வரவுசெலவுத் திட்டத்தில் வாக்குறுதியளித்தபடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில்ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஜூலை முதலாம் திகதியிலிருந்து அரசு பணியாளர்களுக்கு 2500 ரூபா வழங்கப்படுமென நீதியமைச்சு தெரிவித்திருந்தது.
எனினும் இந்த முன்மொழிவு இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்களுக்கு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் சேபால லியனகே போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும் போது, அரசாங்கத்துக்கு உதவுவதற்காக போக்குவரத்து ஊழியர்கள் எப்போதும் தங்கள் கடமைகளில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டே தமது உரிமைகளை போக்குவரத்து சபை ஊழியர்கள் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜூன் 17 ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்தப்பிரச்சினையை விரைந்து தீர்க்க போக்குவரத்து அமைச்சர் தலையிடவேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே தபால் தொழிற்சங்கம் நேற்றுமாலை 4 மணியிலிருந்து 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: