அதிபர்களுக்கான கூட்டங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுவது அவர்களின் சேவை நிபந்தனைகளை மீறும் செயலாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
கல்குடா கல்வி வலயத்தில் வாரவிடுமுறை தினங்களில் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் நடத்தப்படுவதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளதாவது,
‘மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களில் பாடசாலை கடமை நேரங்களில் நடத்தப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கான அதிபர்களுக்கான கூட்டங்களையும் பாடசாலை கடமை நேரத்துக்குப் பின்னரும் வார விடுமுறை நாட்களிலும் நடத்துவது மிவும் கண்டிக்கத்தக்கது.
ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் மூலம் வழங்கப்படுவது மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குத் தேவையான வழிகாட்டல்களேயாகும். அதனால் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் நேரடியாகவே கல்வி அபிவிருத்தியுடன் தொடர்புபடுகிறது.
விசேடமாக ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் பாடசாலை கல்விச் செயற்பாட்டின் ஒருபகுதியாகும். அதேபோன்று அதிபர்களின் கூட்டங்களும் அதிபர்களின் கடமையின் ஒரு செயற்பாடாகும்.
இவ்வாறிருக்கும்போது கடமை நேரத்திற்கு பின்பு மற்றும் வாரவிடுமுறை நாட்களில் செயலமர்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு அழைப்பதும் அதனைக் கட்டாயப்படுத்துவதும் நீதிக்குப் புறம்பான செயற்பாடாகும்.
காலை 7.30 தொடக்கம் 1.30 பின்பு மீண்டும் பிள்பகல் வேளை தொடர்நது சேவையில் ஈடுபடுத்துவது சேவை நிபந்தனைகளையும் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும்.
ஆசிரியர்கள் ஆறு மணித்தியாலங்கள் மாணவர்களுடன் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு அவர்களின் ஆளுமை விருத்திக்குத் தேவையான வழிகாட்டலிலும் ஈடுபடுபவர்களாவர். அது உளம் சார்ந்து களைப்படையும் ஒரு செயற்பாடாகும். ஆறு மணித்தியாலங்களுக்கு பின்பு களைப்படைந்துள்ள ஆசிரியர்களுக்கு ஓய்வு என்பது கட்டாயமாகும். அதேவேளை வாரஇறுதி நாட்களிலும் ஓய்வு ஏனைய அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்களும் அதிபர்களும் ஏற்றுக்கொண்டதொரு உரிமையாகும்.
பெரும்பாலான ஆசிரியர்களும் அதிபர்களும் தமது தொழில்சார்ந்த கல்வி அபிவிருத்திக்காக பல பல்கலைக் கழகங்களில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வேளை தமது அறிவு விருத்தியும் வினைத்திறன் மிக்க கல்வி செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் இச்செயலமர்வுகளில் பங்குகொள்ள முடியாமலிருப்பது சமவாய்ப்புக்கான உரிமை மீறலாக சங்கம் கருதுகிறது.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்ற செயலமர்வு நாட்டின் எப்பகுதியிலும் காணப்படாதவாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கும் மாத்திரம் இவ்வாறு கடமை நேரத்திற்கு பின்பு வார விடுமுறை தினங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர்களுக்கான சேவைக்கால செயலமர்வுகளையும் அதிபர்களுக்கான கூட்டங்களையும் உடனடியாக நிறுத்துமாறு எமது சங்கம் வேண்டுகோள்விடுகிறது.
வாரவிடுமுறை நாட்களில் கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களால் நாடாத்தப்படும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகள் அறிவு மற்றும் மனப்பான்மைகளில் மாற்றங்கள் ஏற்படுவதையும் அரச சேவையை வினைத்திறனுடையதாக நடத்திச்செல்வதற்காக அவை பொருத்தமானவையாக காணப்படவில்லை என்று இலங்கை ஆசிரயர் சங்கம் கருதுகிறது’ என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments