கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு குருக்கள்மடம் என்னும் பேரூருக்கு சமய, சமூக, பண்பாட்டுப் பாரம்பரியம் மிக்க வரலாற்றுச் சிறப்புக்கள் நிறைய உண்டு. பெயருக்கு பல கிராமங்கள் உண்டு. ஆனால் பலவகைகளிலும் சிறப்புற்று பெயர் பெற்றதாலேயே பேரூர் என பெயர்பெற்று புகழூராகியுள்ளது.
இப்புகழூரில் தான் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட (1700 வருடங்களிற்கு முன்) காலப்பகுதியில் இந்தியாவிலுள்ள வேதாரணியம் என்னும் இடத்திலிருந்து குரு என்று அழைக்கப்படும் உலக குருநாதர், ஈழத்துக் கந்தன் என அழைக்கப்படும் கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக தமது பரிவாரங்களுடன் மட்டக்களப்பு வழியாக வந்துள்ளார். வரும்போது, ஆலயம் அமைந்துள்ள இவ்விடத்தின் இயற்கை எழில்களையும் வசதிகளையும் கண்டு சிறிது காலம் ஓய்வெடுத்துள்ளார்.
மீண்டும் தமது பாதயாத்திரையை தொடர்ந்து கதிர்காமத்தை அடைந்து கதிர்காமக் கந்தனை மனமுருக வேண்டி வழிபட்ட பின்னர் மீண்டும் குருக்கள் மடத்திற்கு வந்து இவருக்கென்று ஒரு மடம் அமைத்து முருகனை வழிபடுவதற்காக கதிர்காமத்திலுள்ளது போன்று கொத்துப்பந்தல் அமைத்து இங்கு வழிபட்டு வந்தார்.
இவ்வாறு இருக்கும்வேளையில் உலக குருநாதர் உடல் நலம் குன்றியமையினால் தான் நோய்வாய்ப்பட்டு இருப்பதை நன்கு உணர்ந்த நிலையில், மேலும் உடல் தளர்ச்சி அடைந்தமையினால் இனி தான் இவ் உலக வாழ்க்கையை முடித்து ஆண்டவனிடம் செல்லப்போவதை இறையருளால் உணர்ந்து தான் தொடர்ந்த பயணத்தினையும், தன்னையும் நினைத்து வருந்தினார்.
ஒரு நாள் உலக குருநாதர் தான் வழிபட்டுவந்த முருகப்பெருமானான கொத்துப்பந்தலில் இருந்தவாறு "கதிர்காமக் கந்தா எனக்கொரு வழிகாட்டு" என்று உள்ளம் உருக வேண்டினார். அப்போது கதிர்காமக்கந்தன் அவர் வழிபட்ட கொத்துப்பந்தலில் காட்சி கொடுத்ததாகவும் இதனை உலக குருநாதர் கண்குளிரக்கண்டு பேரானந்தம் அடைந்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
உலக குருநாதர் தான் அமைத்து முருகனை வேண்டி வழிபட்ட கொத்துப்பந்தலில் கதிர்காமக் கந்தனின் காட்சியை நேரடியாக கண்ட மகிழ்ச்சியில் கொத்துப்பந்தலை கற்கோயிலாக அமைத்து 'சின்னக் கதிர்காமம்' என்று பெயர்சூட்டி இறையடி சேர்ந்தார்.
எனவே உலக குருநாதர் அமைத்த இவ் ஆலயம் காலப்போக்கில் செல்லக்கதிர்காமமாக மருவி இன்று ஸ்ரீல ஸ்ரீசெல்லக்கதிர்காமம் என அழைக்கப்படுகின்றது. இதேபோல் குரு என்று அழைக்கப்படும் இந்த உலக குருநாதரின் பெயரில் இக்கிராமம் குருநாதர் மடம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் குருக்கள் மடம் என இப்போது அழைக்கப்படுகின்றது.
இந்த ஆலயத்திற்கண்மையில் மணல் மேடுகள் காணப்படுகின்றன.. அந்த மணல் மேட்டில் இருந்து கற்தூண்கள், கல் உத்திரங்கள், பண்டைய கால அவ்விடத்தின் அமைவுத்தடயங்கள், கற்சிலைகள் (ஏறக்குறைய 7 அடி உயரமான தெய்வச்சிலை) என்பன அந்த மண்மேட்டில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மண் மேட்டை இவ்வூர் மக்கள் ' வேதப்பிட்டி' என அழைத்து வந்தனர். வேதப்பிட்டியில் கண்டு எடுக்கப்பட்ட 7 அடி உயரமான கற்சிலையை கல்லுப்பிள்ளையார் என்னும் பெயரில் ஆலய வளாகத்தில் வைத்து மக்கள் வழிபடுவதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த வேதப்பிட்டியில் கண்டெடுக்கப்பட்ட புதையல் பொருட்களை வைத்து நோக்கும்போது இவ்விடயத்தில் சமயம் போதிக்கும் மடமோ அல்லது வேதப்பாடசாலையோ ஒன்று இருந்திருக்கவேண்டும் என்பது புலனாகின்றது. இந்த மடத்தில் உள்ள குருக்கள் ஒருவரினால் சுருதி நூல் முறை என்ற அத்வைத வேதாந்த நூல் எழுதப்பட்டு இந்த மடத்திலேயே வைத்து நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது என்று வரலாறு கூறுகின்றது.
சமயம் போதித்த இந்த மடம் இருந்த வேதப்பிட்டி என்னும் இடத்தில் இன்று குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலயம் இயங்குகிறது, அதுமட்டுமில்லாது, ஆலய வளாகத்திலே இப்போது மாடிக்கட்டடத்தில் நூல் நிலையம் அமைத்து மக்களிற்கு அறிவை வளர்ப்பதற்கு உதவுகின்றது. குருநாதர் அவர்கள் ஆலயத்திற்கு என்று ஆலய வளாகத்தில் நந்தவனம் ஒன்று அமைத்து பூ மரங்கள் நட்டு பூசை வழிபாட்டிற்குத் தேவையான மலர்களை நந்தவனத்திலிருந்து எடுத்து வந்து முருகப்பெருமானை பூக்களால் அலங்கரித்து வழிபட்டு வந்தார். காலப்போக்கில் அவ்விடத்தில் தென்னை மரங்கள் வைத்து இப்போது தென்னந்தோட்டமாக காட்சியளிக்கின்றது.
ஆலயத்தின் பின்புறத்தில் வங்கினா (சகல வசதிகளையும்கொண்ட கட்டடம்) என்று பலராலும் அழைக்கப்படும் இந்த இடத்திற்குப் பின்னால் இவ் ஆலயத்திற்கு என்று அமைக்கப்பட்ட தீர்த்தக்குளம் காலப்போக்கில் கைவிடப்பட்டு இப்போது தீர்த்தோற்சவம் மிகச் சிறப்பாக இந்து சமுத்திரத்தில் நடைபெறுகின்றது.
ஆலய பரிபாலனசபைக் கூட்டம் நடைபெறுவதற்காக இவ் ஆலயத்திற்கு என்று குருக்கள் மடம் கிராமத்திற்கு மத்தியில் கூட்டத்துவளவு என அழைக்கப்படும் காணியும் உள்ளது. மழைக்காலம் வந்துவிட்டால் தானாகவே ஆலயத்திற்கு அண்மையில் நீரோடை உருவாகி ஆலயத்தை மேலும் சிறப்புற வைக்கின்றது.
இந்த நீரோடை நெடுஞ்சாலையை ஊடறுத்துச் செல்வதற்காக ஆலயத்திற்கு முன்னால் தாம் போதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ் ஆலயத்திற்கு என்று மிக அண்மையில் சித்திரத்தேர் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்புக்களும் பெற்று விளங்கும் இவ் ஆலயத்திற்குள் கடந்த 01.06. 2013 ஆம் திகதி இனந்தெரியாத விஷமிகள் புகுந்து ஆலய விக்கிரங்கள் (19) பத்தொன்பதை உடைத்து சேதப்படுத்திய பின்னர் கிராமமக்களினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும் நிதி உதவிகளைப் பெற்று சிறப்பான முறையில் புனரமைக் கப்பட்டுள்ளது.
நாளை கிரியைகள் ஆரம் பிக்கப்பட்டு 8ஆம் திகதி எண்ணெய் க்காப்பும் 9ஆம் திகதி அன்று மஹா கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து நடை பெறும் நிகழ்வுகளைய டுத்து 21ஆம் திகதி அன்று சங்காபிஷேகத்துடன் ஏககுண்ட கும்பாபிஷேக நிகழ்வு கள் முடிவுறும்.
0 comments: