கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் 19 பேர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், 19 பேருக்கும் வரும் ஜூலை மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 24 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் பலரும் மரக்கறி உள்ளிட்ட விவசாயப் பொருள்களை விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் பிரதேச செயலரிடம் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சிலர் அனுமதி பெறாமல் ஊரடங்கு வேளையில் வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் 10 இற்கும் மேற்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாடு செல்ல கொழும்புக்கு புறப்படுவதாகத் தெரிவித்த பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 19 பேரும் இன்று பிற்பகல் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், வரும் ஜூலை மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுமாறு தவணையும் வழங்கப்பட்டது.
0 comments: