கல்முனையில் கற்றறிந்தோர்அமையத்தின் சந்திப்பில் கருணா அம்மான் உறுதி!
(காரைதீவு நிருபர் சகா)
எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள வேலைத்திட்டங்கள் அனைத்தும் தெரிவுசெய்யப்படவிருக்கும் அபிவிருத்திக்குழு ஊடாக முன்னுரிமை அடிப்படையில் கட்டாயம் நிறைவேற்றப்படும். ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.இவ்வாறு கல்முனையில் இடம்பெற்ற கற்றறிந்தோர் அமையத்திடம் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கூறினார்.
அம்பாறை மாவட்ட ஆக்கத்திற்கும் அபிவிருத்திக்குமான கற்றறிந்தோர் அமையத்தின் முதல் சந்திப்பு வியாழன் (16) கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதியில் நடைபெற்றது.
அங்கு கற்றறிந்தோரின் கருத்துக்களை உள்வாங்கியபிற்பாடு கருணா அம்மான் மேலும் தெரிவிக்கையில்:
நான் ஒன்றுமே செய்யாமல் அம்பாறையில் போட்டியிடவரவில்லை. மட்டு.மாவட்டத்தில் கோடிக்கணக்கில் பல வேலைத்திட்டங்களை செய்துள்ளேன். ஏன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு ஒரேநாளில் 100 சிற்றூழியர்களை நியமித்திருந்தேன்.
கற்றிந்தோர் இவ்வளவுதொகையானோர் இணைந்து எனக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளமையை பார்க்கின்றபோது மிகவும் சந்தோசமாகவிருக்கிறது. இன்றே எனக்கு வெற்றிக்கனி தெரிகிறது.
கல்முனைப் பிராந்தியத்தில் மட்டும் 2000 இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப்போன்று எனக்கு ஏமாற்றத்தெரியாது.
நான் தெரிவுசெய்யப்படுவது தபால்வாக்களிப்பில் தெரிந்தது. எனவே எனது வெற்றியின் பின்னர் முதலில் மாவட்ட அபிவிருத்திக்குழுவை சகல பகுதிகளிலிருந்தும் தெரிந்து அதனூடாகவே அத்தனை வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பேன். என்றார்.
மாவட்டத்தின் சகல பாகங்களிலுமிருந்தும் இரவென்றும்பாராது கலந்துகொண்ட புத்திஜீவிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை எடுத்துக்கூறினர்.
0 comments: