(வி.ரி.சகாதேவராஜா)கல்முனையில் தினம் தினம் கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது. எனவே தொற்று கூடுதலாக இனங்காணப்பட்ட பகுதிகள் அடங்கலாக கல்முனை மாநகரை முடக்கி மக்களைக் காப்பாற்றுங்கள்.
இவ்வாறான கோரிக்கையை கல்முனை விகாரையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களிடம் விடுத்துள்ளனர்.
குறித்தகூட்டம் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர எல்லைக்குள் நேற்றுவரை கொரோனா எண்ணிக்கை 188 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 144பேரும் சாய்ந்தமருதில் 33பேரும் கல்முனை வடக்கில் 11பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையின் பல பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் சுகாதார நெறிப்படி கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும் பொதுஅமைப்புகளின் இக்கோரிக்கையை எழுத்துமூலம் பெற்று கல்முனை மாநகரசபை மேயர் மற்றும் சுகாதாசேவைப்பணிப்பாளரையும் சந்தித்து முடிவெடுப்பது என்று கூட்டமுடிவில் தீர்மானிக்கப்பட்டது.
நேற்று அவர்களைச் சந்திக்க உறுப்பினர் ராஜன் தலைமையிலான குழுவினர் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.
0 Comments