ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் எவருக்கும் எப்போதும் அநீதி இழைக்கப்படவில்லை அவர்கள் அநீதிகளை எதிர்கொள்ளவும் இல்லை.
அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சைகளை தொடர்ந்து நடாத்துவதா அல்லது இல்லாமல் செய்வதா என்பது குறித்து எதிர்வரும் காலங்களில் சிறந்த முடிவு எட்டப்படுமெனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது பிரதான எதிர்க் கட்சி கொறடாவான அநுர குமார திஸாநாயக்கவினால் 23 (2) கட்டளைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தற்போது எழுந்து வரும் பிரச்சினைகள் குறித்தே இக் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 2015 ஆம் ஆண்டில் 31,853 விண்ணப்பதாரிகள் புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 15,000 பேருக்கே புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 15,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகின்ற இவ் எண்ணிக்கையானது 2008 ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த வருடத்தில் கடந்த அரசாங்கம் தேர்தல் செயற்பாடுகளின் போது இவ் எண்ணிக்கையானது 15,000 - 25,000 ஆக அதிகரிக்கப்படுமென வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
அத்துடன் இந்த பரீட்சை நடைமுறைகள் குறித்து மாணவர்களை விடவும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே அதிகம் சிரமம் எடுத்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நேரத்தில் மாணவர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இப் புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து நடாத்துவதா அல்லது இல்லாமல் செய்வதா என்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட குழுகூட்டம் ஒன்றினை மேற்கொண்டு சிறந்த முடிவு எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


0 Comments