மட்டக்களப்பு வந்தாறுமூலை மாரியம்மன் கோயில் திருவிழாலில் கலந்துகொண்ட கோயில் தலைவர், செயலாளர், குருக்கள் உட்பட 114 பேருக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக செங்கலடி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சிவசேகரன் சிவகாந்தன் கூறுகையில் , “செங்கலடி பிரதேச சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள குறித்த ஆலயத்தின் உற்சவத்தை நடத்துவது தொடர்பாக சுகாதார துறையிடம் அனுமதியைக் கோரியபோது 15 பேருடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சவத்தை நடத்த அனுமதியளிக்கப்பட்டது.
எனினும் குறித்த அனுமதியை மீறி இறுதிநாள் உற்சவத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்க ஆலய நிர்வாகம் அனுமதியளித்ததையடுத்து அங்கு பெரும் திரளான மக்கள் உற்சவத்தில் பங்குகொண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த ஆலய நிர்வாகத்தை எச்சரித்ததுடன், ஆலயத்துக்கு சென்ற வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ளவர்களுக்கு கடந்த 3 தினங்களாக தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவர்களுக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments