(கதிரவன்)திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 18 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாகவும், 1,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிக மரணங்கள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்றுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (08.05.2021) காலை 10 மணிக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியிலேயே 07 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும், உப்புவெளி பகுதியில் 06 மரணங்களும், மூதூரில் 02 மரணங்களும், கந்தளாயில் 02 மரணங்களும், கிண்ணியாவில் 01 மரணமும் சம்பவித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 02 மரணங்கள் திருகோணமலை மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் (07ம்) திகதி இன்று காலை பத்து மணி வரைக்கும் 68 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் 18 பேர் திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
மேலும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் 08 பேரும், குச்சவெளி பிரதேசத்தில் 08 பேரும், கந்தளாய் பகுதியில் 07 பேரும், மூதூரில் 07 பேரும், சிறிபுர சுகாதார வைத்திய பணிமனைகுட்பட்ட பகுதியில் 07 பேரும், குறிஞ்சாங்கேணி பகுதியில் 05 பேரும், தம்பலகாமத்தில் 05 பேரும், கோமரங்கடவல பிரதேசத்தில் இருவரும், கிண்ணியாவில் ஒருவரும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம் கொஸ்தா தெரிவித்தார்.
0 comments: