Advertisement

Responsive Advertisement

அம்பாறை- வீரமுனை பகுதியில் மதுபோதையில் வாளால் வெட்டப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!


 அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கடந்த 26 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி படுகாயமடையச் செய்து தப்பி சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நபர் உயிராபத்துடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வீரமுனை பிரதான வீதியை சேர்ந்த 30 வயதுடைய கணேசமூர்த்தி ரஜிகரன்(அசோக்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில்,கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலில், குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில், விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தப்பிச்சென்ற சந்தேகநபர்களினால் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை விசாரணைக்குழுவினர் மீட்டுள்ளதுடன், ஏனைய தப்பி சென்ற சந்தேகநபர்களை தேடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.

மதுபோதையில் இளைஞர்கள் மேற்கொண்ட இந்த வாள்வெட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments