அம்பாறை - திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளிப் பிரதேசத்தில் இருந்து உட்செல்லவும் அங்கிருந்து வெளிப் பிரதேசத்துக்குச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
|
திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆர். டபிள்யூ. கமல்ராஜ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச சுகாதாரப் பணிப்பாளர், பொதுச் சுகாதார உத்தியோகத்தர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரின் பங்கேற்றலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேசத்தில் நோய்த் தொற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது சமூக இடைவெளிளைப் பேணுவதற்காக திருக்கோவில் பிரதேசத்தின் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விநாயகபுரம், தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மைதானம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக சந்தைகளில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களான பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், போன்றவை தவிர ஏனைய கடைகள் திறப்பதற்கும் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
|
0 Comments