ஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, குறித்த ஆசிரியையிடம் கல்வி பயின்ற 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த 16 மாணவர்களுக்கும், PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொகவந்தலைவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் 6 பேர் மற்றும் பெற்றோர்கள் 10 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் உள்ளிட்ட 300 பேருக்கு கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம், இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, தொற்றுக்குள்ளான 16 பேரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொகவந்தலைவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments