கொரோனா நோய் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை காரணமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பு ,கல்முனைகுடி ,சாய்ந்தமருது ,மாளிகைக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதுமாத்திரமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து பொருட்களை கொண்டுவர முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மரக்கறி போன்றவை ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் பழுதடைவதால் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கூறுகின்றனர். எதிர்வரும் நாட்கள் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் என்பன ஆரம்பமாக உள்ள நிலையில் கடந்த காலத்தை போன்று இம்முறை வியாபாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியிருப்பதனால் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கூட தங்களது வியாபார நிலையங்களில் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இருந்தபோதிலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட மருதமுனை கல்முனை, பாண்டிருப்பு , சாய்ந்தமருது ,நற்பிட்டிமுனை பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில வியாபாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இருந்தபோதிலும் கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து பொருட்களை கொண்டுவருவதற்கான வாகன ஏற்று கூலி சடுதியாக கூடியுள்ள காரணத்தினால் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்வதினால் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவுள்ளது என தெரிவித்தனர்.
0 comments: