Home » » அமெரிக்க பிரதிநிதிகள் சபை அறிமுகப்படுத்திய தீர்மானம் குறித்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்!

அமெரிக்க பிரதிநிதிகள் சபை அறிமுகப்படுத்திய தீர்மானம் குறித்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்!

 


அமெரிக்க பிரதிநிதிகள் சபை அறிமுகப்படுத்திய தீர்மானம் வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரசில் உள்ள ஒத்த கருத்துடைய எல்.ரீ.ரீ. அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகத் தென்படுவதாகவும் கூறியுள்ளது.


திரு. பில் ஜோன்சன், திரு. டேனி கே. டேவிஸ், திரு. பிரெட் ஷெர்மன் மற்றும் திருமதி. கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளுடன் இணைந்து பிரதிநிதி திருமதி. டெபோரா கே. ரோஸினால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2021 மே 18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இல. H.RES.413 தீர்மானம் குறித்து வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்தத் தீர்மானம் 2021 மே 18 ஆம் திகதி வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான சபைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீர்மானத்தின் நோக்கத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்பும் வகையில், ஆதாரமற்ற, நிறுவப்படாத மற்றும் அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்சமான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல, மாறாக அமெரிக்கா உட்பட 32 நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரசில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகத் தென்படுகின்றது என்றும் வெளிவிவகார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது பிரதிபலிப்பை வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை, ஆசியா தொடர்பான துணைக்குழு சபை மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் கூறியது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |