அக்டோபர் மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை மீள திறக்கும்போது முக்கியத்துவம் வழங்க வேண்டிய வகுப்புக்கள் தொடர்பில் தற்போது விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல். எம். டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்பு மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உரிய செயற்பாடுகளை தயார்படுத்துவதே கல்வியமைச்சின் எதிர்பார்ப்பு.பெரும்பாலும் அக்டோபர் மாத நடுப்பகுதியில் அதனை மேற்கொள்ள முடியும் என்றாலும் அதனை உறுதியாகக் கூற முடியாது. விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் அதற்காக பாடசாலைகளை தயார்படுத்துவது தொடர்பிலும் எமக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டெல்டா திரிபு வைரஸ் நாட்டில் பரவுவதற்கு முன்பதாக சாதாரண கொரோனா வைரஸ் காலத்தில் நாம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
பரீட்சைகளையும் நடத்தியுள்ளோம்.
அதற்கிணங்க எதிர்காலத்திலும் நாம் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறைந்த அளவு மாணவர்கள் உள்ள பாடசாலைகளையே ஆரம்பத்தில் திறப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
0 comments: