Home » » வவுனியாவில் முக புத்தக விகாரம் பாடசாலைக்குள் மோதலில் முடிவு: மாணவர் ஒருவர் காயம்- மூன்று மாணவர்கள் பொலிசாரால் கைது

வவுனியாவில் முக புத்தக விகாரம் பாடசாலைக்குள் மோதலில் முடிவு: மாணவர் ஒருவர் காயம்- மூன்று மாணவர்கள் பொலிசாரால் கைது

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் முக புத்தக பதிவேற்றத்தால் ஏற்பட்ட தகராறு பாடநேர இடைவேளையின் போது கைகலப்பாக மாறியதில் ஒரு மாணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக மாணவர்களிடையே சிறு சிறு கைகலப்புக்கள் இடம்பெற்று வந்த நிலையில், அது பாரிய கைகலப்பாக மாறியதுடன் பாடசாலையில் பாடநேர இடைவேளையின்போது காலை 10.50மணியளவில் மாணவர் ஒருவர் மீது ஏனைய மாணவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதில் தரம் 12இல் கல்வி கற்கும் சிவராசா சிவபேருசன் என்ற மாணவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து, மூன்று மாணவர்களை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பாடசாலையில் நிர்வாகத்தினர் திறனாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டினை பெற்றோர்கள் முன்வைத்துள்ளனர். இவர்களின் திறனற்ற செயற்பாடே இன்று மாணவர்கள் தமது கல்வி கற்கும் பாடசாலைக்கு உள்ளேயே கைகலப்பினை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது எனவும், குறித்த கைகலப்பினை ஆரம்பத்திலேயே தீர்த்து வைக்க பாடசாலை நிர்வாகம் தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைகலப்பிற்கான காரணங்களை அறிந்து தொடர்புபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கைகலப்பிற்குரிய மாணவர்களை பாடசாலையிலிருந்து விலக்கி விடுவதற்கு அதிபர் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் மேலும் கோரியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தமது விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நிலையில் குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரும் மாணவர்களுடன் அநாகரிகமாக நடந்து கொள்வதுடன் அவரும் அடிதடியில் ஈடுபடுகின்றார் எனவும் மாணவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |