திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மிகவும் பிரபல்யமான கிராமம் சம்பூர். அத்தனை வளங்களையும் சம்பூரணமாகக்கொண்டதால் சம்பூர் எனும் பெயர் இடப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஒருபுறம் கடலும், மறுபுறம் மலையும், இன்னுமொருபுறம் அகன்ற வில்லுக்குளமும், மற்றொருபுறம் பரந்து விரிந்த வயல்நிலங்களும், தோட்டக் காணிகளும் நிறைந்த வளம்மிக்க இடமாகும். இங்கு உணவுக்கோ அன்றி தொழிலுக்கோ, வருமானத்திற்கோ ஒருபோதும் குறை எற்பட்டது கிடையாது. ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பமாகி 1995ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் இருந்து அவர்கள் வெளி யேறும் வரைக்கும் அரசாங்கத்தின் எந்த விதமான அபிவிருத்திகளும் அங்கு நடைபெறவில்லை.
அத்தகைய காலகட்டங்களில் மக்களின் இயல்புநிலை படிப்படியாகச் சீர்குலைந்து அல்லல்பட்ட வாழ்க்கையாகமாறி தற்போது அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு அகதிமுகாம்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இலங்கையில் மக்கள் வெளியேறிய அனைத்துப் பகுதிகளிலும் மீண்டும் மக்கள் குடியமரத்தொடங்கியிருக்கும் நிலையில் சம்பூர் பிரதேசத்தில் மட்டும் மக்கள் குடியமர அனுமதிக்கப்படவில்லை.
கௌரிவிரத காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி ஆயிரக்கணக்கான கௌரிகாப்புகள் வழங்கப்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற சம்பூர் பத்திரகாளி கோவில், பல கல்வியாளர்களையும், சமூகசேவையாளர்களையும் உருவாக்கிய சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீமுருகன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும், சமய வரலாறுகளை இப்பொழுதும் ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டிருக்கும் தோணிக்கல் என்று சொல்லப்படுகின்ற சிவபெருமானும் உமையாளும் தோணியில் வந்திறங்கிய இருவரின் காற்பாத அடையாளங்களும், புலியின் கால் அடையாளங்களும், சங்கிலியின் நீண்ட அடையாளமும் இப்போதும் அழிந்து விடாமல் இருப்பது வரலாற்றுச் சின்னங்களாகும். இதைவிட மிகமுக்கியமாக இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பல்களை சரியான திசைக்கு வழிகாட்டும் வெளிச்சவீடும் இங்குதான் இருக்கின்றது. இந்த வெளிச்சவீடானது தேன், சுண்ணாம்பு என்பன கலந்து வெள்ளைக்காரர்களால் கட்டப்பட்டதொன்றாகும். அத்தோடு ஆதாரங்களுடன் கூடிய மத்தளமலை, மாரிகாலத்தில் கடலோடு சங்கமிக்கும் வில்லுக்குளம் போன்ற தமிழர்தம் அரிய பொக்கிஷங்கள் நிறைந்த இப்பிரதேசம் இப்பொழுது மக்கள் நடமாட்டமின்றி காடுகளாக மாறிவிட்டது. இலங்கைக் கடற்படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அங்கிருந்த பெறுமதி வாய்ந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. அவ்வீடுகளின் உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டுவிட்டன. சம்பூர் மகாவித்தியாலயம் கடற்படை முகாமாகிவிட்டது. மூதூர் கிழக்கின் சம்பூரைச் சூழவுள்ள கூர்நெல்தீவு, இளக்கந்தை, கடற்கரைச்சேனை, சேனையூர், கட்டைபறிச்சான் போன்ற கிராமமக்கள் மீளவும் குடியமர அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பூரில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஜீவனோபாயத்திற்கே வழியில்லாமல் அகதி முகாம்களில் அரசாங்கத்தின் உதவிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் கடும் வெயிலிலும், மழை
வெள்ளத்தாலும் பல தடவைகள் பாதிக்கப்பட்டு தொடர் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த உண்மை நிலையானது இங்கு குறிப்பிடப்பட்டவற்றைவிட இன்னும் அதிகமானது. இன்னும் ஏராளமான விடயங்கள் இதனுள் அடங்கியிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இந்தப் பிரதேசம் இருந்தபோது இங்கிருந்த மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லமுடியாது. அப்போதுகூட சுதந்திரத்தை இழந்திருந்த மக்கள் இன்றுவரை வாழ்விடத்திலும் சுதந்திரமில்லாமல், வறியவர்களாக்கப்பட்டு அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டவர்களாக, அன்றாட உணவுக்கே வழியில்லாதவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.
காலம் காலமாக தமிழ்பேசும் தனித்தமிழர் வாழ்ந்த இந்தப் பிரதேசம் இன்று காடாக மாறிப்போய்விட்டது.
இந்நிலையில் ஜெனிவா மாநாட்டில் இந்த உண்மை வெளிப்படுத்தப்படுமா? என்பது திருகோணமலையில் வாழும் அத்தனை மக்கள் மனதிலும் எழுந்துள்ள மிகப்பெரும் கேள்வியாகும்
0 comments: