Home » » பதவி மோகத்திற்காக நினைவுத்தூபியை உடைத்த துணைவேந்தர்

பதவி மோகத்திற்காக நினைவுத்தூபியை உடைத்த துணைவேந்தர்

 


எமது தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். இதற்கு நீதி வேண்டும் அவ்வாறான சம்பவங்களை நினைவுபடுத்துவது இவ்வாறான நினைவுத் தூபிகள்தான். ஆனால் அவ்வாறான நினைவிடத்தை உடைத்து தமிழரின் கையைப்பிடித்து தமிழரின் கண்ணிலே குத்தியிருக்கின்றார்கள்.

எனவே ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தமிழ் உணர்வை யாழ் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் அவரது பதவி உயர்வுக்காகவும். பதவி மோகத்திற்காகவும் உடைத்திருக்கின்றார்.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைத்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்டடத்தை உடைத்தது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உணர்வுகளை உடைத்ததுபோல் அமைந்தள்ளது. அக்கட்டடத்தை உடைப்பதற்கு அப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தரின் உத்தரவின்பேரில் அது உடைக்கப்பட்டதாகவும், அவர் செய்த காரியம் சரி எனவும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

இவ்விடையம் குறித்து பல்கலைக்கழகத்தின் உபவேந்தரிடம் நடந்த சம்பவம் பற்றி அறிவதற்கு மக்கள் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும், செல்ல முற்படுகையில் பாதுகாப்பு படையினரும், பொலிசாரும் தடுக்கின்றனர்.

எனவே அக்கட்டடத்தை உடைப்பதற்கு அரசாங்கமும், அரச படைகளும் கண்ணாக இருந்து அதற்கு உறுதுணையாக அந்த உபவேந்தரும் சென்றிருக்கின்றார் என்பதுதான் உண்மையான விடையமாகும். பல தமிழ் உயர் அதிகாரிகளிடம் உணர்வுகள் மறைந்து, பதவி உயர்வுகளை நோக்கித்தான் அவர்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் அனாதைகளாக்கப்பட்ட நிலையில் எமது தமிழ் அரச உயர் அதிகாரிகளும். பதவி மோகத்தின் காரணமாக தமிழ் மக்கள் பட்ட வேதனைகளை மறந்து அவர்கள் அரசாங்கத்திற்கு வால் பிடிப்பவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மவாட்டத்தில் ஒரு சில அபிவிருத்தி வந்தால் அரச கட்சியின் அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளேயே சண்டைபோட ஆரம்பித்து விடுகின்றார்கள். அதுபோன்றுதான் யாழ்மாவட்டத்திலும் அபிவிருத்தி நடைபெற்றாலும் அரச கட்சியினர் தாங்கள்தான் கொண்டு வந்தோம் என தங்களுக்குள்ளேயே சண்டைபிடிக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்திலிருக்கின்ற அரசாங்கத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவரோ, அல்லது அமைச்சரோ யாழ் பல்கலைக் கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை தாங்கள்தான் உடைப்பதற்கு உத்தரவிட்டது என்பதை அவர்கள் கூறவில்லை. அபிவிருத்திக்குக் கூக்குரல் போடுகின்ற நீங்கள் ஏன் இதனைப் பொறுப்பேற்கத் தவறுகின்றீர்கள்? அதனையும் பகிரங்கமாகச் சொல்லுங்கள், உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பால்தான் இந்த அரசாங்கம் இதனைச் செய்திருக்கின்றது.

இல்லையேல் உண்மையான தமிழ் உணர்வு படைத்தவர்களாக இருந்தால் அபிவிருத்திக்குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அந்த உப வேந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த நினைவிடத்தைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அதனைச் செய்யமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தின் பக்கம் இருப்பவர்கள்.

தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு துன்பியல் சம்பவங்கள் தொடர்பான ஒரு நினைவுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறுதான் ஜேவிபியினர் அவர்களது வீரர்கள் மரணித்த நினைவுத் தூபிகளை உருவாக்கியிருக்கின்றனர். ஆனால் அது உடைக்கப்படவில்லை.

எமது தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். இதற்கு நீதி வேண்டும் அவ்வாறான சம்பவங்ளை நினைவுபடுத்துவது இவ்வாறான நினைவுத் தூபிகள்தான்.

ஆனால் அவ்வாறான நினைவிடத்தை உடைத்து தமிழரின் கையைப்பிடித்து தமிழரின் கண்ணிலே குத்தியிருக்கின்றார்கள்.

எனவே ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தமிழ் உணர்வை யாழ் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் அவரது பதவி உயர்வுக்காகவும். பதவி மோகத்திற்காகவும் உடைத்திருக்கின்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |