கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மிக மோசமான முறையில் செயற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று வைத்தியசாலையில் மேலும் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மிக மோசமான முறையில் செயற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் தற்போது கொழும்பு வைத்தியசாலையிலும் மற்றைய நபர் பொலநறுவை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மன் நாட்டிற்கு சென்று நாடு திரும்பியவர் என குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக அவர்கள் நாடு திரும்பிய போது, தனிமைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார்கள் என்றும். அவர்கள் கடுமையாக முரண்டுபிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், விமான நிலைய அதிகாரிகள் அவர்களோடு கலந்துரையாடி, ஜனாதிபதியின் உத்தரவை சரியாக நிறைவேற்றியமையினால் தொற்றுக்குள்ளானவர்கள் மூலமாக நாட்டில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பும் பயணிகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குமாறும், அது தங்கள் குடும்பங்களுக்கும் நாடு முழுவதும் வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: