இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்ட மேலும் இருவர் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் 29 குழந்தைகளுக்கு கொரோனா சந்தேகம்? தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
இத்தாலியை ஆட்டிப்படைக்கும் கொரோனா! அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிகவும் அச்சுறுத்தலானது! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்திய நிபுணர்!
அடுத்துவரும் 30 நாட்கள் பெரும் சவாலானது! ட்ரப்ம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? 14 நாட்கள் தேவையில்லை வெறும் 15 நிமிடங்களே போதும்!
நாளைய தினமே இறுதி நாள்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே அவற்றினை கட்டுப்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
இன்று மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தற்போது நாட்டில் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. நாளை ஊரடங்கு தளர்த்தப்படும்போது மக்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு இருக்கின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை பல பகுதிகளாக பிரித்து வேறுவேறு இடங்களில் நடாத்துவதன் ஊடாக பொதுமக்கள் கூடுவதற்கான சந்தர்ப்பத்தினை குறைக்கமுடியும்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் வீதியோர வியாபாரங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக தடைவிதிக்கப்படுகின்றது.
இதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம் கொரோனா தொற்றுக்களை தடுக்கும் வகையில் இருக்கும் என நினைக்கின்றேன்.
பொதுமக்கள் இந்த முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். எங்களது அறிவுறுத்தல்களை ஏற்று மக்கள் செயற்படும்போது மட்டக்களப்பில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.
இதேவேளை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம்இ கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள பஸ் தரிப்பு நிலையங்கள், பொதுச்சந்தை கட்டிடத்தொகுதி போன்ற பொது இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று மத்தி பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடைக்கிடையே தளர்த்துவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் கொரோனாவின் ஆபத்து அதிகரிப்பதால் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஒழிப்பு தொடர்பில் சமூக இடைவௌி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
"தற்போதைய நிலைமையில் வீடுகளுக்குள் மக்கள் இருப்பதே நூறு வீதம் நல்லது. அப்போதுதான் கொரோனா வைரஸை இந்த நாட்டிலிருந்து விரட்டலாம். மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்றடைவதை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நூறு வீதம் உறுதிப்படுத்த வேண்டும்" எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
நாட்டில் அமுல்படுத்தபட்டுள்ள ஊரடங்கால் பட்டினியை எதிர்நோக்கி இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஆலயங்களும் ஏனைய பொது அமைப்புகளும் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியிலும், சிறிலங்காவிலும் அதிகரித்துச் செல்வதால் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. பெண்தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனர்கள், தினசரி வருமானத்துக்காக வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் சொல்லொணா வறுமைத் துன்பத்தில் அகப்பட்டு தவிக்கின்றனர். இது மிக மோசமான நிலைக்கு சென்று பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலை ஏற்படப் போகிறது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
இந்நிலையில் இதுவரை உதவி வந்த பொது அமைப்புகள், தனவந்தர்கள் போன்றோரும் தமது உதவிகளை தொடரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆலயங்களும், கமநல கேந்திர நிலையங்களுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளும் தங்கள் அமைப்புக்களில் இருக்கு ஒரு பகுதி நிதியை அல்லலுறும் மக்களின் நிவாரணத்திற்காக உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக உரையாடியதாகவும் அவர்கள் தாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார மற்றும் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோர் இணைத்து 7 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மிகவும் கஷ்டமாக இந்த காலப் பகுதியில் வடக்கு பிரதேசத்தில் மாத்திரமல்லாது கேகாலை, ருக்மல்கம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 7 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவர்களின் உதவியுடன் தேவை உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக உணவு பொருட்கள் அடங்கிய 5 ஆயிரம் பொதிகள் வழங்கப்பட்டதுடன் இதன் பின்னர் மேலும் 2 ஆயிரம் பொதிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார , பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனது வீட்டில் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டார்.
தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த உதவிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் திமுத் கருணாரத்ன உட்பட கிரிக்கெட் அணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகமை வைத்தியசாலைகளுக்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்தனர்.
இன்று அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா நோயாளர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அண்மையில் அக்குரண பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். டுபாயிலிருந்து வந்தவர் அவர். பின்னர் அவரது தந்தை சகோதரி ஆகியோர் தொற்றிற்கு இலக்காகியிருந்தனர்.
ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வந்தனர். இதில் இன்னும் 3 குடும்ப உறுப்பினர்கள் கொரொனா தொற்றிற்கு இலக்காகியிருப்பது இன்று உறுதியானது. இவர்களிற்கு முன்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லையென குறிப்பிடப்பட்ட நிலையில், இன்று மீளவும் நடந்த பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது உறுதியானது.
இதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அக்குரன பகுதிக்குள் யாரும் நுழையவோ, வெளியேறவோ முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொடர்பாக அளவுக்கு அதிகாமான செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
மன உளைச்சல், பசி, தூக்கம் என்பவற்றைப் பாதிக்கின்றது. உளநல ஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது. தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மன உளைச்சலுக்கு உள்ளாகி தமது நோயெதிர்க்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே, தேவையற்ற செய்திகளையும், காணொளிகளையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒருசில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளைப் பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்ளாக்கி நோயெதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளைப் பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அம்மகஜரில்,
அதிமேதகு கோத்தபய ராஜபக்சே, ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.
நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா என்பது இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும். இந்த நிலையில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கூறப்படுகின்ற முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா இன்று அதிகாலை எரிக்கப்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய கிழக்கு நாடுகளில் கொரானா தொற்றுக்காரணமாக மரணித்தவர்களின் ஜனாஸா, தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மட்டுமின்றி முஸ்லிம் நாடுகளில் பலவற்றிலும் இவ்வாறான இறப்புகள் சமீபத்திய நாட்களில் அதிகமாக சம்பவித்து வருகிறது.
அந்த ஜனாஸாக்கள் இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு தொழுகையின் பின்னர் ஆழமான குழிகளில் நல்லடக்கம் செய்யப்படும் நிலை இருக்கின்ற போதும் எமது நாடான இங்கு மட்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் மட்டுமன்றி இஸ்லாமிய சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றிய அறிவுள்ள ஏணைய இன மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை அரசாங்க குடியுரிமை சட்டத்தின் படி ஒரு பிரஜைக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை கூட மறுக்கின்ற இந்த கொடூரமான செயலானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்த ஒரு செயலாகவே கருதவேண்டி உள்ளது. உலகை உலுக்கி கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டியது காலத்தின் அவசியம் ஆகும்.
நம்நாட்டில் நடந்து முடிந்த இந்த விடயம் முஸ்லிம் மக்களின் மனங்களில் பெரும் வருத்தத்தையும் கண்ணீர் சிந்தும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் யாராக இருந்தாலும் இஸ்லாமிய மார்க்க கோட்பாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட அனுமதிக்க முடியாது.
இவ்வாறான காட்டுமிராண்டித்தன செயல்கள் உடன் களைந்தெறியும் வழிமுறைகளை ஜனாதிபதியான நீங்கள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமானதாகும்.
இதேவேளை, இவ்வாறான நிலை தொடருமானால் தொற்று ஏற்பட்டு தாம் மரணித்தால் தனது ஜனாஸா எரியூட்டப்பட்டுவிடும் என பயந்து கொரானா தொற்றுக்குள்ளாகும் மக்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் அபாய நிலை எமது நாட்டில் ஏற்படலாம். என்பதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.
ஊழலில் ஈடுபட்டவர்கள் பழிவாங்கும் நோக்குடன் வதந்திகளைப் பரப்பினர் என தனிமைப்படுத்தலில் இருந்து மீண்ட முன்னாள் அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான மா.உதயகுமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளியில் கூறியதாவது...
என்னுடைய நண்பர் ஒருவர் என்னை சந்தித்தபோது அவருடன் நெருக்கமாக பழகினேன் என்ற அடிப்படையிலே கடந்த 15.03.2020 முதல் என்னை நான் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தேன். அதேவேளையில், நான் சந்தித்த 40க்கு மேற்பட்ட குடும்பங்கள் குறித்த தினத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
அந்த அடிப்படையிலே எங்களுடைய சுய தனிமைப்படுத்தல் காலப்பகுதி 29.02.2020 அன்று முடிவுற்றது. அதில் எங்களுக்கு எந்தவொரு நோய் தொற்றும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், அதற்கான கடிதங்களும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த காலகட்டத்தில் எங்களுக்கு உதவிகளை வழங்கிய சுகாதார அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்,. அத்துடன், எங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியவர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
இப்படியான துன்பியல் காலத்தில் சில மனிதத்தன்மை அற்றவர்கள் தமது குறுகிய அரசியல் லாபம் கருதி அல்லது கடந்த காலங்களிலே ஊழல், லஞ்சம், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டபோது என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே பொய்யான வதந்திகளை பரப்பி பீதியடைய செய்தமையை அவதானித்திருந்தோம்.
அவ்வாறானவர்கள் ஒரு மனிதனுடைய துயரத்திலே சுகம் காண முடியுமாக இருந்தால், அவனை சாதாரண பகுத்தறிவு உள்ள மனிதனாக கருதிக்கொள்ள முடியாது என்ற அடிப்படையிலே அவர்களுடைய பொய் முகங்களை எங்களுடைய பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்ததுடன், இந்த துன்பியல் காலத்தில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சீனாவில் தொடங்கி இன்று உலகளாவிய ரீதியில் அனைவரையும் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸால் இலங்கையிலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைய தினம் நீர்கொழும்பில் வசிக்கும் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் ஹாதி அபூபக்கர் வீதியில் உள்ள மூன்று வீடுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நபர் அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் வந்து போனதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடந்த 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளார். அங்கு இரு நாள்கள் தங்கியிருந்த பின்னர் நீர்கொழும்பு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபருடைய நடமாட்டங்கள், பழகிய, சந்தித்த நபர்கள் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கையில் உள்ள சகல புலனாய்வு கட்டமைப்புக்களும் நேற்று மாலையே ஆரம்பித்திருக்கின்றன.
இதன்படி யாழ்.மாவட்டத்திலும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள், திருமண வீட்டில் கலந்து கொண்டவர்கள்,என சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
அதன்பின்னர் குறித்த திருமணம் நடைபெற்ற வீடு உள்ளடலங்கலாக மூன்று வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது 10ற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு 3 வீடுகள் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி கிராமசேவகர் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவி வரும் பின்னணியில் அமெரிக்க பிரஜை ஒருவர் முப்பரிமாண முக கவசம் ஒன்றை தயாரித்துள்ளார்.
அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பரவும் கேந்திர இடமாக மாறியுள்ளதுடன் அங்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன் அங்கு முக கவசத்திற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதற்கு தீர்வாக ஒக்லஹோமா மாகாணத்தை சேர்ந்த 35 வயதான ஜோ குவார் என்ற நபர் முப்பரிமாண தொழிற்நுட்படுத்தை பயன்படுத்தி முககவசம் ஒன்றை அச்சிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களை வீடுகளை இருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் காலத்தை வீணடிக்காமல் இப்படியான தயாரிப்பு ஒன்றை செய்ய எண்ணியதாக ஜோ கூறியுள்ளார்.
முப்பரிமாண முககவசங்களை அச்சிடும் அதே வேளையில் அவர் இணைத்தளம் வழியாக மாயாஜால கண்காட்சி மற்றும் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
எவ்வாறாயினும் ஜோ தான் தயாரிக்கும் முக கவசங்களுக்கு மக்களிடம் பணத்தை அறவிடுவதில்லை என்பதுடன் அதற்கு பதிலாக முககவசங்களை செய்ய பிளாஸ்டிக் மூலம் பொருட்களை மாத்திரம் அன்பளிப்பாக பெற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதுடன் இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள மரணங்கள் 37 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
சீனாவின் ஹூஹான் நகரில் பரவி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது.
இன்று அதிகாலை வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7 லட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
37 ஆயிரத்து 830 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 2000 பேரில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.
உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 250-ஐ கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அத்துடன் வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களிடமிருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து பலருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சியில் பங்கேற்று காஷ்மீர் திரும்பிய நபர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அதேபோல், மத நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கானா திரும்பியவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்மந்திரியின் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்தும் பலர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களது தகவல்களை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் மசூதிக்குள் தங்கியிருந்த 200-க்கும் அதிகமானோர் இருமல், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, மசூதிக்குள் இருந்த அனைவரையும் அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி கொரோனா பரிசோதனைக்க்கு உள்படுத்தியுள்ளனர்.
பரிசோதனை முடிவுகள் இன்று அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மசூதி இருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நிஜாமுதின் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.
மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் நிலைமையை சமாளிக்க ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கை கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மற்றொரு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மேலும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், அவ்வாறு பதிவு செய்வதற்கான கால எல்லை ஏப்ரல் 1 ஆம் திகதி நண்பகல் வரை மட்டுமே என்றும் அவர்கள் தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மார்ச் 16 ஆம் திகதிக்கு முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நாளைய தினம் மதியம் 12.00 மணிக்கு முன்னர் பதிவு செய்யப்படவில்லையாயின் 12 மணிக்குப் பின்னர், பொலிசார் சந்தேக நபர்களை பதிவேட்டின் படி தேடி அவர்களை கைது செய்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
கொழும்பு ,கம்பஹா, களுத்துறை ,புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் (01) புதன்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அதே நாள் மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறு அறிவித்தல் வரை தொடரும்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அவிகன் என்ற மருந்தானது தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது கொரோனா வைரஸூக்கான முழுமையான மருந்தாக இல்லாதபோதும் பதிலாக பயன்படுத்தக்கூடியது என்று வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இந்த வில்லை உலகளாவிய ரீதியில் எபோல வைரஸ் பரவலின் போது பயன்படுத்தப்பட்டது.
“AVIGAN’ கொரோனா வைரஸூக்கு தகுந்த மருந்து என்பது நிரூபிக்கப்பட்டால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அதிகளவில் அதனை கொள்வனவு செய்யும் என்றும் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு துளி இரத்தத்தினை சோதனைக்குட்படுத்துவதன் மூலம் 15 நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கின்றதா இல்லையா என்பதனை கண்டறிந்து விடலாம் என அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அந்தக் கருவியைக் கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி இலகுவாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினை அறிந்து கொள்வதற்கு 14 நாட்கள் வரை காலம் தேவைப்படுகின்ற நிலையில் குறித்த கருவியின் பயன்பாடு சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைவிட மூக்கின் உட்புறங்களில் காணப்படும் சளி படலங்களை கொண்டும் பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். இதற்கமைய சளிப்படலங்களை கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டால் 45 நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றதா இல்லையா என்பதனை அறிவித்து விடலாம் எனவும் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குவதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் அந்நோய்த்தாக்கத்தை அழிக்க நான் எதிர்பார்க்கின்றேன் என 24ம் படை பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கட்டிடமொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் 24ம் பிரிவின் இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சிந்தகே கமகே கலந்து கொண்டு உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கு நான் ஒவ்வொரு குடும்பங்களாக தனித்து இருப்பதது தான் வழி என்கின்ற ஆலோசனையை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
இங்கு சிலருக்கு தெரியாமல் நோயுள்ளவர்கள் அவர்களுக்கு தெரியாமலே வீடுகளுக்கு சென்று பரப்பி இருக்கிறார்கள் .எங்களுடைய கடமை கொரோனா தொற்றில் இருந்து மாவட்டத்தை காப்பாற்றுவதாகும்.
நான் நினைக்கின்றேன் மெளலவிமார்களும் பள்ளிவாசல் ஒலி பெருக்கி மூலம் இது குறித்து அறிவிப்புகளை செய்து வருகின்றார்கள்.இதனூடாக கொரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குவதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் அந்நோய்த்தாக்கத்தை அழிக்க நான் எதிர்பார்க்கின்றேன்.
நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்நோய் எமது நாட்டில் இருந்து இல்லாமல் போகும் என்று எதிர்பார்க்கின்றோம்.எனவே ஊர் என்ற அடிப்படையில் எல்லோரும் இணைந்து இந்த வைரஸை இல்லாமல் செய்ய பாடுபட வேண்டும்.
இதற்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழக்க வேண்டும்.நான் நினைகின்றேன் ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் கடைகளை இப்பிராந்தியத்தில் மூடு காணப்படுவதால் கடைகளுக்கு வரும் மக்கள் வீடுகளுக்கு திருப்ப சென்றுவார்கள்.
எனவே தான் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அரசாங்கம்வழங்கும் அறிவுறுத்தல்களை முழுமையாக முறையாக பின்பற்றினால் எமது பிரதேசத்தையும் எமது நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , கல்முனை,சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், மற்றும் பொலிஸ், இராணுவ பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின்,பள்ளிவாசல்களின், பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸார், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய், தாவடியைச் சேர்ந்த பெண், ஆனைக்கோட்டை, உரும்பிராய், மன்னாரைச் சேர்ந்த 4 பேரே இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலிருந்து இவர்களது மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தலுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் என்று தெரியவருகின்றது.
தாவடியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வசித்த பெண் ஒருவரே கொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நபர், நெடுந்தீவுக்கு வெளிநாட்டவர்களுடன் சென்று வந்த நிலையில் அவரும் கொரோனா தொற்றுக்குரிய சந்தேகங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உரும்பிராயைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும் கொரோனா தொற்று சந்தேகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மன்னாரைச் சேர்ந்த இருவர் இன்று மாலை கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றுக்கு இலக்கான மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
இதனால் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதகரித்துள்ளது. அத்துடன், 122 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த இரண்டாம் நபர் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், உயிரிழந்த நபர் நீர்கொழும்பு – போருதொடை பகுதியைச் சேர்ந்த 64 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 8ம் திகதி சுப நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவருக்கு சுகவீனம் ஏற்பட்டிருந்ததாவும், அதேபகுதியில் உள்ள வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே, நேற்றைய தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர் தனியார் வைத்தியசாலையிலிருந்து நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தில் 11 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 86 பூட்டானிய மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பெல்லூவ் ஏர்லைன்ஸ் பூட்டானுக்கு சொந்தமான இந்த விமானம் பூட்டானில் உள்ள பரோ விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த விமானம் மீண்டும் மதியம் 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
இந்தநிலையில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்குமா என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்பதை தெரிவிக்கிறார் மரத்துவர் சுரேஸ்குமார்.
உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார்.
இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் நேற்றையதினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் 2020 ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது.
கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் எவ்வித தாமதங்களும் இருக்காது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதில் சமூக ஊடகங்களில் இந்த பரீட்சை பிற்போடப்படும் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இலங்கை அரசாங்கம் மாத்திரம் அல்ல முழு உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழப்பாண மாவட்டத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவிப்பு வரை நீடிக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையை தவிர்த்து வேறு நடவடிக்கைகளுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலகளவில் 43 சதவீத மக்களது வாழ்க்கையை முடக்கியுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் நாட்கள் அமெரிக்காவை பொறுத்தவரை மிகவும் சவால் மிக்க நாளாக அமைய உள்ளது.
அங்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு இலக்காகலாம் எனவும், அதில் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரையான மக்கள் உயிரிழக்கலாம் எனவும் கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ அணியின் முக்கிய மருத்துவரான அன்டனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழே செய்தி வீச்சு நிகழ்ச்சியில் பார்க்கலாம்...
அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் திகதியை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஓய்வுதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோரின் வீடுகளுக்கு கொண்டு சென்று பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கிராம சேவகரின் உதவியுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.
இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நோயாளி தான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடு நீர் மாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டதென கொரோனாவில் குணமடைந்த முதல் இலங்கையர் தெரிவித்துள்ளார்.
தனக்கு தினமும் 6 - 7 லீட்டர் சூடு நீர் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நோயை குணப்படுத்துவதற்கு சுடு நீர் முக்கியமான காரணமாக அமைந்ததென மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குணப்படுத்த சுடு நீர் மிக சிறந்த ஒன்றாகும் என தான் வைத்தியசாலையிலேயே தெரிந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி பத்திரிகைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.
ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 69 ஆயிரத்து 312... இந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 982... இதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 100... என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல் மையம் கணக்கு சொல்கிறது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை கூறி இருப்பவர், தொற்றுநோய் பரவல் கணித பகுப்பாய் வில் வல்லுனராக திகழக்கூடிய ஆடம் குச்சார்ஸ்கி. இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவ கல்லூரியின் இணைப் பேராசிரியரும் ஆவார்.
கொரோனா வைரஸ் பற்றிய அவரது பார்வையும், கருத்துகளும் கவனத்தை ஈர்ப்பதாக அமைகின்றன. அதில் இருந்து...
19-ம் நூற்றாண்டின் இறுதியில் மலேரியா காய்ச்சல், கொசுக்கள் மூலம்தான் பரவுகின்றன என்று கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி ரொனால்டு ரோஸ் ஆவார்.
அவர் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு பார்வையைத் தந்துள்ளார்.
கடைசி கொசு இருக்கிற வரையில் மலேரியா காய்ச்சலை ஒழித்துக்கட்ட முடியாது என்பதுதான் மனிதர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு கொசுவையும் ஒழிக்கத்தேவையில்லை என்பதுதான் ரொனால்டு ரோஸ் பார்வையாக இருந்தது.
கொசுக்களின் அடர்த்தியை ஓரளவுக்கு குறைத்து விட்டாலே, மலேரியா காய்ச்சலால் பாதித்த ஒருவர், அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு முன்பாகவே குணம் அடைந்து விட வாய்ப்பு உண்டு.
கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் கூட இதே போன்றதொரு யோசனையை நாம் சிந்திக்க முடியும். உடல் அளவில் தனித்திருத்தல் அல்லது சமூக அளவில் விலகியிருத்தல் என்ற யோசனை வந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் இந்த நடைமுறைகள் அமலில் இருப்பதால், அவர்கள் அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு விட முடியும். அதைத்தான் வுஹான் போன்ற இடங்களில் கடைப்பிடித்தார்கள்.
தொற்றுநோய் பரவல் கணிதத்தை பொறுத்தமட்டில், ஸ்பானிஷ் புளூ, சார்ஸ் அல்லது எபோலா போன்ற வைரசில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்றால்-
இந்த நோய் தொற்றுகளைப்பற்றி புரிந்துகொள்வதற்கென்றே பல பரந்த கொள்கைகள் இருக்கின்றன. இவை பல நோய் கிருமிகளுக்கு பொருந்தக்கூடும். குறிப்பாக சொல்தென்றால் பரவலின் அளவை புரிந்துகொள்வதிலேயே.
ஆக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், சராசரியாக இந்த வைரசை எத்தனை பேருக்கு கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழும். 2 அல்லது 3 நபர்களுக்கு அவர்களால் கொடுக்க முடியும்.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறபோது, அதற்கான அறிகுறிகளை அவர் காண்பிக்க சராசரியாக எத்தனை நாட்கள் ஆகி இருக்கும் என்றால் 5 நாட்களாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்கலாம்.
மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், அது தொற்றின் ஆரம்பத்திலேயே, அதாவது அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே அல்லது லேசான அறிகுறிகள் தென்படுகிறபோதே நிறைய பேருக்கு பரவி விடுகிறது என்பதுதான்.
எபோலா, சார்ஸ் வைரஸ்களை பொறுத்தமட்டில், அவற்றை எளிதில் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும், ஏனென்றால் அதிக தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டபோது, அவற்றுக்கென்று தனித்துவமான அறிகுறிகள் இருக்கின்றன. அவர்களை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை பார்க்க இயலும். அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்து விடவும் முடியும்.
ஆனால் இந்த கொரோனா வைரசை பொறுத்தமட்டில், ஒருவர் பாதிப்புக்கு ஆளானாலும், அவர் நன்றாக இருக்கிறபோதே கூட அல்லது லேசாக இருமுகிற போதேகூட நிறைய பேருக்கு பரவி விடுகிறது.
இதனால் யார், யாருக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது மிகக் கடினமானதாகி விடுகிறது. வெளிநாடுகளில் எல்லாம் இதைத்தான் காணாக்கூடியதாக இருக்கின்றது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு முன்பாகவே பலருக்கு பரவினாலும் அவர்கள் கண்டறியப்படாமல் போகிறார்கள்.
இலங்கையிலும் இந்தியாவிலும் குறைவான பேருக்குத்தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒப்பிட்டால் மரண விகிதாச்சாரமும் குறைவாகவே இருக்கிறது.
ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் நகரங்களில் மக்கள் அடர்த்தியை பார்க்கிறபோது, இந்த எண்ணிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறதா என்றால், ஆரம்ப நிலையில் இரண்டு அம்சங்களை கண்டறிவது கடினம்.
குறைவான எண்ணிக்கையில் பாதிப்புக்கு ஆளானவர்களை கொண்டிருக்கிறபோது, தற்செயலாகவோ அல்லது மக்கள் தொகை அமைப்பினாலோ அல்லது பிற அம்சங்களாலோ, இன்னும் பரவுவது சூடுபிடிக்கவில்லை.
இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படுகிறபோது, குறிப்பாக உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிக்கிறபோது, எந்தளவுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றிய தெளிவான நிலையை காண முடியும்.
கொரோனா வைரஸ் பாதித்துள்ள பல நாடுகளில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே வெளி உலகுக்கு சொல்லப்படுகிறது என்று நினைக்கிறோம்.
கொரோனா வைரஸ் பரவலில் தவறான தகவல்களும் பரவுகின்றன.
கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் ஆரம்ப கட்டத்தில், பாதிப்புக்கு ஆளாகிற ஒவ்வொருவரும், ஒரு சிலருக்கு அதைப் பரப்புகிறார்கள்.
கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் பரவுவதற்கும், இது பற்றிய போலியான தகவல்கள் பரவுவதற்கும் ஒற்றுமை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.
இதையொட்டி, பேஸ்புக் உள்ளடக்கம் பற்றிய ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் பற்றிய ஒரு பதிவை ஒருவர் வெளியிடுகிறபோது, மேலும் 2 பேர் அதை பகிர வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிய வந்தது. ஆனால் பெரிய வித்தியாசம், நேர அளவுதான்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு சில நாட்கள் ஆகும். அதே சமயம், வலைத்தளங்ளில் 30 வினாடிகளில் பேசத்தொடங்கி விடலாம். அது கொத்து கொத்தாக பரவத்தொடங்கி விடுகிறது.
... இப்படி சொல்கிறார் அந்த வல்லுனர்.
கொரோனா வைரஸ் என்ற ஆக்டோபஸ்சின் கரங்கள் இன்னும் முழுமையாக நீளாமலேயே ஒடுங்கிப்போய் விட வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகமெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் வெளியே வருகிறது என்றால் ஐந்தில் ஒருவர் பற்றிய தகவல்களே வெளிவருகின்றன என்று அர்த்தம். இது உண்மையானால் இன்னும் இந்த கொரோனா வைரசின் வலிமை அதிகம் என்பது தெளிவாகிறது.
ஒவ்வொருவரும் தத்தம் நாட்டு அரசுகளின் விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மதித்து, தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாடுகளை விதித்து வீடுகளுக்குள்ளும், இருக்கும் இடங்களிலும் முடங்கி இருப்பதுதான் ஒவ்வொருவரையும் காக்கும். உயிரையும் காக்கும்!