Home » » மக்கள் வழங்கியுள்ள ஆணையை இராணுவ ஆட்சிக்கு கொண்டுசெல்வதன் நோக்கமென்ன ?: பாராளுமன்ற விஷேட உரையில் ரணில்

மக்கள் வழங்கியுள்ள ஆணையை இராணுவ ஆட்சிக்கு கொண்டுசெல்வதன் நோக்கமென்ன ?: பாராளுமன்ற விஷேட உரையில் ரணில்

 


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தோல்வியடைந்திருக்கின்றது. அதற்கு தொடர்ந்து செல்ல முடியாது. அத்துடன் அமரச்சரவையின் பொறுப்பை இராணுவ தளபதிக்கு வழங்கியிருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயலாகும். அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது இராணுவ ஆட்சிக்கே செல்கின்றது.


இதனை அனுமதிக்க முடியாது. அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரேவழி, சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் அவர் ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் தனவந்தர்களுக்கு வரிச்சலுகை வழங்கிவிட்டு சாதாரண மக்களுக்கு பட்டினியை கொடுத்திருக்கின்றது. கடந்த காலங்களை தற்போது கதைத்து பயன் இல்லை. 2019 இல் நாட்டின் வெளிநாட்டு கையிறுப்பு 700 டொலர் கோடி இருந்தது. தற்போது இருப்பது 400 டொலர் கோடியாகும். அதேபோன்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கடன்களை செலுத்த இடமளிக்காததால், அங்கு 300 கோடிவரை கடன் இருக்கின்றது.

மேலும் இந்த மாதம் நிறைவடையும்போது 100 கோடி டொலர் கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது. அது அல்லாமல் 200 கோடியளவில் கடன் செலுத்த இருக்கின்றது. இதனை எவ்வாறு செலுத்துவது? சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 78 கோடி கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அது இந்த வருடம் கிடைக்குமா அல்லது அடுத்த வருடம் கிடைக்குமா என தெரியாது. அடுத்ததாக சுவாப் சொப்பில் இருந்து 40 கோடி கிடைக்கின்றது. பங்களாதேஷில் இருந்து 20 கோடி கிடைக்கின்றது. இந்த தொகையால் நாங்கள் எவ்வாறு எமது வேலைத்திட்டங்களை செய்து கொள்வது?

அதனால் நாங்கள் கடந்த காலங்கள் தொடர்பில் கதைத்து பயனில்லை. மாறாக இந்த நிலைமையில் இருந்து நாங்கள் எவ்வாறு கரைசேர்வது, இதற்கு எவ்வாறு தீர்வை தேடிக்கொள்வது என்றே நாங்கள் கதைக்கவேண்டும். இந்த நிலைமை சீராக இன்னும் ஓரிரு வருடங்கள் செல்லும் எனவும் இன்னும் சிலர் 10 வருடங்கள் வரை செல்லும் என கூறுகின்றனர். ஆனால் எங்களுக்கு தேவையாக இருப்பது இதற்கானதொரு தீர்வாகும். அதற்கு ஒரு திட்டம் இருக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இதுவரை அந்த திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. என்னை பொருத்தவரையில் இதற்கான ஒரேவழி, சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகும். இதற்கு நீங்கள் இணங்கவில்லை என்றால், இதற்கான மாற்று வழியை எங்களுக்கு சொல்லவேண்டும். மாற்றுவழி இல்லாமல் புள்ளி விபரங்கள் தொடர்பில் கதைத்து எந்த பயனும் இல்லை என்றார்.

அத்துடன் நாட்டில் உரப்பிச்சினை, எரிபொருள் பிரச்சினை, கல்வி பிரச்சினை என தீர்ப்தற்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரேதடவையில் வெடித்தால் என்ன செய்வது? அரசாங்கம் மாத்திரமல்ல பாராளுமன்றமும் இல்லாமல் போகும். இதனை கருத்திற்கொண்டு, இது தொடர்பாக கலந்துரையாட எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இவ் அனைத்து பிரச்சினைக்கு காரணம் கொவிட் தொற்றாகும்.

ஆனால் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் கொவிட் செயலணி முற்றாக தோல்வியாகும். அதனால் இந்த செயலணிக்கு தொடர்ந்து முன்னுக்கு செல்லமுடியாது. அரசியமைப்பின் பிரகாரம் இதன் பொறுப்பு இருக்கவேண்டியது, அமைச்சரவைக்கும் அமைச்சரவை பொறுப்பு கூறவேண்டிய பாராளுமன்றத்துக்குமாகும். அமைச்சரவைக்கு இதன் அதிகாரத்தை ஏன் வழங்குவதில்லை. பிரதமர் இதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயற்டவேண்டும். தவறு ஏற்படும் போது எங்களுக்கு அதனை இந்த சபையில் தெரிவித்து திருத்திக்கொள்ளலாம். அதனால் கொவிட் கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏன் அமைச்சரவைக்கு கொடுப்பதில்லை என கேட்கின்றேன்.

இன்று இராணுவ அதிகாரத்தை பெற்றுக்கொண்டு நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது. இது தவறான முறையாகும். ஏன் முதலீட்டு சபை கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சர் வந்திருக்கவேண்டும் அல்லது இராஜாங்க அமைச்சர் வந்திருக்கவேண்டும். அந்தசபையில் இராணுவ தளபதி கதைக்கின்றார். இதனை கண்டதும் அங்கிருந்தவர்களும் சென்று விட்டார்கள். இது இராணுவ ஆட்சிக்கே செல்கின்றது.

இந்த பொறுப்பை அரசாங்கம் எடுத்துகொண்டு செல்வதாக இருந்தால் அதற்கு பிரச்சினை இல்லை. அதற்கான ஆணையை மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். ஆனால் அந்த மக்கள் ஆணையை இராணுவ ஆட்சிக்கு கொண்டுசெல்ல இடமளிக்கவேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம். அதனால் கொவிட் கட்டுப்படுத்தும் பொறுப்பை அமைச்சவைக்கு வழங்காமல் அரசியலமைப்பை மீறி செயற்பட்டிருப்பது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை சபைக்கு முன்வைக்கின்றேன் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |