உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காணாமல் போன சாரா ஹஸ்துன் என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இறந்து விட்டாரா? என்பதை உறுதிப்படுத்த புதிதாக மரபணு பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாசிமின் குடும்பத்தினர் உயிரிழந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டு புதைக்கப்பட்ட உடல் பகுதிகளை மீண்டும் தோண்டி எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதி ஸஹ்ரான், ஹஸ்துன் தொடர்பில் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைக்காக மாதிரிகள் பொலிஸ் அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்தே புதிதாக மரபணு பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்ட சாரா ஹஸ்துனின் மரபணு பொருந்தவில்லையென்பதால், புதைக்கப்பட்ட உடல் பகுதிகளை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் இதற்குப் பதிலாக பொலிஸார் ஏற்கனவே இருந்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக சாய்ந்தமருது தாக்குதலில் கொல்லப்பட்ட 08 பேரின் உடல் பகுதிகளின் மாதிரிகளை மீண்டும் பெற்று பரிசோதனை நடத்த நீதிமன்ற அனுமதியை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
சாரா ஹஸ்துன், தாக்குதலில் இறந்து போனாரா? அல்லது இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா? என்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. சாரா காணாமல் போயுள்ளமை குறித்து நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments