கல்வியற் கல்லூரிகளில் 2016 ஆம் ஆண்டு தேசிய டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்து, வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்ற கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு, அவர்களின் சொந்த இடங்களில் நியமனங்களை வழங்குவது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வெளி மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கல்வியற் கல்லூரி பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு, முதலமைச்சர் தெளிவூட்டியதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு 1134 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில், கிழக்கு மாகாணத்தில் இருந்து 1573 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், 390 பட்டதாரிகளுக்கே நேர்முகப்பரீட்சைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக முதலமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு எஞ்சியுள்ள 744 வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு சாதகமான நடவடிக்கையை பிரதமர் எடுப்பார் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: