Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக டெங்கு- மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை, ஏறாவூர் பகுதிகளில் அதிக நோயாளர்கள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக டெங்கு- மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை, ஏறாவூர் பகுதிகளில் அதிக நோயாளர்கள் கண்டுபிடிப்பு



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த மார்ச் 05 ஆந் திகதி தொடக்கம் மார்ச் 12 ஆந் திகதி வரையும் 90 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மண்முனை வடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 நோயாளர்களும், வாழைச்சேனை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 10 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நோயாளர்களும், ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி, கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 04 நோயாளர்களும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 நோயாளர்களும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களுமாக மொத்தம் 90 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவ் வாரம் வாகரை, பட்டிப்பளை, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எந்தவொரு டெங்கு நோயாளர்களும்; இனங்காணப்படவில்லை.

இவ் வருடம் டெங்கு நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 03 எனவும் டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2288 எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிகிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |