அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது.
காரைதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்துள் நள்ளிரவில் புகுந்த யானைகள், அங்கிருந்த அரிசி ஆலையை பதம்பார்த்தது.
சுமார் ஜந்து யானைகள், இவ்வாறு நள்ளிரவில் வந்து பாரிய சேதத்தை விளைவித்த பின்னர் விடிந்தபின்னரும் அப்பகுதியில் நின்று வயல் வழியாக நகர்ந்து சென்றன.
இதனால் இரவானதும் மக்கள் அச்சத்திலுள்ளனர். ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் டெங்கு, அதற்கிடையில் யானை. மக்கள் விரக்தியில் வாழ்க்கையை கடத்துகின்றனர்.
யானைகள் அரிசி ஆலையின் முன் வாயில் கதவை இடித்துத்தள்ளிவிட்டு உள்ளேசென்று அரிசிமூடைகளை இழுத்துவந்து நன்றாக உறிஞ்சின. பின்னர் அவை அரிசி ஆலை சூழலிலுள்ள இளம் தென்னை மரங்களை புரட்டி எடுத்தன.
குலைகட்டி தேங்காய் பறிக்கும் தருணம் இந்த யானைகள் அங்கிருந்த தென்னம்பிள்ளைகளின் குருத்தை பிடுங்கி உண்டதோடு மரத்தையும் சாய்த்துவிட்டுச்சென்றுள்ளன.
அருகிலுள்ள கடையையும் உடைத்து சேதப்படுத்தியது. அண்மையில் மல்வத்தையில் ஓய்வுநிலை அரச ஊழியரொருவரை அடித்துக்கொன்றது தெரிந்ததே.
இவ்வாறான சேதப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டு போகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் விசனத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
0 Comments