இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு, நீண்டகால விஸா வழங்குவதற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய முடியும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10 ஆயிரத்து 340 பேர், மியான்மரைச் சேர்ந்த 4 ஆயிரத்து 621 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றார், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட ஒரு இலட்சத்து ஆயிரத்து 148 பேரும் உள்ளனர்.
|
அகதிகள் எனக் கூறப்படும் வெளிநாட்டினரைக் கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு 2011 டிசம்பர் 29ஆம் திகதி மத்திய அரசு ஒரு வழக்கமான செயற்பாட்டு நடை முறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறைகள் மூலம் பாதுகாப்பு சரிபார்ப்புக்குப் பின் சம்பந்தப்பட்ட அகதிகளுக்கு நீண்டகால விஸா வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரிந்துரைக்கப்பட முடியும். மத்திய உள்துறை அமைச்சகத் தால் நீண்டகால விஸா அனுமதி பெற்ற வெளிநாட்டவர் தனியார் துறையில் வேலை செய்யவோ அல்லது கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலவோ அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
|
0 Comments