மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் 29 வயதுடைய தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றில் குறித்த வழக்கு இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் குறித்த கணவரான கந்தளாய் - பேராறு பகுதியில் வசித்து வரும் மங்கு என்று அழைக்கப்படும் 28 வயதுடையவர் குறித்த கொலையை செய்தார் என எதிரிகள் சார்பில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.
குறித்த வழக்கினை அரச சட்டத்தரணி ரி.தர்ஷிகா நெறிப்படுத்தியதுடன் தண்டனை சட்டக்கோவை இலக்கம் 296 இன் கீழ் கொலை குற்றச்சாட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு இன்றைய தினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நீதிபதியாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடைமையாற்றும் சந்தர்ப்பத்தில் வழங்கிய முதல் மரண தண்டனைக்கான தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments