Advertisement

Responsive Advertisement

சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ள விக்னேஸ்வரனின் உரை!

 ஸ்ரீலங்காவின்புதிய நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய பிரமாணம் மேற்கொண்டு சபாநாயகர் தெரிவு இடம்பெற்ற பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது என தமிழ்த் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பண்டாரவன்னியனின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது அதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள் நீங்கள் உங்களுடைய வழியில் செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 6 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தான் சிங்கள மொழி உருவாகியது அத்தோடு அவர்களுடைய சிங்கள வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் கூட பாலி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது. தமிழருக்கான வரலாறு தமிழ் மொழியில் எழுதப்பட்டும் அது பின்னர் வேறு மொழிகளில் மாற்றி அமைக்கலாம்.

தமிழ் மொழி தொன்மையான மொழி லட்சக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது. செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உலகத்திலே பல நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது மூத்த குடிமக்களினுடைய மொழி என உரையாற்றியதும் கூக்குரலிடுவதும் நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும் கீழ்த்தரமான ஜனநாயக முறைக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்.

நீங்கள் நீக்குவதோ வைத்திருப்பதோ எதுவாக இருந்தாலும் எமது மூத்த மொழி மூத்த மொழியாகவே தான் இருக்கும் அவ்வாறு இதை நீக்கினால் நாங்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் அதேபோன்று கொமென் வெல்த் நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments