கல்முனை – அக்கரைப்பற்று வீதியை இடைமறித்து, நிந்தவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளபப்ட்டு கலைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நீந்தவூர் பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அக்கரைப்பற்று – கல்முனை வீதியை இடைமறித்து, நிந்தவூர் பகுதியில் நேற்றைய தினம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
விசேட அதிரடிப் படையினருக்கும், பிரதேச மக்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே, பிரதேசத்தில் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் நிந்தவூர் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றதாகவும், அவர்களில் சிலர் சிவில் உடையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் நிந்தவூரில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் இந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் தொடர்புபட்டிருக்கலாம் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இந்த மோதல் உருவாகியிருந்தது.
இந்த நிலையில் விசேட அதிரடிப் படையினர் தவறிழைத்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments