நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் சேவையை பிரதானமாகக் கொள்ள வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பல வருடங்களுக்கு பின்னர், இன்று இலங்கையில் முழுமையானதொரு நாடாளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தோம். இவை அனைத்தும் எமக்கான ஒரு பாடமாகத்தான் கருதுகிறோம்.
இலங்கையில் தற்போது காணப்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்த நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக புதிய அரசியலமைப்பொன்று இன்று நாட்டுக்கு தேவைப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
ஒரு நாட்டில் இதயமாகக் கருதப்படும் நாடாளுமன்றில், எதிர்காலத்தில் எந்தவொரு தவறும் இருந்துவிடக்கூடாது என்றுதான் நாம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளோம். மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதியாக அனைவரும் திகழ வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments