Advertisement

Responsive Advertisement

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் தமிழகத்தில் வள்ளி அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தமிழகத்தில் வள்ளி என்ற பெண்ணொருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும், அதிலும் குறிப்பாக இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையிலேயே இலங்கைக்கு கடத்துவதற்காக கைத்துப்பாக்கி மற்றும் 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வள்ளி சிக்கியுள்ளார்.
வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அங்கு உள்ளதா என்பதை அறிய மேலும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வள்ளி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மண்டபம் யூனியன் உச்சிப்புளி பகுதியில் கடலோர கிராமமான பிரப்பன்வலசையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கடந்த இரு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்தார்.
திருட்டு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான சந்தேகநபரான பூமிநாதன் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே வள்ளி தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
ஏற்கனவே திருமணமான பூமிநாதன், பிரப்பன்வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வள்ளியுடன் (42) கடந்த சில ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்துடன், பூமிநாதனுக்கு கோவையை சேர்ந்த 3 பேர் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொடுத்ததாகவும், அவர் அதனை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கடத்துவதற்காக வள்ளியின் வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments