Home » » கணவனை திட்டமிட்டு கொலை செய்த காதல் மனைவி; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

கணவனை திட்டமிட்டு கொலை செய்த காதல் மனைவி; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு



“அப்பா, நான் உங்களைப் பார்க்க வேண்டும், நீங்கள் இங்கு வருக்கிறீர்களா ?”“வருகிறேன் மகளே”
“அப்பா நீங்கள் வரும் வரை பார்த்துக்கொண்டே இருப்பேன்”
அன்பு மகளின் குரலை கேட்ட திலின பெரேராவுக்கு உடனே மகளை பார்க்க வேண்டும் போலிருந்தது. அப்போது நேரம் மாலை 5.30 .
இந்த நேரத்தில் அங்கு போகிறாயா என திலினவின் தாயார் கேட்ட போது, ஆம் அம்மா, மகளை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன், என்னை பார்க்க வேண்டும் என ஆசையாக கூறுகிறாள் என தன் தாயாரிடம் கூறிவிட்டு மகளை பார்க்க திலின புறப்பட்டுள்ளான்.

மகளை பார்க்க ஆசையாய் சென்ற திலினவிற்கு அது கடைசி பயணம் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை .
திலின (வயது 25) சதுரியை காதலித்து திருமணம் செய்து கொண்டான். இருவீட்டார் சம்மதத்துடன் நடைப்பெற்ற திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே கழிந்தது, ஒரு பெண் குழந்தை பிறந்தது. சொந்த வீடு கட்டவேண்டும், குழந்தையை நன்றாக பார்த்து க்கொள்ள வேண்டும் என 2015 ஒக்டோபர் மாதம் வெளிநாட்டுக்கு பயணமாகினான் திலின.

கணவன் வெளிநாடு சென்ற பின் மதுஷி தன் மகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளாள். திலின மாதம் தவறாமல் மனைவி மற்றும் மகளின் செலவுக்காக தேவையான பணத்தை அனுப்பி வந்துள்ளான்.

மாதங்கள் உருண்டோடின. மதுஷி தொடர்பில் குவைட்டில் இருக்கும் திலினவுக்கு ஒரு செய்தி கிட்டியது. அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனான். தான் காதலித்து திருமணம் முடித்த காதல் மனைவி வேறொருவருடன் காதலில் இருப்பதாக தகவல் கிடைக்க திலினவால் அங்கு நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. உடனே நாடு திரும்பியுள்ளான். தனது மகளின் எதிர்காலத்திற்காக மனைவியிடம் அவன் எதையுமே விசாரிக்கவில்லை. மனதை சந்தேகப் பேய் முற்றாக ஆட்கொண்டிருந்தது.

திலின மனைவியையும் மக்களையும் அழைத்துக் கொண்டு தனி வீட்டுக்கு சென்ற போதும் சில மாதங்களிலேயே , திலின, மதுஷிக்கு இடையில் கருத்து மோதல்கள் ஆரம்பித்தன . வீட்டில் சண்டைக்கு பஞ்சமில்லாமல் போனது.
இந்த நிலையில், இனி திலினவுடன் வாழ முடியாது என தன் மகளுடன் தாய் வீட்டுக்கே சென்றுவிட்டாள். திலின தன் வீட்டுக்கு சென்றுவிட, மகளை பார்க்க தோன்றும் போதெல்லாம் அங்கு சென்று தன் மகளை பார்த்து வந்துள்ளான். மதுஷி தொடர்பில் சந்தேகம் எழும் போதெல்லாம் அங்கு சென்று சண்டையிட்டுள்ளான். இது மதுஷிக்கு மட்டுமல்ல அவளது குடும்பத்திற்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலையியே இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்ட மதுஷி தன் குடும்பத்தாருடன் இணைந்து திட்டம் போட்டுள்ளாள். தன் மகள் மூலமாக திலினவை வீட்டுக்கு அழைக்க முடிவு செய்துள்ளாள். நடக்க போகும் விபரீதம் தெரியாமல் அந்த சிறிய குழந்தையும் “அப்பா உங்களை பார்க்க வேண்டும் போல உள்ளது இன்றே வீட்டுக்கு வாருங்கள்..” என கூற, திலினவும் மகளின் பேச்சை தட்டமுடியாமல் மகளை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளான். ஆனால் அங்கு மதுஷி, அவளது தந்தை, இன்னும் சில இளைஞர்கள் என ஒரு கூட்டமே சேர்ந்து திலினவை கட்டிபோட்டு சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
இக்கொலை விவகாரம் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல பொலிஸார் உடனடியாக திலினவின் மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தினர். இதற்கு மேலாக இக்கொலைக்கு உதவிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டாலும் இக்கொலையை மதுஷி மற்றும் அவளது தந்தை திட்டமிட்டு செய்தாக நீதிமன்றில் உறுதியான நிலையில் கடந்த வாரம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. 2017.மே மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்று வந்தது. இதில் திலினவின் மனைவியான மதுஷி முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன் அவருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும், அவளது தந்தைக்கு இரண்டு வருட கடூழிய சிறை தண்டனையும் விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க கடந்த 27ஆம் திகதி தீர்ப்பு வழங்கினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |