Advertisement

Responsive Advertisement

மாகோவில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா வைத்தியசாலை வைத்தியர் உட்பட இருவர் பலி: சாரதி படுகாயம்

மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகளும் மரணமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயமடைந்துள்ளதாக மாகோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொன்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்டவாகனத்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய பெறாமகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
மாகோ வைத்தியசாலையில் பொலிசாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும்சடலங்களை குருணாகல் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள்தெரிவித்தன.
வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி சிவநாதன் படுகாயமடைந்து மாகோவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாகோ பொலிசார் மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments