நீங்கள் எந்தக் கட்சித் தலைவனாகவும் இருக்கலாம் கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பது எங்களின் கடமை ; தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் நாஹூர் ஆரிப்.
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் காரணமாக கோவிட் 19 தொற்றின் அச்சங்கள் இல்லாமல் வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் செய்துவரும் மக்கள் சந்திப்புக்கள் தொடர்பில் கல்முனை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் நாஹூர் ஆரிப் அவர்கள் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளம் ஊடாக சகல அரசியல்வாதிகளுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அன்பார்ந்த அரசியல்வாதிகளே! என ஆரம்பிக்கும் அவரது வேண்டுகோளில்,
அரசியல் செய்வது உங்களின் உரிமை! மக்களைப் பாதுகாப்பது எங்களின் கடமை! உங்களுடைய அரசியலின் மூலதனம் மக்கள்! அதற்காக, மக்களை குறிப்பாக இளைஞர்களை பலிக்கடாவாக்காதீர்கள்! நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதியுங்கள்!
கூட்டங்களை நடத்துங்கள் ஆனால், சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் பாவியுங்கள். நீங்கள் உங்களுக்கிடையில் பிரிந்து கிடக்கிறீர்கள். அதனால், ஆளையாள் காட்டிக்கொடுக்கிறீர்கள். தடயங்களையும் முட்டாள்தனமாக நீங்களே விதைக்கிறீர்கள். எங்களின் கடமையை கடினமாக்குகிறீர்கள்.
நீங்கள் எந்தக் கட்சித் தலைவனாகவும் இருக்கலாம்! எந்த அரசியல் பிஸ்தாவாகவும் இருக்கலாம். கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பது எங்களின் கடமையாகும்.அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சுகாதார திணைக்களத்தின் பொறுப்பாகும். என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments: