கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வார இறுதி நாட்களில் மிகவும் கவனத்துடன் செயற்படுமாறும் , சுகாதார சட்டவிதிகளை முறையாக பின்பற்றுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை தினங்களாகும். இந்த காலப்பகுதியில் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்வதுடன் , தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேவேளை வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியை பேணல் மற்றும் கைகளை சுத்தம் செய்துக் கொள்ளல் போன்ற சுகாதார சட்டவிதிகளை கட்டயாம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளை பின்பற்றாத நபர்கள் தொடர்பில் பொலிஸார் சீருடை , சிவில் உடைகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்படும் நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 4191 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களுள் 3000 க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
0 comments: