கி.ப கழக உடற்கல்வி உதவி விரிவுரையாளர் நியமன விவகாரம் துணைவேந்தர் ஊழல் செய்தாரா?

Friday, February 28, 2014


கிழக்கு பல்கலைகழகத்தில் உடற்கல்வி உதவி விரிவுரையாளர் பதவிக்கென விண்ணப்பித்தவர்களில் தகமையுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்றிருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனம் மேற்கொள்ளப்படும் என கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
உடற்கல்வி உதவி விரிவுரையாளர் ஆட்சேர்ப்பில் உண்மையான தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் முறைகேடுகள், குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பாடு செய்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த நியமனம் தொடர்பில் ஏற்பட்டு குழப்பத்தினையடுத்து புதன்கிழமையே (26.02.2014) இந்த நியமனத்தினை இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதுடன், விண்ணப்பித்தவர்களில் தகமையுடையவர்கள் இருக்கும் பட்சத்தில் இந்தத் தெரிவினை மேற்கொண்டவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், இதற்காக மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்படும்.
இப் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்துள்ள போதும், அவர்களில் தகுதி அடிப்படையில் 3 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய இருவரில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் இது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் முடிவில் இது தொடர்பான உண்மை தெரியவரும்.
குறித்த பதவிக்கு பல்கலைக்கழக பட்டத்துடன், தேசிய ரீதியில் விளையாட்டுத்துறையில் முதலிடம் பெற்றவர், அல்லது விளையாட்டுத்துறை டிப்ளோமாவுடன் பத்து வருட அனுபவமும் இருத்தல் வேண்டும். நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் தகுதி அடிப்படையில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மற்றவகையில் இந்தத் தெரிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இதனை நலன்புரிப்பிரிவு உதவிப்பதிவாளரும், உடற் கல்விக்குப் பொறுப்பானவருமே மேற்கொண்டிருந்தனர். இதில் குழறுபடிகள் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைவேந்தர் தெரிவித்தார்.
அதே நேரம், பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர்களாக குறிப்பிட்ட வருடங்கள் கடமையாற்றுபவர்கள் தகுதியானவர்கள் என்றில்லை. தேவை கருதியே அவர்கள் தற்காலிகமாக இணைக்கப்படுகின்றனர். நிரந்தர நியமனங்கள் என வரும் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை ஒழுங்குகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் இது தொடர்பில், சிலர் தவறாக விளக்கம் கொண்டுள்ளனர்.
கல்வி சார் நியமனங்கள் மாத்திரமே என்னுடைய பங்குபற்றலுடன் நடைபெறுகின்றன. இந்த நியமனங்களில் மாணவர்களின் கல்வி நலன் கருதி தகுதியானவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள். இதில் எந்தவிதமான தவறகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியதும் என்னுடைய கடமை என்றும் துணை வேந்தர் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா புதிதாக நியமிக்கப்பட்டது முதல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உடல்கல்விப் பிரிவுக்கான விரிவுரையாளர் நியமனத்திலும் துணைவேந்தரால் குழறுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வருட இறுதியில் நடைபெற்ற வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போது, மட்டக்களப்பு மாவட்ட தமழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என உரையாற்றியிருந்தார். அதனையடுத்து துணைவேந்தர் மறுப்புத் தெரிவித்து விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு – மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக அ.சுகுமாரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக அதிபர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த அ.சுகுமாரன் கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணக்கல்வி அமைச்சில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சைக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை சாஹிறா கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேராதனைப்பல்கலைக்கழகக் கலைப்பட்டம், திறந்த பல்கலைக்கழக கல்வி டிப்ளோமா, தேசிய கல்வி நிறுவக கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என்பவற்றுடன், பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராவார்.
தனது 19 வயதில் ஆசிரிய சேவையில் இணைந்து கொண்ட அ.சுகுமாரன், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று இ.கி.மி. வித்தியாலயத்தில் உடல்கல்வி ஆசிரியராக தனது பணிணை ஆரம்பித்திருந்தார்.
தொடர்ந்து, மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயம், மட்டக்களப்பு, இந்துக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியராக இருந்து, இந்துக் கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றினார்.
அடுத்து மட்டக்களப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வித்தியாலயம், வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார்.
பின் மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் ஏறாவூர் பற்று -2 கோட்டக்கல்விப் பணிப்பாளராக 2005 முதல் 2013வரை கடமையாற்றி, மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் சிறிது காலம் கோட்டக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
READ MORE | comments

இந்தியாவை 2 விக்கற்றுகளால் வென்றது இலங்கை


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இந்திய அணி சார்பில் தவான் 94 ஓட்டங்களையும் கோலி 48 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை சார்பில் பந்துவீச்சில் மெண்டிஸ் 04 விக்கெட்களையும் சேனாநாயக்க 03 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. 

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 84 பந்துகளை எதிர்கொண்டு 103 ஓட்டங்களையும் பெரேரா 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 
READ MORE | comments

மட்டக்களப்பு ஆரையம்பதி எல்லையில் 21 அடி உயரம் கொண்ட சிலை திறப்பு


மட்டக்களப்பின் ஆரையம்பதி எல்லைப்பகுதியில் சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் சிவபெருமானின் ருத்திர தாண்டவ திருவுருவச்சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாவரும்  ஆற்றல் பேரவைத் தலைவருமான  பூ.பிரசாந்தனின் ஆலோசனையின் பேரில் ஆற்றல் பேரவை,ஆரையம்பதி நரசிம்மர்ஆலயம் ஆரையம்பதி ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலய திருப்பணிச்சபை ஆரையம்பதி ஆலயங்களின் ஒண்றியம் என்பன இணைந்து ஆரையம்பதி கடற்கரையின் எல்லையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

சுமார் 21 அடி உயரங்கொண்ட இத் திருவுருவச்சிலையானது ஆரையம்பதி ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து நகர்வலமாக பிரதானவீதி உள்வீதி வழியாக கொட்டும் மழையிலும் பத்தர்களின் அரோகரா கோசத்துடன்  கடற்கரையினைச்சென்றடைந்து அங்கு சிவஸ்ரீ.சோதிநாத சர்மாவினால் விஷேட பூசைகள் நடத்தப்பட்டு  திருவுருவச்சிலையானது எல்லைச்சிவனாக  நிறுவப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிபன் பொதுச் செயலாலரும் ஆரையம்பதி ஆற்றல் பேரவைத் தலைவருமான  பூ.பிரசாந்தன்,மண்முனைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் திருமதி அருட்பிரகாசம்,ஆரையம்பதி ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலய திருப்பணிச்சபை மு.பஞ்சாச்சரம், மண்முனைப்பற்று ப.நே.கூட்டுறவுச்சங்கத்தலைவர் சிவசுந்தரம்,ஆற்றல் பேரவைச் செயலாளர் கிஸ்கந்தமுதலி ஓட்டோசங்கத்தலைவர் குகராஜா கி.ஆ.ச.தலைவர் சிவராஜா செல்வாநகர் கிழக்கு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இத் திருவுருவச்சிலையினை ஆரையம்பதியைச்சேர்ந்த ரூபனினால் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















READ MORE | comments

சூரிய குடும்பத்துக்கு வெளியே 715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள கெப்லர் செயற்கை கோளை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்ணில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. 

இந்த வகையில் சமீபத்தில் ‘கெப்லர்’ விண்கலம் 715 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளது. அவை சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ளன. 

அவற்றில் 95 சதவீதம் கோள்கள், ‘நெப்டியூன்’ கிரகத்தை விட சிறியதாக உள்ளன. அதே நேரத்தில், அவை பூமியை விட 4 மடங்கு பெரியதாகும். 

இந்த கோள்களை சுற்றி 305 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரிய குடும்பத்தில் இருப்பதை போன்ற அமைப்பில் உள்ளன. 

கெப்லர் செயற்கை கோள்மூலம் சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுவரை 1700 கோள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 புதிய கோள்கள் பூமியை விட 2½ மடங்கு பெரியதாக உள்ளன. அங்கு உயிரினங்கள் வாழக் கூடிய தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. 
READ MORE | comments

புதிய விமானப்படை தளபதியாக கோலித்த குணதிலக பதவி ஏற்பு

விமா­னப்­ப­டையின் 14 ஆவது புதிய தள­ப­தி­யாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­லக இன்று தனது கட­மை­களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
ஓய்வு பெறும் விமா­னப்­படை தள­பதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம நேற்று தனது பத­வி­யினை புதிய தள­ப­தி­யான கோலித்த குண­தி­ல­க­விடம் கைய­ளித்­ததை தொடர்ந்தே இன்று அவர்உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
 
நேற்­றைய தினம் எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம தனது பத­வியை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­ல­க­வுக்கு கைய­ளிக்கும் நிகழ்­வா­னது விமா­னப்­படை தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. இதன் போது உத்­தி­யோக பூர்­வ­மாக தனது பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுக்­கொண்ட எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம விமா­னப்­படை தலைமை பொறுப்பை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­ல­க­விடம் கைய­ளித்தார்.
 
2006 ஆம் ஆண்டு விமா­னப்­ப­டையின் கட்­டளை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த ஹர்ஷ அபே­விக்­ரம 2011 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 27 ஆம் திகதி விமா­னப்­ப­டையின் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். இந் நிலை­யி­லேயே மூன்­று­வ­ருட சேவையின் பின்னர் எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம ஓய்வு பெற்­றுக்­கொண்டார்.
 
இதனை அடுத்து புதிய விமா­னப்­படை தள­ப­தி­யாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­லக இன்று கட­மை­யினை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பெறுப்பேற்றுக் கொண்டார்.
 
இது­வரை விமா­னப்­ப­டையின் தலைமை அதி­கா­ரி­யாக கட­மை­யாற்­றி­வந்த நிலை­யி­லேயே எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­லக தள­ப­தி­யாக நிய­மனம் பெற்­றுள்ளார்.
 
கொழும்பு ரோயல் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான கோலித்த குண­தி­லக பாது­காப்புக் கல்­லூ­ரி­யி­னதும் பழைய மாண­வ­ராவார். அத்­துடன் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றில் எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக முது நிலை பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

கிழக்கில் மீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்

கிழக்குமாகாணம் ‘கிழக்கின் உதயம்’ மற்றும் திவிநெகும எழுச்சிதிட்டம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. மக்களின் வறுமை நிலையை போக்கு வதற்காக வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புறங்களே முக்கிய பங்களிப்புச் செய்து வருகின்றன. கைத்தொழில் துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, விவசாயத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி தேசிய உற்பத்தியில் கிராமப் புறங்களின் பங்களிப்பு மிக வும் அளப்பரியதாகும். இதன் அவசி யத்தை உணர்ந்து அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும் முன்வைத்து அப்பிரதேச மக்கள் மேலும் விழிப்படையும் வகை யில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் நடத்தும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் அந்தந்த மாகாணங்கள், மாவட்டங்களில் குடி சைக்கைத் தொழில் விருத்திக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக மட்டக்களப்பு மாவ ட்டத்தில் குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் மாலை நேரங்களில் ஒருவரது வீட்டு முற்றத்தில் ஒன்று கூடும் பெண்கள் பனையோலை, பிரம்பு போன்றவற்றைக் கொண்டு அழகிய கைவினைப் பொருட்களை உருவாக்கிவருகின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யும் பொருட்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற் குட்பட்ட தாளங்குடா கிராமம் பனை யோலை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டு அங்குள்ளவர்களின் பனம்பொருள் கைவினைப் பணிக்கான ஊக்கு விப்புக்களை அரசாங்கம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது கிராமிய ரீதியில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள் வோர், அதனை பயில விரும்புவோர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீன இயந்திரங்களை அறிமுகம்செய்து அவற்றை இயக்குவதற் கான பயிற்சிபெறும் வழிவகைகள் மற்றும் சிறியளவில் குடிசைக் கைத் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு தேவையான இயந்திரம் மற்றும் உத விகளும் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் சிறுகைத் தொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே குடிசைக் கைத்தொழில் காணப்படுகின்றது. இங்கு நவீன தொழில் நுட்பம் மற் றும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் போதிய அறிவின்மை காணப்படுவதாக வும் சுட்டிக்காட்டப் படுகின்றது. இதனை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் திவிநெகும வாழ்வின் எழுச்சி திட்டம் ஊடாக அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளது.
ஒரு காலத்தில் குடிசைக் கைத் தொழிலில் கொடிகட்டிப்பறந்த மட்டக் களப்பு பிரதேசத்தின் கைத்தொழில் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே இங்கு வாழும் குடிசைக்கைத்தொழிலாளர்களது எதிர்பார்ப்பாகும்
READ MORE | comments

இலங்கை - இந்திய அணிகள் இன்று மோதல்


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று (28) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. 

பங்களாதேஷின் ப(f)ட்டுல்லா மைதானத்தில் இப்போட்டி இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. 

இவ்விரு அணிகளும் ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 

இந்நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும். 
READ MORE | comments

கல்முனைத் தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயமும் குறித்த வரலாற்றுப் பின்னணியும்

Thursday, February 27, 2014

இன்று ஊடகங்களில் பிரதானமாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனைத் தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் காணப்படுவதால் அது குறித்த வரலாற்றுப் பின்னணியை இச் சந்தர்ப்பத்தில் வெளிக் கொணர்வது அவசியம்.
கல்முனை மற்றும் கல்முனைக்குடி என்பன இரு வெவ்வேறு தனிக்கிராமங்களாகும். மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள பதிவேடுகளின் படி கல்முனைப்பட்டினமானது ஆரம்பத்தில் நூறு வீதம் தமிழர்களையே கொண்டிருந்தது. கல்முனைப்பட்டினமானது வடக்கே தமிழ்க்கிராமமான பாண்டிருப்பையும் தெற்கே முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியையும் கிழக்கே கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லையாகக் கொண்டு விளங்கிற்று.
கல்முனைப்பட்டினத்தின் வடக்கு எல்லை “தாளவட்டுவான்” வீதியும் தெற்கு எல்லை “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதியும் ஆகும். கல்முனைப்பட்டினம் மூன்று கிராமத்தலைவர் பிரிவுகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தது. கல்முனையையும் கல்முனைக்குடியையும் பிரிக்கும் எல்லையாகச் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த தரவைப்பிள்ளையார் கோயிலின் முன்னால் கடற்கரையை நோக்கிச் செல்லும் “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதியே விளங்கிற்று.
அக்காலத்தில் பொதுமராமத்து இலாகாவினால்  நிர்மாணிக்கப்பட்ட கல்முனைப் பெயர்ப்பலகை முன்பு தரவைப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருந்த இப்பெயர்ப்பலகை அப்போதைய கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரின் (முஸ்லிம்) அனுசரணையுடன் திட்டமிட்ட முறையிலே தெற்கு நோக்கி கல்முனை ஸாகிராக் கல்லூரி வளவுக்கு முன்னால் நகர்த்தப்பட்டது.
கல்முனைக்குடியைக் கல்முனையுடன் இணைத்து எதிர்காலத்தில் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமமான கல்முனைக்குடியையும் கல்முனையின் பகுதியாகச் சித்தரித்துக் கல்முனைப் பட்டினத்தில் தமிழர்களைச் சிறுபான்மையாக்கும் திட்டத்தின் முதல் அங்கமே மேற்கூறப்பட்ட பெயர்ப்பலகை நகர்த்தப்பட்ட நிகழ்வாகும்.
கல்முனைப்பட்டினம் 1892ம் ஆண்டின் 18ம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினால் நிறுவப்பட்ட சபையொன்றினால் நிருவகிக்கப்பட்டது. 1947 வரை கல்முனை மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளைக் (குறிச்சிகளை) கொண்டிருந்தது.
இம்மூன்று குறிச்சிகளும் (1ம், 2ம், 3ம் குறிச்சிகள்) தமிழர்களையே கொண்டிருந்தன. பின்பு 1946ம் ஆண்டின் 3ம் இலக்க பட்டினசபைகள் சட்டத்தின் பிரகாரம் இற்குப் பதிலாகக் கல்முனைப் பட்டினசபை உருவாக்கப்பட்ட போது கல்முனைக்குத் தெற்கே நான்கு பிரிவுகளைக் (குறிச்சிகளைக்) கொண்டிருந்த கல்முனைக்குடிக் கிராமமும் கல்முனைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டது.
அதேவேளை கல்முனைக்கு மிக அண்மித்ததாக அமைந்த பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற தமிழர்வாழ் கிராமங்கள் கல்முனைப் பட்டினசபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. கல்முனைப்பட்டினசபையில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் திட்டத்தின் அடுத்த அங்கமே இது.
மேலும் கல்முனைப் பட்டினசபைக்குரிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்ட வேளைகளிலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். வட்டாரங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்காகக் கல்முனை 3ம் குறிச்சியை “மாரியன் வீதி” எனப்படும் வீதியால் இரண்டாய்ப் பிரித்து வடக்கே உள்ளவர்களைக் கல்முனை 2ம் குறிச்சியுடன் சேர்த்து 2ம் வட்டாரம் எனவும் தெற்கே உள்ளவர்களைக் கல்முனைக்குடியின் 3ம் குறிச்சியுடன் சேர்த்து 3ம் வட்டாரம் எனவும் அமைத்தார்கள். இதனால் கல்முனை 3ம் குறிச்சித் தமிழர்கள் இரண்டு வட்டாரங்களில் பங்கு போடப்பட்டார்கள். கல்முனைப் பட்டினசபையில் தமிழ் உறுப்பினர்களைக் குறைக்கும் திட்டமே இது. இதனால் கல்முனைப் பட்டினசபையின் 7 வட்டாரங்களுள் 2 வட்டாரங்கள் தமிழ்ப் பெரும்பான்மையாகவும் 5 வட்டாரங்கள் முஸ்லிம் பெருமபான்மையாகவும் வருமாறு திட்டமிட்டு அமைக்கப்பட்டன.
முன்பு கல்முனைக்குத் தெற்கே “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதிக்கும் தற்போது “செயிலான்” வீதி என அழைக்கப்படும் வீதிக்கும் இடைப்பரப்பில் பிரதான வீதியை அண்டி தரவைப்பிள்ளையார் ஆலயத்திற்கான மடமும் அதற்குரிய வளவும் அதனைச் சுற்றி சுமார் 100 தமிழ்க் குடும்பங்களும் இருந்தன. இப்பகுதியில் வாழ்ந்தோருக்குக் கல்முனை 3ம் குறிச்சிக் கிராமத்தலைவரே கடமைகள் செய்து வந்தார்.
முதலாவதாக நடந்த கல்முனைப்பட்டின சபைத் தேர்தலின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனத்தினால் “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதிக்கும் “செயிலான்” வீதிக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுப் பயத்தினால் இடம் பெயர்ந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் மன்னாருக்குச் சென்று குடியேறினர்.
கல்முனைப் பட்டினசபையின் முதலாவது நடவடிக்கை தமிழ்க்குறிச்சியான கல்முனை 2ம் குறிச்சியில் அமைந்திருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கடற்கரையோரம் 2 ஏக்கர் நிலம் முஸ்லிம் மையவாடிக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியில் கடற்கரையோரம் நிலம் இருக்கும் போதுதான் இது தமிழர்களுக்கு எதிராக வேண்டுமென்று செய்யப்பட்டது. மட்டுமல்லாமல் கல்முனைக்குடியில் முஸ்லிம்களுக்கென்றிருந்த சந்தையை 1950 இல் மூடிவிட்டு முஸ்லிம் உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பட்டினசபையின் அனுசரணையுடன் தமிழர்களின் கல்முனைச் சந்தையில் முஸ்லிம்கள் ஊடுருவி அங்கிருந்த தமிழ், சிங்கள வர்த்தகர்களை இடம் பெயரச் செய்தார்கள்.
உண்மையில் “கோப்பை உடைத்தான் சந்தி” என முன்னர் அழைக்கப்பட்டதும் தற்போது “செயிலான் வீதி” என அழைக்கப்படுவதுமான இடத்திலிருந்துதான் கல்முனைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசம் வடக்கு நோக்கி இருந்தது. ஆனால் காலவரையில் அப்பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாலேயே தமிழர்களின் பிரதேசம் “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதி (தற்போது கடற்கரைப்பள்ளி வீதி) வரை தள்ளப்பட்டது.
1967ம் ஆண்டு கல்முனை 1ம் குறிச்சியைச் சேர்ந்த கடற்கரைப் பகுதியின் அரசகாணிகளில் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டு இப் பகுதிக்குக் ‘காரியப்பர்புரம்’ என்றும் பெயரிடப்பட்டது. தமிழர்கள் இதனை எதிர்த்தார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தின் போது கல்முனையின் தென் எல்லையான கல்முனை 3ம் குறிச்சியைச் சேர்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டும் பொருட்கள் நாசமாக்கப்பட்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் அம்மக்கள் அகதிகளாகி அண்மைய தமிழ்க்கிராமங்களில் தஞ்சமடைந்தனர். கலவரம் அடங்கிய பின் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் பலர் பயத்தின் காரணமாகக் குறைந்த விலைக்கு முஸ்லிம்களுக்குத் தங்கள் வீடு,வளவுகளை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்லலாயினர். இவ்வாறு இடம் பெயர்ந்த சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த கறுவாக்கேணியில் குடியேறி வாழத் தொடங்கினர்.
சுமார் 250 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் கல்முனையில் மட்டுமல்ல கல்முனைக்குடி சாய்ந்தமருது ஆகிய இடங்களிலும் பரந்து முஸ்லிம் மக்களிடையே வாழ்ந்தனர். 1960 இல் சாய்ந்தமருது (கரவாகு தெற்கு) கிராமசபை தேர்தலொன்றை அடுத்தும் பின்னர் 1967 இல் ஏற்பட்ட கலவரங்களையடுத்தும் கல்முனைக்குடியிலும் சாய்ந்தமருதுவிலும் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் இப்பகுதியலிருந்து இடம் பெயர்ந்தன. இப்பகுதிகளில் இன்றும் காணப்படும் இந்து ஆலயங்களின் இடிபாடுகள் இதற்குச் சான்றாகும். இன்று பிரபல கல்லூரியாக விளங்கும் பதியுதீன் மஃமுத் மகளிர் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் முன்பு அரசாங்க தமிழ்க்கலவன் பாடசாலையொன்று அமைந்திருந்தது. கல்முனையில் கலவரங்கள் ஏற்படவும் தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாயிருந்தது முஸ்லிம்களைப் பெருமபான்மையாகக் கொண்ட கல்முனைப்பட்டினசபையின் ஒருதலைப்பட்சமான உருவாக்கமும் அப்பட்டினசபை மேற்கொண்ட தமிழர் விரோத நடவடிக்கைகளுமேயாகும்.
இந்தப் பின்னணியிலேதான் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனைப்பட்டினசபையை இரண்டாகப் பிரித்துத் தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் வடபகுதியைத் தமிழ்ப் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் உருவாக்குமாறு கல்முனைத் தமிழர்கள் 1960 களிலிருந்தே கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
1967 இல் கல்முனையில் நிகழ்ந்த தமிழ் – முஸ்லிம் இனக்கலவரத்தின் பின்னர் காலஞ் சென்ற தோ.அந்தோணிப்பிள்ளை (அந்தோணிப்பிள்ளை மாஸ்ரர்) தலைமையிலான ‘கல்முனை முன்னேற்றச் சங்கம்’ அப்போதைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் – தமிழரசுக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தவர் காலஞ்சென்ற மு.திருச்செல்வம் அவர்களிடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் இந்நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவேயில்லை. வழமைபோல் பாராளுமன்ற நலன்கள் சார்ந்த தங்கள் கட்சி அரசியலுக்காக இப்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் தமிழரசுக்கட்சி நடந்து கொண்டது.
அதிகாரத்திலிருந்தபோது கூட கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கைமீது அக்கறையற்றிருந்தமை கிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது அக்கட்சிக்கு ஆத்மார்த்தமான அக்கறையிருக்கவில்லை என்பதன் வெளிப்பாடேயாகும்.
1970 க்குப் பின் கல்முனை நகரை அண்டியதாய் அமைந்திருந்த சிறியநீர்ப்பாசனக் குளங்களின் படுக்கைகள்  அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டு அவை மண் நிரப்பப்பட்டுக் கடைத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டன. நீர்ப்பாசனத் தேவைக்காகவும் மழைக்காலத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்ட இச்சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. கல்முனை நகரை முஸ்லிம் மயப்படுத்தும் நோக்கமே இது. அரசியல் செல்வாக்கும் பொருளாதாரபலமும் அற்றிருந்த தமிழர்களால் இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழரசுக்கட்சி அறவே அக்கறையற்றிருந்தது.
1977 – 1989 காலப்பகுதியில் ஜனாப் ஏ. ஆர். மன்சூர் அவர்கள் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் கல்முனை 1ம் குறிச்சியில் வாடிவீடு, கிறவல்குழி மற்றும் சவக்காலையை அண்டிய பகுதிகள் உள்ளடங்கிய பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு இக்குடியேற்றப் பிரிவுக்கு ‘இஸ்லாமாபாத்’ எனவும் பெயரிடப்பட்டது. அதேபோன்று கல்முனை நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்குப் பின்னால் தேவாலயத்திற்குச் சொந்தமான பள்ளப்பூமி (இப்பூமியில் முன்பு இல்லச் சிறுவர்களுக்கான உணவுத் தேவைக்காக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு வந்தது). சுவீகரிக்கப்பட்டு இ.போ.ச. அலுவலகம் மற்றும் மடுவம் அரச அலுவலகங்கள் அமைக்கப்பட்டதுடன் கல்முனை – மணல்சேனை வீதியையும் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியையும் இணைத்துப் பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டு அதற்குக் ‘ஹிஜ்ரா’ வீதி எனப் பெயரிடப்பட்டது. இவ்வாறு திட்டமிட்டு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் மயப்படுத்தப்பட்ட கல்முனைதான் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தகநிலையங்களை அதிகளவில் கொண்டு விளங்குகிறது.
பிரதேச சபைகள் அமுலுக்கு வருமுன்னர் முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் கரவாகு தெற்குக் (சாய்ந்தமருது) கிராமசபை, கல்முனைப் பட்டினசபை, கரவாகு வடமேற்குக் (சேனைக்குடியிருப்பு) கிராமசபை, கரவாகு வடக்குக் (பெரியநீலாவணை) கிராமசபை ஆகிய உள்ளுராட்சி அலகுகளை உள்ளடக்கியிருந்தது. 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பட்டினசபைகளும் கிராமசபைகளும் இல்லாதொழிக்கப்பட்டுப் பதிலாக பிரதேசசபைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கரவாகுப்பற்றுப் (கல்முனை) பிரதேசசபை எனும் பெயரில் தனியானதொரு உள்ளுராட்சி அலகாக ஆக்கப்பட்டது இப்பிரதேசசபை அமைக்கப்பட்ட பின்னரும் கூட கரவாகுப்பற்றுப் பிரதேசசபையை தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரணடாகப் பிரித்து தென்பகுதியைக் கரவாகு தெற்கு எனும் பெயரில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசசபையாகவும் வடபகுதியைக் கரவாகுவடக்கு எனும் பெயரில் தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேசசபையாகவும் உருவாக்கித் தரும்படி கல்முனைத் தமிழர்கள் பல பொது அமைப்புக்களினூடாக அரசை வற்புறுத்தி வந்துள்ளனர். குறிப்பாக ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம்’ 1988 இல் இருந்தே இதுவிடயமாகத் தொடர்ந்து முயற்சிகளை எடுத்தது.
இதே போன்றுதான் பழைய நிர்வாக அலகான பிரிவுக் காரியாதிகாரி முறை  நீக்கபட்டுப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் நிர்வாக அலகுகளாக அறிமுகம் செய்யப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவு எனும் பெயரில் தனியானதொரு நிர்வாக அலகாக ஆக்கப்பட்டது. முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவினை (தற்போது பிரதேச செயலகப்பிரிவு என மாற்றம் பெற்றுள்ளது) கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு தென்பகுதியானது 100  முஸ்லிம்களைக் கொண்டதாகவும் வடபகுதியானது தமிழர்களைப் பெரும்பான்மையாகவும், தமிழர், முஸ்லிம், சிங்களவர் மூவின மக்களையும் கொண்டதாகவும் இரண்டு தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமென்பதே 1988 இலிருந்து கல்முனைத் தமிழர்களால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். இக்கோரிக்கையினை ‘அம்பாறை மாவட்டத்தமிழர் மகாசங்கம்’ 1988 நடுப்பகுதியில் முன்னெடுக்க ஆரம்பித்தது.
1988 இன் பிற்பகுதியில் கல்முனைப் பகுதிக்கு அப்போது விஜயம் செய்த முன்னால் அமைச்சர் காலஞ்சென்ற ரஞ்சன் விஜயரட்னாவைச் சந்தித்து இது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தி ஜனாதிபதிக்கு முகவரியிட்ட மகஜர் ஒன்றையும் அச்சங்கம் கையளித்தது. ரஞ்சன் விஜயரட்ன அவர்கள் கொழும்பு திரும்பியதும் அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் காலஞ்சென்ற கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுத்ததன் பயனாக கல்முனைத் தமிழ்ப் பிரிவொன்றைத் (சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவு) திறப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை 12.01.1989 திகதியிட்ட ஆஃர்யு6ஃ89 இலக்கக் கடிதத்தின் மூலம் பணித்திருந்தது. இது விடயமாக முன்னால் பொத்துவில் தொகுதியிள் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான திருமதி.ரங்கநாயகி பத்மநாதன் அவர்கள் காட்டிய தீவிரமான அக்கறை பதிவுக்குரியது. எனினும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டினால் அது நடைபெறாமல் தடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1989 பெப்ரவரியில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் உபதலைவர் காலஞ்சென்ற திரு.கே.கணபதிப்பிள்ளை (கவிஞர் பாண்டியூரன்) தலைமையில் கல்முனைத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட சாத்வீக மறியல் போராட்டம் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாகக் கல்முனைத் தமிழ்ப் பிரிவுக்கெனத் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு (உப) அலுவலகம் ஒன்று 12.04.1989 இல் திறக்கப்பட்டு மேலதிக உதவி அரசாங்க அதிபராகத் தமிழர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஆனால் இவ்வலுவலகப் பிரிவு எல்லைகள் வகுக்கப்பட்டதாகவோ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாகவோ முழுமையான அதிகாரங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டதாகவோ அல்லாமல் ‘கல்முனைத் தமிழ்ப் பிரிவு’ எனும் பெயர்ப் பலகையுடன் பெயரளவிலேயே இயங்கி வந்தது.
இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தினர் தொடர்ந்து எடுத்துக் கொண்ட பெருமுயற்சிகள் காரணமாக 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இத்தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் கல்முனைத் தமிழ்ப் பிரிவு உள்ளடங்கலாகத் தரமுயர்த்தப்பட்ட 28 பிரதேச செயலகப் பிரிவுகளில் கல்முனைத் தமிழ்ப்பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள்யாவும் நிறைவேற்றப்பட்டன.
மேற்படி அமைச்சரவைத் தீர்மானமும் வழமைபோல் அம்பாறை மாவட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் தலையீடு காரணமாக அமுல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
1990ஃ93 காலப் பகுதியில் முனைப்பான செயற்பாடுகளில் ஈடுபட்ட அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு.து.இராமகிருஸ்ணன் இணைப்புச் செயலாளர் காலஞ் சென்ற திரு.ஆர் அம்பலவாணர் மற்றும் இக்கட்டுரை ஆசிரியர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் பணிகளும் பதிவுக்குரியவை. பின்னர் கடந்த பொது ஜன ஐக்கிய முன்னனி அரசாங்க காலத்திலும் 30.03.1998 இல் புதிய பிரதேச செயலகங்கள் சம்பந்தமாக அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் செல்வாக்குப் பிரயோகம் காரணமாக கல்முனைத் தமிழ்ப் பிரிவு முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு நடைமுறையில் தனியானதொரு பிரதேச செயலகப்பிரிவாகவும் தமிழ்ப்பிரிவானது அதிகாரமற்றதோர் உப பிரததேச செயலகப் பிரிவாகப் பெயரளவிலேயே கல்முனைத் தமிழர்களுக்குக் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இயங்கி வந்தது.
ஆனாலும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தினர் தங்கள் முயற்சிகளைக் கைவிடாது தொடர்ந்தும் செயற்பட்டனர். இச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக 1999 நடுப்பகுதியில் சங்கத் தூதுக்குழு முன்னாள் பொது நிருவாக அமைச்சர் திரு.ரட்ணசிறி விக்கிரமநாயக்கா அவர்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்நாள் அமைச்சருமான திரு.டக்ளஸ் தேவானந்தா சகிதம் இக்கட்டுரையாசிரியரின் தலைமையில் சந்தித்துப் பேசிய போது அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதிய பிரதேச செயலகப் பிரிவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பனம்பாலன தலைமையிலான ஆணைக்குழுவுக்கு வரைபடங்கள் புள்ளி விபரங்களுடன் கூடிய விபரமான அறிக்கையொன்றைச் சமர்பித்தது மட்டுமல்லாமல் இக்கட்டுரையாசிரியரின் தலைமையில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் தூதுக்குழு 1999 ஒக்டோபரில் ‘பனம்பாலன ஆணைக்குழு’ முன் நேரிலும் சாட்சியமளித்தது. ஆனால் பாராளுமன்றம் 2000 இல் கலைக்கப்பட்டதும் ‘பனம்பாலன ஆணைக்குழு’வும் செயலிழந்து போயிற்று.
இதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்பு கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தனிப்பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு கோரி கல்முனைத் தமிழ் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 24.01.2001 இலிருந்து 31.01.2001 வரை கல்முனைத் தமிழர்களால் உண்ணாவிரதப் போராட்டமொன்றும் நடைபெற்றது.
2000ம் ஆண்டின் ஆரம்பத்திலும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனைத் தமிழர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்தியுமிருந்தனர். 2001ம் ஆண்டின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர் சங்கத்தின் தூதுக்குழுவொன்று கொழும்பு சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக முன்னாள் பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள், நிருவாக மறுசீரமைப்பு அமைச்சர் காலஞ்சென்ற றிச்சர்ட் பத்திரனவைச் சந்தித்து இது விடயமாகப் பேசியதுடன் இவ்விடயம் அப்போதைய ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவேயில்லை.
காலத்துக்காலம் பதவியிலிருந்த அரசாங்கத்திடம் மட்டுமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடங்களிடமும் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த சகல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தினர் கொழும்பு வந்து அவர்களை நேரில் சந்தித்து பலதடவைகள் முறையிட்டிருக்கிறார்கள். கிடைத்தது உறுதி மொழிகளே தவிர உருப்படியாக ஒன்றும் நடைபெறவேயில்லை.
கல்முனைத் தமிழர்களுடைய நீண்ட காலக் கோரிக்கைகளான தனியான பிரதேச சபைக் கோரிக்கையும் கல்முனை உபபிரதேச செயலகப் பிரிவைப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தும் கோரிக்கையும் கிணற்றுக்குள்ளே போட்ட கல்லாகக் கிடக்க கல்முனைப் பிரதேச சபையானது 11.06.1999 இலிருந்து அமுலுக்கு வருமாறு 1998.12.11 திகதியிட்ட 1057ஃ16 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ‘கல்முனை நகரசபை’ எனும் பெயரில் நகரசபையாக்கப்பட்டுப் பின் 15.04.2002 இலிருந்து மாநகரசபையாக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு துண்டாடப்பட்டு 100 மூ முஸ்லிம்களைக் கொண்ட ‘சாய்ந்தமருது பிரதேசசெயலகம்’ 2001 இல் உருவாக்கப்பட்டது. தமிழர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கும் முஸ்லிம்களின் தமிழர்களுக்கு எதிரான நியாயமற்ற கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுவதற்கும் காரணியாக அமைந்திருப்பது ‘அரசியல் செல்வாக்கு’ என்ற ‘துரும்பு’ தான் என்பது காலம் கற்றுத்தந்துள்ள பாடமாகும்.
கடந்த 65 வருடகால அரசியல் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்த வரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியோ – தமிழர் விடுதலைக் கூட்டணியோ – தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ முஸ்லிம் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக பொருளாதார அரசியல் பாரபட்சங்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை அற்றிருந்தார்கள் என்பதே உண்மை மட்டுமல்ல அதற்கான உளப்பாங்கும் இக்கட்சித் தலைமைப் பீடங்களில் இருக்கவில்லை. ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று கூறிக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் இக்கட்சிகள் நடந்து கொண்டமை தமிழர்களுக்கு விரோதமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மறைமுகமான ஊக்கியாக அமைந்தது. மேலும் தமிழர்கள் அபிவிருத்தியைப் புறக்கணித்து விடுதலைப் போராட்ட அரசியலில் மட்டுமே முனைப்புக் கொண்டிருந்த காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் இணைந்து அமைச்சர்கள் உட்பட பல பதவிகளைப் பெற்றுத் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார்கள். தமிழர்களுடைய அரசியல் தலைமைகள் பதவி நாற்காலிகளைப் பற்றிக் கொள்வதற்காகத் தேர்தல்களில் வாக்குச் சேகரிக்கும் தந்திரோபாயமாக மக்களை உணர்ச்சியூட்டி வந்தார்களே தவிர அவர்களை அறிவூட்டவில்லை. தமிழர்களும் தமிழ் அரசியல் தலைமைகளின் உணர்ச்சியூட்டும் பேச்சுகளாலும் நடவடிக்கைகளாலும் மேலும் மேலும் உசுப்பேற்றப்பட்டு பட்டுவேட்டிக் கனவுலகில் சஞ்சரித்து இன்று இடுப்பிலே கட்டியிருந்த கோவணத்தையும் இழந்து நிற்கிறார்கள். இந்த நிலையில்தான் அரசியல் களநிலைமையையும் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு கல்முனைத் தமிழர்கள் தங்கள் சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகக் கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தை வென்றெடுக்கும் நோக்கில் அரச ஆதரவு சக்திகளை நாடினார்கள்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுப்பதை எதிர்க்கின்றது. அரச ஆதரவு சக்திகளை நாடிய தமிழர்களைச் சாடுகிறது. இப்பிரச்சனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சனை என்று வாதிட்டு தமிழர்களின் அறிவுபூர்வமான அணுகுமுறையைத் திசை திருப்பப் பார்ப்பது மட்டுமல்லாமல் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் முயற்சிக்கிறது. கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் பாரபடசமற்ற நிர்வாகம் சம்பந்தமானது. அதனை அரசாங்கத்திடம் கோரிப் பெறவேண்டுமே தவிர இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பேசித் தீர்க்கும் விடயம் அல்ல. மேலும்1993ம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானத்தின் தொடர் நடவடிக்கையாகவே இவ்வுப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளுகிறதே தவிர இவ்விடயம் புதியதல்ல என்பதையும் இதனை ஒரு தமிழ் – முஸ்லிம் முரண்பாடாகப் பார்க்கக்கூடாது என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை எதிர்க்கும் முஸ்லிம் காங்கிரஸ் பின்வரும் விடயங்களைக் காரணமாக முன்வைக்கின்றது.
தரமுயர்த்தப்படவுள்ள கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்குகின்றன என்பதால் அவை முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாம். இம்முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள இடப்பரப்பு முன்பு தமிழர்களுக்குச் சொந்தமானவையாக இருந்து பின்னாளில் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டவை என்பதையும் இவ்வர்த்தக நிலையங்கள் கல்முனைத் தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைவது பூகோள ரீதியாகத் தவிர்க்கமுடியாதது என்ற யதார்த்தத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்து செயற்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள்ளும் மண்முனைவடக்கு பிரதேச செயலக எல்லைக்குள்ளும் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் அமைத்திருப்பது போன்றுதான் இதுவும் பூகோள ரீதியாகத் தவிர்க்க முடியாதது.
முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் மற்றுமொரு காரணம் தரமுயர்த்தப்படவுள்ள கல்முனைத் தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் நிலத்தொடர்பற்ற முறையிலே முஸ்லிம்கள் அடங்குவது தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்துமாம். இது ஆதாரமற்ற வெறும் குதர்க்க வாதமாகும்.
கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தெற்கே கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை (கடற்கரைப் பள்ளி வீதி) எல்லையாகக் கொண்டு வடக்கே பெரிய நீலாவணைக் கிராமம் வரை அதாவது வடக்கு எல்லையாக மட்டக்களப்பு மாவட்டமாகவும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லைகளாகக் கொண்டு அமையும் போது நிலத்தொடர்பற்ற என்ற பேச்சுக்கே இடமில்லை. அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் பல தமிழ்க்கிராமங்கள் அமைந்திருப்பதும் அதேபோல் சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் எல்லைக்குள் பல தமிழ்க் கிராமங்கள் அமைந்திருப்பதும் இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாணிக்கமடு எனும் தமிழ்க்கிராமம் அமைந்திருப்பதும் அட்டாளைச்சேனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் திராய்க்கேணி எனும் தமிழ்க்கிராமம் அமைந்திருப்பதும் நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் எனும் தமிழ்க் கிராமம் அமைந்திருப்பதும் காரைதீவு தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு போன்ற முஸ்லிம் கிராமங்கள் அமைந்திருப்பதும் போன்றதுதான் உத்தேச கல்முனைத் தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மருதமுனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் எனும் முஸ்லிம் வாழ்விடங்கள் அமைய இருப்பது. இது தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்குமே தவிர ஊறுவிளைவிக்க மாட்டாது. இவ்விடயத்தைத் தமிழ் – முஸ்லிம் முரண்பாடாகக் கற்பிதம் செய்வது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவறான கண்ணோட்டத்தையும் தமிழர் விரோத மனப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது. மேலும் இவ்விடயத்தைக் குழப்பியடிப்பதற்காக இவ்விடயம் குறித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பேச வேண்டும் என்கிறது. இதுவும் அவசியம் அற்றது. அரசாங்கம் கல்முனைத் தமிழர்களின் நியாயபூர்வமான யதார்த்தபூர்வமான எதிர்பார்ப்பை உணர்ந்து கடந்த இருபத்தைந்து வருடங்களாக உபபிரதேச செயலகமாக இயங்கிவந்த ஒரு பிரிவை சகல அதிகாரங்களும் கொண்டதொரு பிரதேச செயலகப் பிரிவாகத் தரமுயர்த்த மேற் கொள்ளும் நிர்வாக நடவடிக்கையையிட்டு ஏதோ ஒரு புதிய பிரச்சனைபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஏன் பேச வேண்டும்? கடந்த காலத்தில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அனைத்துக் கட்சிமாநாடு நடந்து கொண்டிருந்த போது தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் இரு வெவ்வேறு சிறுபான்மைச் சமூகங்கள் தமிழர்களுக்குரிய உரிமைகளை இந்நாட்டு அரசாங்கம்தான் வழங்கவேண்டும். அதேபோல் முஸ்லிம்களுக்குரிய உரிமைகளையும் இந்நாட்டு அரசாங்கம்தான் வழங்க வேண்டும். ஆகவே இனப்பிரச்சினைக்குரிய தீர்வு குறித்தோ முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தோ தமிழர்தரப்புடன் பேச வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை என்ற பொருள்பட ஊடகங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் பகிரங்கமாக அறிக்கையிட்டதை இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைமை நினைத்துப் பார்த்தல் பொருத்தம்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் தமிழர் தரப்பின் மீதான வேண்டுமென்ற குற்றச்சாட்டு அரசுக்கு ஆதரவான சிங்களப் பிரமுகர்களின் ஆதரவைத் தமிழர் தரப்பினர் நாடுகிறார்கள் என்பது. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு தமிழ் அரசியல் தலைமை வல்லமையற்றிருக்கும் நிலையில் தமிழர்தரப்பினர் அரச ஆதரவு சக்திகளை நாடுவது இயல்புதானே. முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டுதானே தங்கள் சமூகத்தின் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதனைத் தமிழ்ச்சமூகத்தினர் செய்தால் தவறா?
நிறைவாக இன்று எழுந்துள்ள பூகோள அரசியல் – பிராந்திய அரசியல் – தென்னிலங்கை அரசியல் – வட இலங்கை அரசியல் – கிழக்கிலங்கை அரசியல் சூழ்நிலைகளின் பின்புலத்தில் பார்க்கும் போது கிழக்கு மாகாணத்தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடான ஓர் புதிய சுயமான மாற்று அரசியல்தளமொன்றின் தேவையைக் குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குத் தேவை என்பதை கல்முனைத்தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது.
நடைமுறையில் எந்த உருப்படியான நிகழ்ச்சித் திட்டமும் இல்லாமல் வெறுமனே தமிழ்த்தேசியம் பற்றித் தங்கள் அரசியல் இருப்புக்காக வாயளவில் மட்டுமே பேசுகின்ற போலித்தமிழ் அரசியல் தலைவர்களை இனங்கண்டு நிராகரிப்பது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தமிழர்கள் அனைவரும் தங்களுக்கென்று ஓர் புதிய சுயமான மாற்று அரசியல் தளத்தில் ஐக்கியப்பட்டால் மட்டுமே கிழக்குத் தமிழர்கள் தங்கள் எதிர்கால சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்கவைத்துப் பேணிப் பாதுகாக்க முடியும். அதனைவிடுத்து கடந்த 65 வருடகாலமாக நடந்து வந்த அரசியல் பாதையிலேயே தொடர்ந்து செல்வோமானால் கிழக்குத் தமிழர்கள் காணாமல் போய்விடுவது வெகுதூரத்தில் இல்லை. இதனையிட்டு கிழக்கு மாகாணத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய சரியான கால கட்டமும் இதுவே.
READ MORE | comments

பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்


நாசா கடந்த புதன்கிழமை கனிம வளம் மிக்க பூமியை போன்ற புதிய கோள்களை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. 

அதன் படி செழிப்பான புதிய 715 உலகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருப்பதாக கூறியுள்ளது. வழக்கம் போல நாசாவின் கெப்ளர் தொலைநோக்கிதான் இதையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. 

இதற்காக கெப்ளர் தொலைநோக்கிக் குழுவுக்கு நாசா நன்றி கூறியுள்ளது. 

கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புரிந்து வருகிறது.. 

"இந்த ஆராய்ச்சிதான் நாங்கள் கனிம வளங்கள் நிறைந்த, செல்வச் செழிப்பான, மனிதர்கள் வாழத்தகுந்த புதிய கிரகங்களை கண்டறிய உதவி புரிந்தது" என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். 

அப்புதிய 715 கோள்களும் 305 வெவ்வேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த புதிய கிரகங்களில் 95 சதவீத கோள்கள் பூமியை போன்றே பரப்பளவு, தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அங்கு மனிதர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கான நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது. 

எப்படியோ "இரண்டாம் உலகம்" நிஜத்திலும் இருக்கலாம் என்று நிரூபித்துள்ளது இந்த புதிய கண்டுபிடிப்பு. சொல்ல முடியாது ஒரு வேளை நம்மை போன்ற உருவ அமைப்பினர் அங்கு வசித்து வரக்கூட சாத்தியம் இருக்கலாம். 
READ MORE | comments

அக்கரைப்பற்றில் மனிதனும் யானையும் சடலமாக மீட்பு; மின் வேலியில் சிக்கி உயிழந்திருக்கலா மென சந்தேகம்

குடும்பஸ்தர் ஒருவரும் யானை ஒன்றும்  உயிரிழந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் பகுதியிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.

ஆதம்பாவா யாக்கூப் (48) என்னும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் தான் வளர்த்து வரும் மூன்று மாடுகளில் ஒன்று வீட்டிற்கு வராமையால் அதனைத்  தேடிக் கொண்டு நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் சென்றவர் இறந்த நிலையில் அஷ்ரஃப் நகர் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக் காணியொன்றில் சடலமாக மீட்கப்பட்டார். 

இதேவேளை இறந்தவரின் சடலம்  உள்ள இடத்திலிருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் யானையொன்று காயங்களுடன் இறந்த நிலையில் காணப்படுகின்றது.

யானை துரத்தி வந்ததால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவென ஓடி வந்த நிலையில் அப்பகுதி விவசாயிகளால் பாதுகாப்பிற்கென சட்ட விரோதமாக போடப்பட்ட மின்கம்பியில் தாக்குண்டு இறந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கேற்றால் போல் இறந்தவரின் கைகள் மற்றும் உடம்பில் எரிகாயங்கள் காணப்படுகின்றன.இறந்தவர் பாலமுனை ஹிறா நகர்ப் பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

விவசாயியான இவர் சில வேளைகளில் இரவு நேர வேட்டைக்குச் சென்று வருபவர் எனவும், யானை தன்னை தாக்க வந்தபோது இவர் யானையினை சுட்டு விட்டு தப்பிக்க முற்பட்ட வேளை மின்கம்பியில் சிக்குண்டு தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

இறந்தவரின் தோளில் சொட்கண் ரக துப்பாக்கி காணப்பட்டது. மக்கள் குடியிருப்பு பகுதியினை நோக்கி ஒடி வந்த நிலையில் மின்கம்பியில் தாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார். இது பற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


READ MORE | comments

மட்டக்களப்பு வந்தாறுமூலை ம.வி. இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

வருடாந்த இல்லங்களுக்கிடையிலான திறனாய்வு போட்டியானது சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி தலைமையில் இன்று (26.02.2014) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு அவர்களும் பிரதேச அபிவிருத்திகுழு இணைப்பாளர் திரு.ஆ.தேவராஜா மற்றும் பாடசாலை அதிபர்கள் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.சுபாஸ்சந்திரன் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ரீ.ரமேஸ் தீப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்க்கப்பட்டு கொடியேற்றல் நிகழ்வுடன் வலயக்கல்விப் பணிப்பாளரினால் விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்துடன் இல்ல மாணவர்களினால் ஒலிம்பிக் தீபமேற்றப்பட்டு அனைத்து விளையாட்டுக்களும் இடம்பெற்றது. விளையாட்டுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது. அதிதிகளுக்கான நினைவு பரிசில்களும் பாடசாலை அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் பாடசாலையின் அதிபர் மற்றும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது. நல்லையா ராமகிருஸ்ணா விவேகானந்தா விபுலானந்தா இல்லங்களுக்கிடையில் அதிகூடிய விளையாட்டுகளில் வெற்றிபெற்ற இல்லங்கள் மற்றும் இல்ல அலங்காரத்துத்தில் வெற்றி பெற்ற இல்லங்களுக்குமான வெற்றி கேடயங்களை வலயக்கலிவ் பணிப்பாளரினால் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. மழைக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதி வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பாடசாலையின் ஆசிரியாகள்; மற்றும் மாணவர்களின் சிறந்த உத்துழைப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
               
              
              
              
              
             
READ MORE | comments

இதெப்படி .? நம்ப முடிகிறதா ..?-கொலைகாரனை காட்டி கொடுத்த கிளி-

இந்தியா ஆக்ரா பகுதியில் ஊடக பெண்மணி ஒருவர் அவரது வீட்டில் கொலை செய்ய பட்டு கிடந்தார்
அவருடன் அவரது வளர்ப்பு நாயும் படுகொலை செய்ய பட்டிருந்தது .

இந்த கொலையின் முடிச்சை அவிழ்க்க குற்ற தடுப்பு பிரிவினர் பெறும் சிரமத்தை எதிர்நோக்கினர்
ஆனால் அதே வீட்டில் அவர் வளர்த்த செல்லப்பறவை கிளி நடந்த படுகொலைகள்
அனைத்தையும் பார்வை இட்டவாறு பதுங்கி இருந்தது .

ஆனால் அது அவர்களது மொழியில் பேசும் திறன் கொண்டதாக இருந்தது .

இதை அடுத்து பொலிசாரை கண்டதும் கிளி அவர்களது பாசையில் பேச தொடங்கியுள்ளது .
உடனே சுதாரித்த அவர்கள் அவர்களது குடும்ப உறவுகளுடன் கிளியின் பேச்சை உற்று கேட்கும் படி கூறவும் கொலையை செய்தவர் மாட்டினார் .

அவரது பேரையும் அது கூறியது .பிடிபட்ட குற்றவாளி தானே அந்த கொலையை செய்ததாக வேறு ஒப்பு கொண்டதும்
அந்த பகுதியில் குறித்த கிளி பிரபலமானது ..

இன்னும் சொல்ல போனால் வரும் மணித்துளிகளில் குறித்த கிளி தொலைகாட்சிகளில்
தோன்றவும் வாய்ப்பு இருக்கு .

இதுதாங்க மனிசருக்கும் செல்ல பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ..
READ MORE | comments

மூன்று குழந்தைகள் ஒன்றாக பிறந்ததால் வீட்டுக்கு வர மறுக்கும் பெண்

அமெரிக்காவின் பென்சில்வேனியா அருகேயுள்ள அபிங்டன் நகர ஆஸ்பத்திரியில் பிரசவித்த ஒரு பெண் வீடு திரும்பும் நாள் நெருங்குவதை அறிந்து கலக்கம் அடைந்துள்ளார். சாதாரணமாக வயிற்றில் குழந்தையை சுமந்தபடி, பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், பெற்ற குழந்தையை கையில் ஏந்தியபடி வீட்டுக்குள் நுழையும் அந்த முதல் அனுபவத்துக்காக கற்பனைகளிலும், கனவுகளிலும் மிதந்தபடி மாதக்கணக்கில் காத்துக் கிடப்பதுண்டு. ஆனால், அபிங்டன் மெமோரியல் ஆஸ்பத்திரியில் கடந்த 5-ம் தேதி அடுத்தடுத்து 3 அழகிய பெண் குழந்தைகளை பிரசவித்த அலிசன் ரோவா விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். பிரசவத்துக்கு முன் தினம் வரை ஓடியாடி வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த அலிசன் ரோவா, தற்போது வீடு திரும்பிய பிறகு 3 குழந்தைகளையும் பராமரிக்க என்ன பாடுபட வேண்டியிருக்குமோ…?

என கலக்கமடைந்துள்ளார். ஒரு லட்சம் பெண்களில் ஒருவருக்குதான் இதைப்போல ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்பது விந்தையான விஷயம் தான் என்ற பாராட்டு மழையில் அலிசன் ரோவா நனைந்து வருகிறார்.

எனினும், முதல் முறை தாயாகியுள்ள இவர், மூன்றாவது குழந்தைக்கு பாலூட்டி முடித்த அடுத்த 15-வது நிமிடத்தில் மீண்டும் முதல் குழந்தைக்கு பாலூட்டத் தொடங்கும் புதிய அனுபவத்துடன், இவர்களின் இதர தேவைகளையும் எப்படி நிறைவேற்றுவது? என்பதைப் பற்றி இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருக்கிறார். –
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |