கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்த, நிபுணர்கள் குழுவை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாடு நெருக்கடிகளை சந்தித்தது. எனினும் சீனா தற்போது அதிலிருந்து மீண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
எனினும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலக நாடுகளை உலுக்கிவருகிறது. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா.
தற்போதுவரை அ மெரிக்காவில் 7 லட் சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நியூயோர்க் நகரில் மட்டும் 2 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,600 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்பில் ஆரம்பித்திலிருந்தே சீனா மீதான தனது அதிருப்தியையும், சந்தேகத்தையும் அமெரிக்க அரசாங்கம் முன்வைத்துக் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி உலக சுகாதார அமைப்பையும் கடுமையாக சாடினார் அமெரிக்க அதிபர்.
அதன் அடுத்தகட்டமாக உலக சுகாதார அமைப்புக்கு கொடுக்கும் நிதியையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கிடையில் சீனாவில் கொரோனா இயற்கையாக தோன்றவில்லை என்றும், அது ஆய்வுகூடத்திலிருந்து பரவியதாக செய்திகள் வெளியாக, கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார் அதிபர் ட்ரம்ப்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் “கொரோனா வைரஸை தெரிந்தே சீனா பரப்பி இருந்தாலும் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இதுவொருபுறமிருக்க, கொரோனா வைரஸ் வுகான் நகரில் இருந்து பரவியதா என்பது குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறினார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அதிபர்,
கடந்த டிசம்பர் மாதம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியது முதலே சீனா விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட மற்ற பல விஷயங்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து சீனா மீது எனக்கு மகிழ்ச்சி இல்லை.
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது, என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப விரும்புகிறேன். இதற்கு சீனா என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது முக்கியம். பிளேக் தொற்று போல கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
சீனாவுக்குள் சென்று விசாரணை நடத்துவது குறித்து நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களுடன் (சீனா) நாங்கள் பேசினோம். நாங்கள் சீனாவுக்குள் செல்ல வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகிறோம். ஆனால், எங்களை அவர்கள் அழைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
0 comments: