் பார்த்த தாய் குரங்கு, இறந்ததாக நினைத்து கதறி அழுததாகக் கூறியுள்ளார்.
READ MORE | comments

கல்முனை பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்


மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் நம்பகரமான வேட்பாளர் என குறிப்பிட்டு நேற்று மாலை கல்முனை நகரப்பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் இவ்வாறு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


இச்சுவரொட்டிகள் யாவும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




READ MORE | comments

மட்டக்களப்பு - கல்லாற்று மாணவன் லண்டனில் சாதனை


(ஜெ.ஜெய்ஷிகன்)

லண்டன் சென்.இக்னேசியஸ் கல்லூரியில் முதலாம் தரம் தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்று கணிதப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய கல்லாற்று மாணவன் காறுஜன் 2A*, 1A சித்திகளைப் பெற்று இலங்கைத் திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான்.

2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் கடந்த 15.08.2019ஆம் திகதி லண்டனில் வெளியாகியது. குறித்த மாணவன் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்து தற்போது கேம்பிறிட் பல்கலைக்கழகத்தில் பொறியியல்(M.Eng) துறையில் பட்டப்படிப்பை மேற் கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் ஜெயசீலன் மற்றும் முன்னாள் தாதிய உத்தியோகத்தர் சாந்தினி யூலியானா தம்பதிகளின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
மட்டக்களப்பு - கல்லாற்று மாணவன் லண்டனில் சாதனை

Rating: 4.5
Diposkan Oleh:
Team New
READ MORE | comments

மோடியுடன் முக்கிய பேச்சு நடத்த அடுத்த வாரங்களில் டில்லி பறக்கின்றது கூட்டமைப்பு!


தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடில்லிக்குப் பயணமாகவுள்ளது.
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம். எங்களைப் புதுடில்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். அடுத்து வரும் வாரங்களில் அந்தப் பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகின்றோம்.
தேசிய பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு புதுடில்லியிடம் வலியுறுத்துவோம்.

தேசிய பிரச்சினைக்கு இலங்கை இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து நாங்கள் புதுடில்லியுடன் கலந்துரையாடுவோம்.
இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் – பேச்சுகளுக்கு உதவிய நாடுகளுக்கும் இலங்கை அரசால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இப்போதைய சூழலில், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் உணர வைக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கிழக்கில் தடம் மாறும் அரசியல் கட்சிகளும், தடுமாறும் தலைவர்களும்!!

இலங்கையின் அரசியல் களத்தில் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகளின் அரசியல் போக்கு குறித்த விமர்சனங்களும் புதிய அரசியல் கட்சிகளின் உருவாக்க முயற்சிகளும் காலத்துக்கு காலம் நடைபெற்றே வருகிறது.
கிழக்கில் இருந்து கிழக்கு தமிழர்களின் பூர்விகத்தை கொண்ட அரசியல் கட்சி ஒன்றை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்ற பிரயத்தனத்தில் புலம்பெயர் தமிழர்கள் உட்பட பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அனைத்து முயற்சிகளும் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறிய கதையாகத்தான் முடிந்துள்ளது.
போராட்ட இயக்கங்களின் அரசியல் பிரவேசம்!
தென்னிலங்கையில் ஆயுதம் தூக்கி போராடிய மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன்று இலங்கயின் அரசியல் களத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
அதுவும் போராட்ட அமைப்பு ஒன்று தனித்து நின்று தனக்கான மக்கள் செல்வாக்கை ஜனநாயக களத்தில் இந்த அளவுக்கு பெற்றுள்ளது என்றால் அது அவர்களது ஊழல்கள் அற்ற மக்கள் உரிமை செயற்பாட்டிற்கு கிடைத்த வெற்றி.
இன்று இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் வளர்ந்து நிற்கின்றார்கள்.
ஆனால் கிழக்கில் போராட்ட களத்தில் இருந்து வந்த அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியவில்லை. என்றால் அதற்கு காரணம் என்ன?
தமிழ் மக்களுக்காக போராடப் போன பல போராட்ட அமைப்புக்களும் போராடப் போன நோக்கத்தில் இருந்து தடம்மாறிப்போனதோடு அவர்கள் தங்களையும் தாங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாத்து கொள்வதற்கே அரசியல் கட்சிகளாக உருவெடுத்தனர். இதனால் அவர்கள் செயற்பாட்டு அரசியலை விட காலத்துக்கு காலம் தஞ்சம் அடையும் அரசியலையே மேற்கொண்டு வந்தனர் இதனால் அவர்களால் தமிழ் மக்களுக்கு காட்டி கொடுப்புக்களையும் கொலை கலாசாரத்தையுமே அதிகமாக மேற்கொள்ள முடிந்தது.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணி சிங்கள பாமர மக்களுடன் மக்களாக பயணிக்கிறது.
ஏழை மக்களின் பிள்ளை பிறப்பு முதல் கொண்டு இறப்பின் இறுதி சடங்கு வரை மக்களுடன் மக்களாக நின்று செயற்பட்டு வருகின்றனர். இது அவர்களை மக்கள் மத்தியில் உயர்த்தி உள்ளது.

தடம் மாறும் கட்சிகள்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் வடக்கில் இருந்து எடுக்கப்படுவதாக கூறும் கிழக்கு அரசியல் கட்சிகள் தங்களது கட்சி தீர்மானங்கள் கொழும்பில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை மறந்து விடுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை இதுவரை ஜனநாயக களத்தில் இருந்து தன்னெழுச்சியாக ஒரு கட்சி உருவாகவில்லை என்பதுதான் உண்மை.
அதனை உருவாக்க யாரும் இப்போதைக்கு விடமாட்டார்கள்.
கிழக்கில் உள்ள தலைவர்கள் ஒன்று யாழ்ப்பாணத்தையோ அல்லது கொழும்பையோ அல்லது இந்தியாவை நம்பியே அரசியல் கட்சிகளை உருவாக்குகின்றனர்.
அவர்கள் அவர்களது நிகழ்ச்சி நிரல்களுக்கே செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. காரணம் கிழக்கு தலைவர்கள் அரசியலில் இலாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் அவர்கள் கிழக்கு மக்களுக்காக கட்சி ஆரம்பிப்பது இல்லை தாங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் அதில் இலாபம் அடைய வேண்டும் என்பதற்காகவும் தான் கட்சி தொடங்குகிறார்கள். அதில் நட்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் அரசியலில் தோல்வி அடையக்கூடாது என்பதற்காகவும் சேரக் கூடாத இடம் சேர்ந்து கிழக்கு மக்களுக்கு துரோகம் செய்து விடுகின்றனர். கேட்டால் மக்களுக்காகவே அவர்களுடன் சேர்ந்தோம் இவர்களுடன் சேர்ந்தோம் என்று கூறுகின்றனர்.
கிழக்கை பொறுத்தவரை இருக்கின்ற காட்சிகள் எல்லாம் எங்கிருந்தோ இயக்கப்படுகிறதே தவிர அது தங்களது மக்களால் இயக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.
அந்த வகையில் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்து தமிழ் மக்களின் வாக்கு வங்கியை கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது தீர்மானிக்கும் சக்தியை ஜனநாயக களத்தில் இன்று வரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் தடுமாறியே வருகிறது.
காரணம் அது கிழக்கு யுத்த களத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் போர் கைதி? அது இலங்கை இந்திய புலனாய்வு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதனால் தன்னிச்சையாக செயல்படுவது முடியாத காரியம்.
இதன் அடிப்படையிலேயே அதன் தலைவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற விடுதலைப் புலி போராளி இலங்கையின் ஆயுதப் போராட்டத்திலும், அதன் பின்னர் நடந்த புலனாய்வு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்ட கருவி அவரால் அப்போதும் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை இப்போதும் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்பதுதான் உண்மை.
பின்னர் அவர் தமிழ் தேசிய சிந்தனைக்கு எதிராக சிங்கள பேரினவாத சக்திகளால் வெற்றி கொள்ள முடியாத தமிழ் தேசிய ஒற்றுமையை உடைப்பதற்காக கிழக்கு அரசியலுக்குள் சிலரால் கொண்டுவரப்பட்டவரே சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவர்.
தற்போது அவர் அரசியலில் தன்னை வளர்த்துக் கொண்ட தலைவராக சிறையில் இருக்கிறார்.
அவரை நம்பி கிழக்கில் ஒரு அரசியல் களம் உருவாகி உள்ளது.
அவர் தற்போது சிறையில் இருப்பதும் அரசியல் காரணங்களுக்காகவே.
ஆனால் அவரிடம் இருக்கும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி காரணமாக அவரை இணைத்துக்கொள்ள பல தென்னிலங்கை கட்சிகள் முயற்சி செய்தாலும் நான் ஏற்கனவே கூறியதை போன்று அவர் தென்னிலங்கையில் உள்ள ஒரு கட்சிக்கு சோந்தக்கார் அதனால்தான் அவர் சிறையில் உள்ளார்.
அவரை தொடர்ந்தும் அந்த கட்சியே வழிநடத்தும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அவர்களது சூழ்நிலை அவ்வாறே உள்ளது இது இலங்கையில் இருந்த எல்லா தமிழ் ஆயுத குழுக்களுக்கும் இருந்த சூழ்நிலைதான்.
இன்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உள்ள பலர் இராணுவத்திடம் சம்பளம் பெறுகிறார்கள் என்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை யார் வழிநடத்துகிறார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சூழ்நிலைகளுக்குள் இருந்தே அவர்கள் அரசியல் செய்ய முடியும் அதை விடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிடம் இருந்து உரிமை அரசியல் தீர்வு சர்வதேச அரசியல் என பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் கிழக்கு அரசியலில் ஒரு துரும்புச் சீட்டாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கும் அதையும் தமிழர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை விட கிழக்கில் ஒரு அரசியல் கட்சிக்கான சிறந்த கட்டமைப்பை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவாக்கி வருகிறது இது ஏனைய தேசிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது உள்ள விமர்சனங்களை மிகச் சாதகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பயன்படுத்தி வருகிறது இதுவும் அந்த கட்சிக்கு ஆதரவாளர்களை இணைத்துக்கொள்ள சாதகமாக அமைந்ததுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் கிழக்கு மாகாண அரசியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்து சில தமிழ் கட்சிகள் அல்லது தமிழ் தலைமைகள் செயற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடுமாறும் தலைவர்கள்!
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல ஆளுமை உள்ள தலைவர்கள் உருவாகிய மாவட்டம் தமிழீழ விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாகவும் சரி பல திறமை வாய்ந்த தலைவர்களை உருவாக்கிய மாவட்டம்.
ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் உருவெடுக்கும் அரசியல் தலைவர்கள் தங்களது கொள்கைகளில் இருந்து தடம் மாறி கட்சி தாவல்களில் ஈடுபடுவது அரசியல் ஒழுக்க நெறிகளை மீறிய செயலாக உள்ளது.
அவர்கள் அரசியலை இலாப நட்டம் பார்க்கும் வியாபாரமாக மாற்றிவிடுகின்றனர்.
உலக ஒழுங்குகள், இலங்கையின் அரசியல் போக்கு தமிழ் மக்களின் நன்மை தீமைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய அரசியல் தலைவர்கள் மாறி மாறி பேரினவாதத்தின் வாய்களுக்குள்ளேயே விழுந்து விடுகின்றனர்.
தற்போது கிழக்கு கூட்டமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பும் அதில் உள்ள தலைவர்களும் புதிதாக எதையும் செய்துவிடப் போவதில்லை அவர்கள் பேரினவாத தலைவர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியுமே தவிர பேரம் பேசி எதையும் பெற்றுவிட முடியாது.
இதேபோல் தற்போது கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு பயன்படுத்தப்படுமே தவிர அவர்களினால் வேறு எதையும் செய்ய முடியாது.
எனவே கிரைக்கடைக்கு எதிர்கடை தேவை என்பது போல கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நேர் எதிரான அரசியல் கட்சி ஒன்றின் தேவை உண்டு அது தமிழ் தேசிய சிந்தனையில் இருந்து உருவாக வேண்டும் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கின்ற தமிழ் மக்களின் தீர்வு திட்டங்களுக்கு உரமிடுவதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
READ MORE | comments

பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி


அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வட்டி வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய, வார இறுதியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.24 ரூபாயாக பதிவாகியுள்ளது.
READ MORE | comments

இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை!

தனது ஆண் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சு வழங்கி அவர்களையும் கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ஆண் பிள்ளைகள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம், உடப்புவ, பள்ளிவாசல்பாடுவ பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தி் 31 வயதான தந்தையே இவ்வாறு விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.
உயிரிழந்த ஆண் பிள்ளைகளின் சடலங்கள் புத்தளம் பொது வைத்தியசாலையிலும் தந்தையின் சடலம் வீட்டு அறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |