கிழக்கில் தொடர்ந்து கடுமையான வறட்சி நிலவுவதால் அங்குள்ள நீர் நிலைகள் வற்றிக்கொண்டு போவதுடன், கிணறுகளிலும் நிலத்தடி நீர் முற்றாக வற்றிப் போகின்ற நிலைமை காணப்படுகின்றது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்றாவது பெரிய குளமான உறுகாமம் குளத்தின் நீர் முற்றாக வற்றிப்போயுள்ளது.
உறுகாமம் குளத்தின் வருடாந்த நீர்க் கொள்ளவு 18,600 ஏக்கர் அடியாகும். ஒரு நெற்செய்கைப் போகத்தில் 7,200 ஏக்கர் நெற்செய்கைக்கான நீர்ப்பாசனம் இந்தக் குளத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்ததாக என நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பருவ மழை நீண்ட நாட்களாக பொய்த்துப் போயிருப்பதே இவ்வாறான கடும் வறட்சிக்குக் காரணமாகும்.
நீர் நிலைகள் வற்றிக்கொண்டு போகின்ற நிலையில், குளத்தை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், குடிநீர்த் தட்டுப்பாட்டையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இது இவ்வாறிருக்க, வழமையாக ஒக்டோபர் மாதத்தில் பெய்யத் தொடங்கும் பருவ மழை இம்முறை பொய்த்துப் போயுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
மேலும், பெரும்போக வேளாண்மை செய்கைக்கான நெல் விதைப்பு வேலைகள் இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகின்றது. ஆயினும், மழை இல்லாத காரணத்தினால் 80 சதவீதமான வயல் நிலங்களில் உழவு வேலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாதுள்ளது.
மழை பெய்தால்தான் உழவு வேலைகளை மேற்கொண்டு பின்னர் நெல் விதைப்புக்கு நிலத்தைத் தயார்படுத்த முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக பால் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கால்நடைகள் செத்து மடியும் நிலைமை காணப்படுவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் கால்நடை வளர்ப்போர் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
காடுகளில் உள்ள குளங்களும் தற்போது நீர் வற்றிக் காணப்படுவதால் காட்டு யானைகள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பதுளை வீதி நெடுஞ்சாலையிலுள்ள கிராம மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துபோய் உள்ளார்கள்.
0 Comments