மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை என தெரிந்து கருக்கலைப்புச் செய்ய சென்ற 7 மாத கர்ப்பிணி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் - ராமுத்தாய் தம்பதிக்கு ஏற்கவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 4வது குழந்தையாவது ஆண் குழந்தையாக பிறக்கும் என்ற ஆசையில் ராமுத்தாய் 4வது முறையாக கருவை சுமந்திருந்தார்.
7 மாத கர்ப்பிணியாக இருந்த ராமுத்தாய் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார். ஆனால், நான்காவதும் பெண் குழந்தை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், கருவை கலைக்க முயற்சித்தவர், தொட்டப்ப நாயக்கனூரைச் சேர்ந்த செவிலியர் லட்சுமியை நாடியுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் லட்சுமி, அவர் தன் வீட்டிலேயே ராமுத்தாய்க்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று கருக்கலைப்புக்காகச் சென்ற ராமுத்தாய் சிகிச்சையின் போதே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த ராமுத்தாயின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செவிலியர் லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் குழந்தை ஆசையில் 7 மாத கருவை கலைக்கச் சென்ற கர்ப்பிணி உயிரிழந்ததால், கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியினை உண்டாக்கியுள்ளது.
0 comments: