அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் மெராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக அக்கரப்பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயங்களுக்குள்ளாகியவர்கள் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிக்சைகளை பெற்ற பின் வீடு திரும்புவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தில் காயங்களுக்குள்ளாகியவர்களில் ஆண்கள் 40 பேரும், பெண்கள் 32 பேரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
0 Comments