இலங்கையில் கடும் காற்று மற்றும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பில் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகமானது தற்போதும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உயர்வாகக் காணப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்சூடும்.
கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
நாட்டைச்சூழவுள்ள கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். இந்நிலை நாளை (17) காலை 6.00 மணிவரை தொடரும்.
இதன்படி கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.
0 comments: