ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் - -

Friday, October 31, 2014

இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம். 

இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

மலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.

யார் இவர்கள்? ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?

இலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் 'இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்' எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது. 

அரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது?

 உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி 'நீ வேறெங்காவது போ' எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது? ஜீவனோபாய வழி முறைகள். 

காலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை? அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.

இவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல !






READ MORE | comments

நிவாரணம் சேகரிக்கும் பணி ஆரம்பம்


பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை, மீரியபெத்தைத் தோட்டப் பிரதேசங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ச் செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து பாரிய நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு வர்த்தகர்கள், பொதுமக்கள், சமூக சேவை நிறுவனங்கள் பாதிக்கப்படவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா, மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ் இன்பராஜன் , சிவில் சங்கத் தலைவர் எஸ் மாமாங்கராஜா, மட்டக்களப்பு வர்த்த கைத்தொழில் சம்மேளனத் தலைவர் எம். செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டு பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிவாரண சேகரிப்பு பணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை பூரண உதவிகளை வழங்கிவருகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,பொதுமக்களின் இல்லங்களில் இருந்து பெருமளவான நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக வழங்கப்பட்டுவருகின்றன.














READ MORE | comments

ஐரோப்பாவில் தடைநீக்கப்பட்டாலும் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம்! – ஜனாதிபதி மஹிந்த சூளுரை.

ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீண்டும் தலைதூக்க அரசாங்கமும் படையினரும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு வருட ங்களுக்கு முன்பு இப்பிரதேசத்தின் நிலைமையை நான் புதிதாகக் கூறத் தேவையில்லை. 2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது.
.தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது. இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ சிலர் குறுகிய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகின்றனர். கடந்த கால மோசமான நிலைமையை அறியாதவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர் என எம்மால் கருத முடிகிறது.
புலிகளுக்கான தடை உலக நாடுகள் எங்கும் விதிக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர். எனினும் அண்மையில் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இத்தடையை நீக்கி புலிகள் மீள சுதந்திரமாக அந்நாடுகளில் செயற் வழிவகுத்துள்ளனர். அத்தோடு இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இச்செயற்பாடுகள் ஏதாவது காரணத்தோடுதான் மேற் கொள்ளப்பட்டது. எனினும் என்ன காரணம் என்று எமக்குப் புரியாமலுள்ளது. நீதிமன்ற விடயம் என்பதால் அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது.
எவ்வாறாயினும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எமது படையினரும் அரசாங்கமும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Thursday, October 30, 2014


வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்தும் முகமாக மாலபே கல்வி மையத்தினை இலங்கை வைத்திய சங்கத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும் இலங்கை வைத்திய சங்கமும் மேற்கொள்வதை கண்டித்து கிழக்கு பல்கலைக் கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.


இதில் விஞ்ஞானங்கள் பீடத்தின் வைத்திய மாணவர்கள் பலர் கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி அவர்களும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் மட்டக்களப்பு நகர் வரையில் பேரணியும் இடம்பெற்றது.



இதன் போது கருத்து தெரிவித்த விஞ்ஞானங்கள் பீடத்தின் மாணவ தலைவர் கல்வி என்பது எமது நாட்டில் மாத்திரமே இலவசமாக கிடைக்கப்படுகழன்ற ஒன்று அதனை தற்போது வியாபாரம் ஆனக்குகின்ற நோக்கில் வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.



இதன் மூலம் ஏழை எழிய மாணவர்கள் வைத்தியராகுவதற்குரிய சூழ்நிலை குறைக்கப்படும் பணக்காரர்கள் தகுதி இல்லாதவிடத்தும் பணத்தின் மூலம் வைத்தியராகுவதறடகுரிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் எனவே இவ்வாறானதொரு திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அகில இலங்கை வைத்திய பீட மாணவர்கள் செயற்பாட்டுக்குழு நாடளாவிய ரீயில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றது அக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ரீதியில் நாமும் இங்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்கின்றோம் என்றார்.











READ MORE | comments

மட்/தேத்தாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் "சூரசம்ஹாரம்‬" மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தேத்தாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் "சூரசம்ஹாரம்‬" மிகவும் சிறப்பாக நடைபெற்றது.











READ MORE | comments

டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு -

இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது.
இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.
216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.



READ MORE | comments

இயற்கையின் கோர முகம் - இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய பதுளை மண் சரிவு

இப்போது பெய்துவரும் அதிக மழை காரணமாக இலங்கையில் பல பிரதேசங்களில் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு பாரிய அனர்த்தம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை - கொஸ்லாந்தை - மீரியாபெத்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் லயன் வீடுகள் மற்றும்  தோட்ட  வீடுகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் இப் பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த பிரதேசத்தில் மண் சரிவு இடம்பெற்றுகொண்டிருப்பதாக  மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
இந்த நிலையில்காவற் துறையினரோடு மீட்பு பணியில்படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில்  300இற்கும் மேற்பட்டோர் மண் சரிவுக்குள் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
 
இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இப்போது அங்கே பெய்து வரும் மழை காரணமாக மீட்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்தில்  பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்ல, பசறை, ஊவாபரணகம, ஹல்துமுல்ல, ஹப்புத்தளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
இது தொடர்பான விரிவான, விரைவான செய்திகளை, சூரியனின் செய்திகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மண் சரிவின் கோரத்தின் பதிவுகள் புகைப்படங்களாக..































 

 

 


 

 

 

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |