தென்னிலங்கையில், கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அடை மழையினால் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததுடன் 6000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 15ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று தெரிவித்தது. திடீரென ஏற்பட்ட இந்த சீரற்ற காலநிலையினால் களுத்துறை மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், அவிசாவளையில் மூவரும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒருவருமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடைமழையினால் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கள் யாவும் ஸ்தம்பிதமடைந்ததுடன் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களினது இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அலுவலர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் உரிய நேரத்திற்கு தமது அலுவலகத்தையோ அல்லது பாடசாலையையோ சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது. வீடுகளுக்குள் நீர் உட்புகுந்ததால் உடைமைகள் சேதமாக்கப்பட்டதுடன், சிறு பிள்ளைகள் மற்றும் கைக்குழந்தை களுடன் தம்மை பாதுகாத்துக் கொள்வதற் காக பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 1209 குடும்பங்களைச் சேர்ந்த 4,820 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் சரத் லால் குமார கூறினார்.களுத்துறை மாவட்டத்தில் 15 வீடுகள் முற்றாகவும் 2 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களால் பாதிக் கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரும் களமிறங்கியிருந்தனர். 500 இராணுவ வீரர்களும் எட்டு படகுகளுடன் கடற்படையினரும் இரண்டு ஹெலி கொப்டர்களுடன் விமானப் படையினரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலையளவில் களுத்துறை பிரதேசத்தில் பெய்த மழைவீழ்ச்சியளவு படிப்படியாக குறைவடைந்து சென்றதாகவும் வெள்ள நீர் வழிந்து ஓடத் தொடங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இதேவேளை, ராகம ரயில் நிலையம் நேற்றுக் காலை நீரில் மூழ்கியதால் ரயில் சேவைகள் யாவும் தாமதமடைந் திருந்தது. இதனால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மக்கள் பாதுகாப்புக் கருதி மதுகம, கித்துல்கொட, புளத்சிங்கள, குக்குளேகங்கை ஆகிய பகுதிகளில் தற்காலிக மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டிருந்தது.
0 comments: