Home » » சீனாவின் வுகானிலிருந்து அமெரிக்காவுக்குப் பறந்த விமானங்கள்! கொரோனா பரவலின் பின்னணியில் நிகழ்ந்தது என்ன?

சீனாவின் வுகானிலிருந்து அமெரிக்காவுக்குப் பறந்த விமானங்கள்! கொரோனா பரவலின் பின்னணியில் நிகழ்ந்தது என்ன?

கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுகானில் தற்போது கொரோனா தொற்று குறைவடைந்து அந்நாடு முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகள் பல முடக்கப்பட்டிருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகள் பலவும் செயலிழந்து போயிருக்கின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நடந்தது என்ன?
அமெரிக்காவில் ஏன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காகிக் கொண்டிருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்” ஆய்வு செய்து விரிவான கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது.
குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சீனாவின் ஹூபே மாகணம், வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உலகிற்கு சீனா எச்சரிக்கை செய்த பின், அங்கிருந்து 4.30 லட்சம் மக்கள் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம் வந்துள்ளதுதான் அமெரிக்காவுக்கு பாதிப்பு தீவிரமானதற்கு முக்கியக்காரணமாகும்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் பிறப்பிடமாக இருந்த வுகான் நகரிலிருந்து மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம்வந்துள்ளனர்
சீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் முக்கியமான 17 நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன, இந்த விமானங்கள் மூலம்தான் மக்கள் அமெரிக்காவுக்குள் வந்துள்ளார்கள்.
கொரோனாவின் வீரியத்தன்மை அறிந்து அதிபர் ட்ரம்ப் கடுமையான விதிமுறைகளை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தும் முன்பே சீனாவிலிருந்து ஏறக்குறைய 4 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.
இந்த 4 லட்சம் மக்கள் சீனாவிலிருந்து அமெரி்க்காவின் 17 நகரங்களில் கால்பதிக்கும் போது அமெரிக்க அரசு விமானநிலையங்களில் கொரோனா குறித்த பரிசோதனைகளை தீவிரப்படுத்தவில்லை, மருத்துவ சோதனைகளும் போதுமான அளவில்இல்லை. இவையெல்லாம் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் உக்கிரமானதற்கு முக்கியமான காரணங்களாகும்.
அதிலும் ஜனவரி மாதம் 15-ம்திகதிவரை சீனா கொரோனா வைரஸின் தீவிரம் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. இதன் காரணமாக சீனாவிலிருந்து ஏராளமானவர்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு எந்தவிதமான தடையும் இன்றி சென்றுள்ளார்கள்.
கொரோனா வைரஸின் ஆபத்தை அறிந்தபின் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தான் அமெரிக்க அரசு விமான நிலையங்களில் பரிசோதனயை தீவிரப்படுத்தத் தொடங்கியது.
அதுவும் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்ஸ்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் மட்டுமே வுகான் நகரில் இருந்து பயணிகள் தீவிரமான சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர்.
ஆனால், இந்த சோதனை தொடங்கப்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் 4 லட்சம் பேர் சீனாவிலிருந்து நுழைந்துவி்ட்டார்கள். இ்ந்த புள்ளிவிவரங்களை சீனாவில் உள்ள விமான புள்ளிவிவர நிறுவனமான வாரிபிளைட் தெரிவித்துள்ளது.
இதில் எத்தனை பயணிகள் கொரோனா வைரஸ் பாதிப்போடு அமெரிக்காவுக்குள் சென்றார்கள், வைரஸ் பாதிப்பு இல்லாமல் வந்தார்கள் என்ற கணக்கு இதுவரை இல்லை அது மர்மமாகவே இருக்கிறது.
அமெரிக்காவுக்குள் நுழைந்த 4.30 லட்சம் பேரில் அமெரிக்க மக்கள் மட்டுமல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இருந்துள்ளார்கள். இவர்கள் லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிான்சி்ஸ்கோ, நியூயார்க், சிகாகோ, சீட்டல், நிவார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக சீனாவிலிருந்து பயணித்துள்ளார்கள்.
கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்க விதித்தபோதிலும் கூட கடந்தவாரம் வரை சீனாவிலிருந்து விமானங்கள் அமெரிக்காவுக்கு வந்தவாறுதான் இருந்தன. குறிப்பாக பெய்ஜிங்கிலிருந்து லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகர்களுக்கு வந்தன. 250-க்கம் மேற்பட்ட விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கூறியபடி, அமெரிக்க அரசு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை தாமதமாக செயல்படுத்தியதுதான் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
நியூயார்க்டைம்ஸ் நாளேடு நடத்திய ஆய்வின்படி, விமானப் புள்ளிவிவரங்கள், பயணிகள் வருகை ஆகியவற்றைப் பார்க்கையில் போக்குவரத்து கெடுபிடிகள்தான், விதிமுறைகளை அமெரிக்கா தாமதமாக நடைமுறைப்படுத்தியதுதான் அங்கு கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவ முக்கியக்காரணமாகும்.
எந்தவிதமான அறிகுறியும் இன்றி 25 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளார்கள் என்று சுகாதாரத்துறையினர் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் முதன்முதலில் ஜனவரி 20-ம் திகதி வாஷிங்டன் நகரில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல்நபர் அடையாளம் காணப்பட்டார். அதன்பின் பலவாரங்கள் அடையாளம் தெரியாத வகையில்,கண்டுபிடிக்க முடியாத வகையில் கொரோனா வைரஸ் வாரக்கணக்கில் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது.
அமெரிக்காவுக்கு முதன்முதலாக இந்த கொரோனா வைரஸை யார் கொண்டுவந்தது என்று இதுவரை எந்த மருத்துவ அதிகாரியாலும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது.
அமெரிக்க அரசாங்கம் கெடுபிடிகள், சோதனைகளை விமானநிலையங்களில் கொண்டு வருவதற்குமுன் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு 3.81 லட்சம் பயணிகள் வந்துவிட்டார்கள். பெரும்பாலான விமானங்கள் சீனாவிலிருந்து இயக்கப்பட்ட சீன விமானங்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 311,637 லட்சத்தை தாண்டிவிட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 8,454 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் இரண்டு லட்சம் மக்களை இழக்கப் போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |