(லியோன்)மட்டக்களப்பில் இன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றுகின்ற 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்களினால் ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன .
ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலம் 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவருடன் நேரடியாக தொடர்பு பட்ட நபர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதிக்குள் சென்று வந்ததன் காரணமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் தாற்காலியமாக நிறுத்தப்பட்டு அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் ,சுயதனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments