Home » » பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு –புதிய நீதிபதி விசாரணையை முன்னெடுப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு –புதிய நீதிபதி விசாரணையை முன்னெடுப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக அப்துல்லா பதவியேற்றதை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்துவந்தது.குறித்த வழக்கின் சாட்சியாளராக மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா இருந்த காரணத்தினால் குறித்த வழக்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரணை செய்வதற்காக மட்டக்களப்பு சிவில் நீதிமன்றத்தின் நீதிபதி டி.சூசைதாசன் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் கொரணா அச்சம் காரணமாக இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் குறித்த வழங்கு நீதிபதி டி.சூசைதாசனினால் விசாரரணைக்கு விசேடமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வழக்கினை எதிர்வரும் சித்திரை மாதம் 02ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |