கோட்டாபய ராஜபக்ச நாளை புதன் கிழமை (13) அரச அதிபர் பதவியிலிருந்து விலகுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து பொது மக்கள் அரசாங்கத்திற்க எதிராக கிளர்ந்தெழுந்தனர்.
ஜூலை 09இல் வெடித்த மக்கள் புரட்சி
கடந்த ஒன்பதாம் திகதி அரச அதிபர் மாளிகை, அரச அதிபர் செயலகம் என்பன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமறைவாகியிருந்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் கோட்டாபய, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையங்களின் இடையே விமானப்படை உதவியுடன் தனது பாதுகாப்பிற்காக பிரயாணங்களை மேற்கொண்டதாகவும் பின்னர் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியிருந்தன.
உறுதியான தகவலை வெளியிடாத சபாநாயகர்
அதேவேளை, சபாநாயகர் பிபிசிக்கு வெளியிட்ட தகவல்களில், கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், சற்று நேரத்திலேயே கோட்டாபய நாட்டைவிட்டு தப்பிச் செல்லவில்லை என்று சபாநாயகர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் பதவி விலகுவார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், கோட்டாபய தனது பதவியிலிருந்து விலகுவது குறித்து பிரதமர் ரணிலிடம் உறுதியளித்துள்ளதாகவும், அவர் தனது வாக்குறுதியின் பிரகாரம் நாளை புதன்கிழமை அதிபர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் பிரான்சின் ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
0 Comments