இம்மாத இறுதியில் கல்வி நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்று நாம் எண்ணவில்லை. புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இம்மாத இறுதியில் கல்வி நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்று நாம் எண்ணவில்லை. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது இறுதித் தவணையை நிறைவு செய்திருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவர் தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக கல்விமான்களின் கல்வித்துறைசார் அதிகாரிகளின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
விடுமுறை தினங்களில் மாணவர்கள் தவறான பாதையில் சென்றுவிடாது கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மேமாதம் 11 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: