Home » » இலங்கையை புரட்டிப்போட்ட பாரிய அசம்பாவிதம்! அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!

இலங்கையை புரட்டிப்போட்ட பாரிய அசம்பாவிதம்! அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!

சிறிலங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தாக்குதல்களை தற்கொலை குண்டுதாரிகளே நடத்தினர் என்றும், ஒரே குழுவினரே நன்கு திட்டமிட்டு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 13 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நேற்று பிற்பகல் தெமட்டகொடவில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.
அப்போது தெமட்டகொட அடுக்குமாடி வீட்டு மறைவிடத்தில் இருந்து ஒருவர் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைக் கண்டுபிடிக்க சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தியும் தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டது.
அத்துடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. 
அந்தக் காரில் ஷங்ரி-லா விடுதியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரும் மற்றொரு வானுமே, தற்கொலைக் குண்டுதாரிகளையும், குண்டுகளையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
குண்டுகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வான், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் வீதியில் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் தங்கியிருந்த இடம் என்று சந்தேகிக்கப்படும், வீடு ஒன்றும் நேற்று மாலை பாணந்துறை வடக்கு சரிக்கமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |